Close

Animal Husbandry -Chicks scheme

Publish Date : 21/06/2025

செ.வெ.எண்:-73/2025

நாள்:20.06.2025

திண்டுக்கல் மாவட்டம்

கிராமபுறங்களில் 50 சதவீதம் மானியத்தில் நாட்டுக்கோழி பண்ணை அமைக்க விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

திண்டுக்கல் மாவட்டத்தில் 2025-26ஆம் ஆண்டிற்கு “கிராமப்புறங்களில் சிறிய அளவிலான (250/கோழிகள்/அலகு) 10 நாட்டுக்கோழி பண்ணை அலகுகள் நிறுவ 50 சதவீதம் மானியம் வழங்கும் திட்டம்” செயல்படுத்தப்பட உள்ளது.

இத்திட்டத்தின் கீழ் நாட்டுக்கோழிகள் வளர்ப்பதில் ஆர்வமும், திறனும் கொண்ட கிராமப்புற பயனாளிகளுக்கு, நாட்டுக்கோழி வளர்ப்புப் பண்ணைகளை நிறுவுவதற்கு தேவையான கோழி கொட்டகை கட்டுமானச் செலவு, உபகரணங்கள் வாங்கும் செலவு (தீவனத்தட்டு மற்றும் தண்ணீர் வைக்கும் தட்டு) மற்றும் 4 மாதங்களுக்கு தேவையான தீவன செலவு (கோழி வளரும் வரை) ஆகியவற்றிற்கான மொத்த செலவில் 50 சதவீதம் மானியமாக ரூ.1,65,625 வழங்கப்பட உள்ளது.

இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் கிராமப்புற பயனாளிகள், இத்திட்டத்தின் மீதமுள்ள 50 சதவீதம் பங்களிப்பை வங்கிக் கடன் மூலமாகவோ அல்லது தனது சொந்த ஆதாரங்கள் மூலமாகவோ திரட்ட வேண்டும். தேர்வு செய்யப்படும் ஒவ்வொரு பயனாளிக்கும் 250 எண்ணிக்கையிலான 4 வார வயதுடைய நாட்டுகோழி குஞ்சுகள் மாவட்ட கால்நடை பண்ணையிலிருந்து 50 சதவீதம் மானிய விலையில் வழங்கப்படும்.

இத்திட்டத்தில் சேர விரும்பும் பயனாளிகளிடம், கோழி கொட்டகை கட்ட குறைந்தபட்சம் 625 சதுர அடி நிலம் இருக்க வேண்டும். பண்ணை அமையவிருக்கும் பகுதி, மனித குடியிருப்புகளிலிருந்து விலகி இருக்க வேண்டும். பயனாளி தொடர்புடைய கிராமத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும். விதவைகள், ஆதரவற்றோர், திருநங்கைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். தேர்ந்தெடுக்கப்படும் பயனாளிகளில் 30 சதவீதம் தாழ்த்தப்பட்ட / பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். இதற்கு முன்னர் அரசு வழங்கிய நாட்டுக்கோழி வளர்ப்புத் திட்டத்தில் பயனடைந்தவராக இருத்தல் கூடாது. மேலும் பயனாளி, தனது 50 சதவீதம் பங்களிப்புக்கான ஆதார ஆவணம், பண்ணை அமையவிருக்கும் இடத்திற்கான சிட்டா / அடங்கல் நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் கோழிப்பண்ணையை தொடர்ந்து 3 வருடங்களுக்கு குறையாமல் பராமரிப்பேன் என்ற உத்திரவாதக் கடிதம் ஆகியவற்றை அளிக்க வேண்டும்.

இத்திட்டத்தில் சேர விருப்பமுள்ள பயனாளிகள் தங்கள் கிராமத்திற்கு அருகில் உள்ள அரசு கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரை அணுகி விண்ணப்பம் பெற்று, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை உரிய ஆவணங்களுடன் 23.06.2025-ஆம் தேதிக்குள் கால்நடை மருந்தகத்தில் ஒப்படைத்து, பயன்பெறலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.