Close

Aadhar special Camp – Hills villagers

Publish Date : 05/05/2025
.

செ.வெ.எண்:-04/2025

நாள்:-02.05.2025

திண்டுக்கல் மாவட்டம்

சிறப்பு சேவைகள் முகாம்

கொடைக்கானல் வட்டம், வெள்ளகவி ஊராட்சி, சின்னுார் மற்றும் பெரியூர் மலைக்கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கு ஆதார் அட்டை மற்றும் இதர சான்றுகள் பெறுவதற்காக இணையதள பதிவுகள் மேற்கொள்வதற்கான சிறப்பு முகாம் வத்தலகுண்டு சமுதாயக் கூடத்தில் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வட்டம், வெள்ளகவி ஊராட்சிக்குட்பட்ட சின்னுார் மற்றும் பெரியூர் மலைக்கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கு ஆதார் அட்டை மற்றும் இதர சான்றுகள் பெறுவதற்காக இணையதள பதிவுகள் மேற்கொள்வதற்கான சிறப்பு முகாம் வத்தலகுண்டு சமுதாயக் கூடத்தில் இன்று(02.05.2025) நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப் பகுதியில் வெள்ளக்கவி ஊராட்சி உள்ளது. கொடைக்கானலில் இருந்து 5 கி.மீட்டர் துாரத்தில் உள்ள வட்டக்கானல் வரை சாலை வசதி உள்ளது. அதன்பின்னர் வட்டக்கானலில் இருந்து மலைப்பகுதியில் வெள்ளக்கவி ஊராட்சி உள்ளது. இங்கு சுமார் 100 குடும்பங்கள் 400 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு மாலைப்பாதை வழியாக 8 கி.மீட்டர் துாரம் நடந்துதான் செல்ல வேண்டும். அதேபோல், வெள்ளகவி ஊராட்சிக்குட்பட்ட சின்னூர் மற்றும் பெரியூர் உட்கடை மலைக்கிராமங்களில் வசிக்கும் பழங்குடியின மக்களும் சுமார் 7 கி.மீட்டர் துாரம் மலைப்பாதைகளில் நடந்துதான் சென்று வருகின்றனர்.

இந்தக் கிராம மக்களுக்குத் தேவையான குடிநீர், மின்சார வசதி, சாலை வசதி போன்ற அடிப்படை வசதிகளை முழுமையாக கிடைக்கச் செய்வது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் கடந்த 20.04.2025 அன்று நேரடியாக வெள்ளகவி கிராமத்திற்குச் சென்று கள ஆய்வு மேற்கொண்டார். ஆய்வுக்குப்பின்னர், வெள்ளகவி கிராம மக்களுக்குத் தேவையான ஆதார் அட்டை, குடும்ப அட்டைகள், சான்றிதழ்கள் உள்ளிட்ட சேவைகளுக்கான இணையவழி பதிவுகள் மேற்கொள்ள உரிய வசதிகளை ஏற்படுத்திட சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

அதன்படி, வெள்ளகவி ஊராட்சிக்குட்பட்ட சின்னூர் மற்றும் பெரியூர் உட்கடை கிராமங்களில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு ஆதார் மற்றும் இதர சான்றுகள் வழங்குவது தொடர்பாக இணையதள பதிவுகள் மேற்கொள்வதற்கான சிறப்பு முகாம் வத்தலகுண்டு பேரூராட்சி அலுவலகம் அருகில் உள்ள சமுதாயக் கூடத்தில் இன்று(02.05.2025) நடைபெற்றது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், அரசின் திட்டங்கள் கடைக்கோடி பகுதியில் வசிக்கும் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் கிடைத்திட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளார்கள். அதன்படி, அரசின் திட்டங்களை அனைத்துத் தரப்பு மக்களுக்கும் கொண்டு சேர்ப்பதில் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வட்டம், வெள்ளகவி கிராமத்திற்கு, இல்லம் தேடி ரேஷன் பொருள் திட்டத்தின் கீழ், கடந்த மாதம் சுமார் 100 குடும்ப அட்டைதாரர்களுக்கான குடிமைப்பொருட்கள் குதிரைகள் மூலம் சுமந்து சுமார் 8 கி.மீட்டர் துாரம் மலைப்பாதைகளில் இந்த கிராமத்திற்கே கொண்டு சென்று வழங்கப்பட்டது. அதேபோல், வெள்ளகவி ஊராட்சிக்குட்பட்ட சின்னுார் மற்றும் பெரியூர் ஆகிய மலைக்கிராமங்களில் வசிக்கும் 110 குடும்ப அட்டைதாரர்களுக்கான குடிமைப்பொருட்கள் அவர்கள் வசிக்கும் பகுதிக்கு குதிரைகள் மூலம் கொண்டு செல்லப்பட்டு வழங்கப்பட்டன.

மேலும், சின்னுார் மற்றும் பெரியூர் கிராமங்கள் தேனி மாவட்ட எல்லை பகுதியை ஒட்டி அமைந்துள்ளன. அந்த கிராமங்களைச் சேர்ந்த பழங்குடியின மக்களுக்கு ஆதார் அட்டை மற்றும் இதர சான்றுகள் பெறுவதற்கான இணையதள பதிவுகள் மேற்கொள்ள சிறப்பு முகாம் நடத்த திட்டமிடப்பட்டு வத்தலகுண்டு பேரூராட்சி அலுவலகம் அருகில் உள்ள சமுதாயக் கூடத்தில் இன்றையதினம் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. சின்னூர் கிராமத்தில் இணையதள வசதி சரியாக வராததால் வத்தலகுண்டு பகுதியில் முகாம் நடத்தப்பட்டது.

