Close

Animal Husbandry – camp-Chettinayakanpatty

Publish Date : 07/11/2023
.

செ.வெ.எண்:-17/2023

நாள்:-06.11.2023

திண்டுக்கல் மாவட்டம்

செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சி, பெருமாள்கோவில்பட்டி கிராமத்தில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.

திண்டுக்கல் மாவட்டம், செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சி, பெருமாள்கோவில்பட்டி கிராமத்தில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் இன்று(06.11.2023) தொடங்கி வைத்து, சிறந்த கன்றுகளுக்கு பரிசு மற்றும் பால் உற்பத்தியாளர்களுக்கு கறவை உபகரணங்களை வழங்கினார்.

இம்முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-

திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தம் 2,91,700 கால்நடைகள் உள்ளன. ஏராளமானோர் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் 2023-24-ஆம் ஆண்டில் ஒரு ஊராட்சி ஒன்றியத்திற்கு தலா 20 முகாம்கள் வீதம் 14 ஊராட்சி ஒன்றியங்களில் மொத்தம் 280 சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்கள், கால்நடை பராமரிப்புத்துறை மூலம் நடத்த திட்டமிடப்பட்டு, ஒவ்வொரு பகுதியாக முகாம்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.

அதன்படி இன்றையதினம் பெருமாள்கோவில்பட்டி கிராமத்தில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடத்தப்படுகிறது. இந்த முகாம்களில் நோய்வாய்ப்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சையளித்தல், குடற்புழு நீக்கம் செய்தல், நோய்களுக்கு எதிரான தடுப்பூசி போடுதல், ஆண்மை நீக்கம், செயற்கைமுறை கருவூட்டல், மலடு நீக்க சிகிச்சைகள், சினை பரிசோதனை, அறுவை சிகிச்சைகள் மற்றும் கருப்பை மருத்துவ உதவி போன்ற நோய்த்தடுப்பு மற்றும் நோய் தீர்க்கும் பல்வேறு சுகாதார நடவடிக்கைகள், கால்நடைகள் மற்றும் கோழிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.

கோழிகளுக்கு வெள்ளைக் கழிச்சல் தடுப்பூசி, நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசிகள், நோய்களை கண்டறிய ஆய்வுகள், மடிநோய் கண்டறியும் சோதனை, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மூலம் சினை ஆய்வு மேற்கொள்ளுதல், கேசிசி கடன் அட்டை விண்ணப்பம் வழங்குதல், தாது உப்பு கலவை வழங்குதல், கால்நடை பல்கலைக்கழகம் மூலம் தொழில்நுட்ப பயிற்சி மற்றும் செய்முறை விளக்கம், ஆவின் மூலம் பால் உற்பத்தி பெருக்கம் மற்றும் பால் கொள்முதல் தொடர்பான விளக்கம் அளிக்கப்படுகிறது.

கால்நடைகளை தாக்கும் கால் மற்றும் வாய் காணை நோயானது, குறிப்பாக கலப்பின மாடுகளை அதிகம் தாக்கி கால்நடை வளர்ப்போருக்கு பொருளாதாரம் மற்றும் உற்பத்தி இழப்பை ஏற்படுத்துகிறது. இந்நோயினால் இறப்புகள் குறைவாக இருந்தபோதிலும், கறவை மாடுகளில் பால் உற்பத்தி குறைவு, எருதுகளின் வேலைத்திறன் குறைவு, கறவை மாடுகளில் சினை பிடிப்பு தடைபடுவது, இளங்கன்றுகளின் இறப்பு போன்ற பாதிப்புகளினால் ஏற்படும் பொருளாதார இழப்பு அதிகமாக உள்ளது.

இந்நோய் பொதுவாக குளிர் மற்றும் பனிக்காலம், நோய் பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து வாங்கி வரப்பட்ட கால்நடைகள், சுகாதாரமற்ற கால்நடை வளர்ப்பு மற்றும் கால்நடைகளுக்கு தடுப்பூசி போடாமல் இருத்தல் ஆகிய காரணங்களால் இந்நோய் விரைவாக காற்றின் மூலம் பரவுகிறது. மேலும் இந்நோய் பாதிக்கப்பட்ட மாடுகளின் பால், உமிழ்நீர் ஆகியவற்றால் காற்றின் மூலம் மற்றும் தொடர்பு ஏற்படுவதன் மூலம் மற்ற கால்நடைகளுக்கு பரவுகிறது.

இந்நோய் பரவலைதடுப்பதற்காக திண்டுக்கல் மாவட்ட கால்நடைபராமரிப்புத்துறை மூலம் இன்று(06.11.2023) முதல் அனைத்து கிராமங்களிலும் கால்நடை உதவி மருத்துவர்கள் மூலம் கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்படுகிறது. பசுக்கள், எருதுகள், எருமைகள் மற்றும் 4 மாதத்திற்கு மேற்பட்ட இளங்கன்றுகளுக்கு கால்நடை பராமரிப்புத்துறையால் தடுப்பூசி போடப்படவுள்ளது. கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசி போடும் பணி இன்று(06.11.2023) துவங்கி 27.11.2023 வரை 21 நாட்களுக்கு 306 ஊராட்சிகளிலும் நடைபெறவுள்ளது. இதன் தொடர்ச்சியாக 28.11.2023 முதல் 04.12.2023 வரை 7 நாட்களுக்கு தடுப்பூசி போடாமல் விடுப்பட்ட கால்நடைகளுக்கும், 4 மாதத்திற்கு மேற்பட்ட கன்றுகளுக்கு முதல் தடுப்பூசி போட்டு 21 நாட்கள் கழித்து பூஸ்டர் தடுப்பூசி போடும் பணியும் நடைபெறவுள்ளது.

எனவே, விவசாயிகள் தங்களது கால்நடைகளுக்கு நோய் தடுப்பூசிகளை முறையாக செலுத்தி பயன்பெறலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

முகாமில் கன்றுகள் பேரணி நடைபெற்றது. சிறந்த கன்றுகளுக்கு பரிசுகள், சிறந்த கால்நடை பராமரிப்பு செய்தவர்களுக்கு சான்றிதழ்கள், முன்னோடி விவசாயிகளுக்கு சான்றிதழ்கள், பால் உற்பத்தியாளர்களுக்குத் தேவையான உபகரணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

முகாமில் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் (பொறுப்பு) மரு.பெ.நா.இராம்நாத், திண்டுக்கல் கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குநர் மரு.முகமது அப்துல்காதர், உதவி இயக்குநர்(கால்நடை நோய் புலனாய்வு பிரிவு) மரு.விஜயகுமார், கால்நடை மருத்துவர்கள் மரு,வெங்கடேஷ், மரு.ராஜேஸ், மரு.வெங்கடேஸ்வரலு, மரு.பிரபாவதி, கால்நடை உதவி மருத்துவர்கள், விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.