Close

Collector Inspection (School Bus)

Publish Date : 07/05/2025
.

செ.வெ.எண்:-17/2025

நாள்:-06.05.2025

திண்டுக்கல் மாவட்டம்

பள்ளி வாகனங்கள் ஆண்டு பராமரிப்பு ஆய்வு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளி வாகனங்கள் ஆண்டு பராமரிப்பு ஆய்வு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்தில் இன்று(06.05.2025) நடைபெற்றது.

இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மாணவ, மாணவிகளின் கல்வி மேம்பாட்டிற்காக அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறார்கள். மேலும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், பள்ளி வாகனங்களில் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பிற்காக விதிமுறைகளை வகுத்து, பல்வேறு அறிவுறுத்தல்களை தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது.

பள்ளி வாகனங்களில் மாணவ, மாணவிகளுக்கான பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்யும் வகையில் ஆண்டு பராமரிப்பு ஆய்வு ஒவ்வொரு ஆண்டும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் இந்த ஆய்வு இன்று மேற்கொள்ளப்படுகிறது.

பள்ளி வாகனங்களில் இருக்கை வசதிகள், வாகனத்தின் காப்பீடு காலம், தீயணைப்பு கருவி, முதலுதவி கருவிகள், வேகக்கட்டுபாட்டு கருவி, வாகனத்தின் முன்புறம், பின்புறம் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள், அவசர கால கதவுகள் மற்றும் ஜன்னல்கள், பேருந்தின் தளம், பள்ளி குழந்தைகளுக்கான இருக்கை வசதிகள், பள்ளி குழந்தைகள் புத்தகப்பை வைக்கும் பகுதி உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

வட்டார போக்குவரத்து அலுவலர்கள், காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினர் கொண்ட குழு அமைக்கப்பட்டு 23 வகையான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது. தமிழ்நாடு அரசு நிர்ணயித்துள்ள அனைத்து விதிமுறைகளும் ஆய்வு செய்யப்படுகிறது. ஆய்வின்போது, எவ்வித விதிமுறை தளர்வுகளும் வழங்கப்படுவது இல்லை. அனைத்து விதிமுறைகளும் முழுமையாக உள்ள பள்ளி வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.

ஆண்டு பராமரிப்பு ஆய்விற்காக திண்டுக்கல், வத்தலகுண்டு, வேடசந்துார் மற்றும் நத்தம் ஆகிய பகுதிகளில் இருந்து 668 பள்ளி வாகனங்கள் வரவழைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

பள்ளி வாகனங்களை எப்.சி. பரிசோதனைக்காக கொண்டு வரும்போது வாகனத்தில் இருந்த பாதுகாப்பு அம்சங்களின் செயல்பாடுகளை அடிக்கடி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். குறைந்தது 3 மாதங்களுக்கு ஒருமுறை அவசர கால கதவுகள் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களின் செயல்பாடுகளை பரிசோதனை செய்து பார்க்க வேண்டும்.

அதேபோல், அவசர கால கதவுகள் திறக்கும் முறைகள் மற்றும் தீத்தடுப்பு சாதனங்களை செயல்படுத்தும் முறைகளை ஓட்டுநர்கள் அறிந்துகொள்வதுடன், வாகனத்தில் உடன் வரும் பணியாளர்களும் அந்த செயல்பாட்டு முறைகளை தெரிந்துகொள்ளச் செய்ய வேண்டும்.

அதேபோல், பேருந்துகளில் தாழ்வுதள படிக்கெட்டுகள் சரியாக வேலை செய்கிறதா, குழந்தைகள் பாதுகாப்பாக படிக்கெட்டில் ஏறி, இறங்குவதை உறுதி செய்திட வேண்டும்.

பள்ளி வாகனங்களில் வேகக்கட்டுப்பாட்டு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. சுமார் 45 முதல் 50 கி.மீட்டர் வேகம் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் பாதுகாப்பு கருதி முதலுதவிப் பெட்டி அவசியம் அமைக்கப்பட வேண்டும்.

பள்ளி வாகனங்கள் மற்றும் தனியார் ஆட்டோக்களில் அதிகபடியான குழந்தைகளை ஏற்றிச் செல்வதை தடுக்க தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, அறிவுரைகள் வழங்கப்படும்.

பொதுமக்கள் பயணம் செய்யும் பேருந்துகளில் மாணவ, மாணவிகள் படிகளில் நின்றுகொண்டு செல்வதை தவிர்க்கும் வகையில், பள்ளிகள் அதிகம் உள்ள வழித்தடங்களில் பள்ளி செல்லும் நேரங்களில் காலை மற்றும் மாலை கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது, பள்ளி பேருந்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இயக்கி பார்த்து ஆய்வு செய்தார். இன்றைய தினம் 446 பள்ளி வாகனங்களை ஆய்வு மேற்கொண்டதில் 9 வாகனங்களில் தகுதிச்சான்று இரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆய்வின்போது, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.மகேஷ், வட்டார போக்குவரத்து அலுவலர் திரு.கண்ணன், தீயணைப்பு அலுவலர் திரு.மயில்ராஜ் மற்றும் தொடர்புடைய துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.

.

.

.

.

.

.

.

.

.

.