இதற்காக சின்னுார் மற்றும் பெரியூர் கிராம மக்களுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே முகாம் தொடர்பாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் பெரியகுளத்திலிருந்து வாகனங்களில் வத்தலகுண்டு முகாம் பகுதிக்கு இன்று அழைத்து வரப்பட்டு, அவர்களின் கோரிக்கைகள் தொடர்பாக இணையதள பதிவுகள் மேற்கொள்ளப்பட்டன. அவர்களுக்கு காலை மற்றும் மாலையில் உணவு, தேநீர் சிற்றுண்டி வழங்கப்பட்டது.

இன்றைய முகாமில், ஆதார் அட்டை கோரி 28 நபர்கள், குடும்ப அட்டை கோரி 12 நபர்கள், வாக்காளர் அடையாள அட்டை கோரி 9 நபர்கள் மற்றும் நகல் கோரி 2 நபர்கள், சாதிச்சான்றிதழ் கோரி 4 நபர்கள், பழங்குடியினர் நலவாரிய அடையாள அட்டை கோரி ஒரு நபர், பிறப்பு சான்றிதழ் கோரி 10 நபர்கள், மருத்துவக் காப்பீட்டு அட்டை கோரி ஒரு நபர், மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகை கோரி ஒரு நபர் என மொத்தம் 68 நபர்களின் கோரிக்கைகளுக்கான இணையதள பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த விண்ணப்பங்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது, என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

இந்த முகாம் மூலம் பயனடைந்த பயனாளிகள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்தனர்.

இதுகுறித்து சின்னுார் கிராமத்தைச் சேர்ந்த திருமதி கௌசல்யா என்பவர் தெரிவித்ததாவது:-

நாங்கள் வெள்ளகவி ஊராட்சிக்குட்பட்ட சின்னுார் மலைக்கிராமத்தில் வசித்து வருகிறோம். எங்கள் கிராமத்திற்கு மலைப்பாதை வழியாக சுமார் 7 கி.மீட்டர் துாரம் நடந்துதான் செல்ல வேண்டும். இணையதள வசதிகள் இல்லை. மேலும் அரசின் திட்டங்களை பெற விண்ணப்பிக்க வேண்டுமெனில் நாங்கள் தேனி மாவட்டம், பெரியகுளம் அல்லது திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதிக்கு சென்று இணைய வழியாக பதிவுகள் மேற்கொள்ள வேண்டும். எந்தவொரு தேவை என்றாலும் நாங்கள் சிரமப்பட்டுதான் நிறைவேற்றிக்கொள்ள வேண்டிய நிலை உள்ளது.

தற்போது, மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்கள், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் மற்றும் பழனி சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கையின் காரணமாக எங்கள் கிராமத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கான குடிமைப்பொருட்கள் “இல்லம் தேடி ரேஷன்“ என்ற திட்டத்தில் கடந்த மாதம் எங்கள் கிராமத்திற்கே கொண்டு வந்து வழங்கப்பட்டது.

தற்போது, ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஜாதிச்சான்று, பிறப்புச் சான்று போன்றவற்றை பெறுவதற்காக இணைய வழியாக பதிவுகள் மேற்கொள்ள அரசு சார்பில் சிறப்பு முகாம் இன்று(02.05.2025) வத்தலகுண்டு சமுதாயக்கூடத்தில் நடத்தப்பட்டது. இந்த முகாம் தொடர்பாக 2 நாட்களுக்கு முன்னரே எங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து எங்களை வாகனங்களில் இன்று அழைத்து வந்து, எங்கள் கோரிக்கைகள் தொடர்பான பதிவுகள் மேற்கொண்டனர். காலை மற்றும் மதியம் உணவு வழங்கினர்.

எங்களைப்போன்ற கடைக்கோடி கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களின் தேவைகளை நிறைவேற்றிட இதுபோன்ற நடவடிக்கைள் மேற்கொண்டு வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம், என தெரிவித்தார்.

இதுகுறித்து சின்னுார் கிராமத்தைச் சேர்ந்த திரு.பழனிமுருகன் என்பவர் தெரிவித்ததாவது:-

எங்கள் ஊர் மலைக்கிராமம். நாங்கள் அரசின் திட்டங்கள் மூலம் பயனடைய வேண்டுமெனில் டவுனுக்கு வந்து பதிவுகளை மேற்கொள்ள வேண்டும். அதனால் பலர் அரசின் திட்டங்கள், சான்றிதழ்களை பெற முடியாமல் இருந்துவிடுவர். இப்போது இந்த சிறப்பு முகாம் நடத்தப்பட்டதால் எங்கள் கிராம மக்கள் பலர் தங்கள் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.

கடைக்கோடி கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களின் தேவைகளை நிறைவேற்றிட இதுபோன்ற நடவடிக்கைள் மேற்கொண்டு வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம், என தெரிவித்தார்.

இந்த முகாமில், நிலக்கோட்டை வட்டாட்சியர் திருமதி விஜயலட்சுமி, பழனி ஆதிதிராவிடர் நல தனி வட்டாட்சியர் திரு.குளிவேல், கொடைக்கானல் மண்டல துணை வட்டாட்சியர் திரு.ஜெயராஜ் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.

.

.

.

.

.

.