Agriculture Department – Notification
செ.வெ.எண்:-06/2025
நாள்:-03.03.2025
திண்டுக்கல் மாவட்டம்
விவசாயிகள் நில உடைமை விவரங்களை அருகில் உள்ள பொது சேவை மையங்களில் எவ்வித கட்டணமும் இன்றி 31.03.2025-ஆம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ளலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்
விவசாயிகள் அரசின் பல்வேறு திட்டப்பணிகளைப் பெறுவதற்கு தங்களது நில உடைமை விவரங்கள், பயிர் சாகுபடி அறிக்கை போன்ற தொடர்புடைய ஆவணங்களை ஒவ்வொரு முறையும் சமர்ப்பிக்க வேண்டியுள்ளது. இதில் ஏற்படும் காலதாமதத்தினை தவிர்க்கும் வகையிலும் அரசின் திட்டங்களில் விவசாயிகள் குறித்த நேரத்தில் பயன்பெற ஏதுவாகவும், அனைத்து விவரங்களையும் மின்னணுமுறையில் சேகரித்திட தமிழ்நாட்டின் வேளாண் அடுக்குத் திட்டம் (Agristack) செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தற்போது, விவசாயிகளின் பதிவு விவரங்களுடன் ஆதார் எண், கைபேசி எண், நில உடமை விவரங்களையும் விடுபாடின்றி இணைக்கும் பணி சம்பந்தப்பட்ட வருவாய் கிராமத்தில் நடைபெற்று வருகிறது.
மேலும், விவசாயிகள் பொது சேவை மையம்(CSCs) சென்று நில உடமை விவரங்களை இணைக்கும் பணியை மேற்கொள்ள இயலும், இதன் மூலம் ஆதார் எண் போன்ற தனித்துவமான தேசிய அளவிலான அடையாள எண் ஒவ்வொரு விவசாயிக்கும் வழங்கப்படும்.
2025-26ஆம் நிதியாண்டு முதல், பிரதம மந்திரி கௌரவ நிதித்திட்டம் (PM KISSAN) பயிர் காப்பீட்டுத் திட்டம் (PMFBY) போன்ற ஒன்றிய மற்றும் மாநில அரசின் திட்டங்களில் விவசாயிகள் எளிதில் பயன்பெற தேசிய அளவிலான தனித்துவ அடையாள எண் மிகவும் அவசியம். எனவே, விவசாயிகள் தங்களது கிராமங்களில் வேளாண்மை – உழவர் நலத்துறை அலுவலர்களால் நடத்தப்படும் சிறப்பு முகாம்கள், அருகில் உள்ள பொது சேவை மையங்களுக்கு நேரடியாக சென்று தங்கள் நில உடைமை விவரங்கள், ஆதார் எண், கைபேசி எண் ஆகிய விவரங்களை அளித்து எவ்வித கட்டணமும் இன்றி 31.03.2025-ஆம் தேதிக்குள் இத்திட்டத்தில் பதிவு செய்து விவசாயிகள் பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவிதுள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.