Collector- Elector Roll release

செ.வெ.எண்:-01/2021
நாள்:-01.11.2021
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வரைவு வாக்காளர் பட்டியலினை, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில், மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் வெளியிட்டார்கள்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வரைவு வாக்காளர் பட்டியலினை, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில், மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் இன்று(01.11.2021) வெளியிட்டு தெரிவித்ததாவது:-
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம் 2022 தொடங்குவதை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஏழு(7) சட்டமன்ற தொகுதிகளுக்கும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.
அதனடிப்படையில், 127 பழனி சட்டமன்ற தொகுதியில் 1,34,942 ஆண் வாக்காளர்கள், 1,41,198 பெண் வாக்காளர்கள், 35 இதரர்கள் என மொத்தம் 2,76,175 வாக்காளர்களும், 128 ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் 1,16,916 ஆண் வாக்காளர்கள், 1,23,890 பெண் வாக்காளர்கள், 29 இதரர்கள் என மொத்தம் 2,40,835 வாக்காளர்களும், 129 ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் 1,40,455 ஆண் வாக்காளர்கள், 1,51,352 பெண் வாக்காளர்கள், 25 இதரர்கள் என மொத்தம் 2,91,832 வாக்காளர்களும், 130 நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் 1,20,061 ஆண் வாக்காளர்கள், 1,24,708 பெண் வாக்காளர்கள், 9 இதரர்கள் என மொத்தம் 2,44,778 வாக்காளர்களும், 131 நத்தம் சட்டமன்ற தொகுதியில் 1,38,399 ஆண் வாக்காளர்கள், 1,45,143 பெண் வாக்காளர்கள், 46 இதரர்கள் என மொத்தம் 2,83,588 வாக்காளர்களும், 132 திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியில் 1,34,795 ஆண் வாக்காளர்கள், 1,42,480 பெண் வாக்காளர்கள், 53 இதரர்கள் என மொத்தம் 2,77,328 வாக்காளர்களும், 133 வேடசந்தூர் சட்டமன்ற தொகுதியில் 1,28,760 ஆண் வாக்காளர்கள், 1,34,578 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 2,63,338 வாக்காளர்களும் உள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் 7 சட்டமன்ற தொகுதிகளில் 9,14,328 ஆண் வாக்காளர்கள், 9,63,349 பெண் வாக்காளர்கள் 197 இதரர்கள் என மொத்தம் 18,77,874 வாக்காளர்கள் உள்ளனர்.
இன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் அனைத்து வரையறுக்கப்பட்ட மையங்களிலும் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்படும். வாக்காளர்கள் மற்றும் பொதுமக்கள் புதியதாக பெயர் சேர்க்க படிவம் 6, பெயர் நீக்கம் செய்ய படிவம் 7, பிழைதிருத்த படிவம் 8, ஒரே சட்டமன்ற தொகுதிக்குள் பெயர் இடமாற்றம் செய்ய படிவம் 8ஏ, வெளிநாடு வாழ் இந்தியர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு படிவம் 6ஏ பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்களை, அந்தந்த வாக்குச்சாவடி மையங்கள், அந்தந்த உதவி வாக்காளர் பதிவு அலுவலர்(வருவாய் வட்டாட்சியர்/மாநகராட்சி ஆணையர் /நகராட்சி ஆணையர்) அலுவலகங்கள், அந்தந்த வாக்காளர் பதிவு அலுவலர் (வருவாய் கோட்டாட்சியர்) அலுவலகங்கள் ஆகிய இடங்களில் விண்ணப்பிக்கலாம். அல்லது www.nvsp.in என்ற இணைய தளத்தின் வாயிலாகவோ, Voters Help Line என்ற கைப்பேசி செயலி வாயிலாகவோ விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்களை பூர்த்தி செய்தல் /வலைதளத்தில் பதிவேற்றம் செய்வதில் ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம்.
மேலும், வாக்காளர் பட்டியல் சுருக்க முறைத் திருத்தப் பணிகள் குறித்த சிறப்பு முகாம்கள் வரும் நவம்பர் மாதம் 13 மற்றும் 14-ஆம் தேதிகளிலும் (சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை), 27 மற்றும் 28-ஆம் தேதிகளிலும் (சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை) என 4 நாட்கள் சிறப்பு முகாம்கள் காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடத்தப்பட உள்ளன. இதில் வாக்காளர் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல், பெயர் திருத்தம், முகவரி மாற்றம் போன்றவற்றிற்கான விண்ணப்பங்கள் பெறப்படும். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு 31.12.2003-ஆம் தேதி வரை பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு பெறப்படும் அனைத்து மனுக்களும், பரிசீலினை செய்து முடிவு செய்யப்பட்டு, இறுதி வாக்காளர் பட்டியல் 05.01.2022-ம் தேதி வெளியிடப்படவுள்ளது. இந்த வாய்ப்பினை பயன்படுத்தி வாக்காளர் பட்டியலில் பொதுமக்கள் தங்கள் பெயர்களை சரிபார்த்து கொள்ளவும், புதியதாக சேர்க்க, பெயர் நீக்கம், பெயர் திருத்தம் செய்ய விரும்புபவர்கள் முழுமையாக பயன்படுத்தி கொள்ளலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி வே.லதா, உதவி ஆட்சியர்(பயிற்சி) திருமதி சி.பிரியங்கா, இ.ஆ.ப., மாவட்ட வன அலுவலர் திரு.எஸ்.பிரபு, இ.வ.ப., மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) திரு.சி.மாறன், கோட்டாட்சியர்கள், வட்டாட்சியர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.