Corona – awareness week Day-2

செ.வெ.எண்:-03/2021
நாள்:02.08.2021
கொரோனா விழிப்புணர்வு தொடர் பிரச்சாரத்தில் பொதுமக்களிடையே கைகளை கழுவும் முறைகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா விழிப்புணர்வு தொடர் பிரச்சாரத்தின் 2வது நாளாக மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் இன்று(02.08.2021) திண்டுக்கல் பேருந்து நிலையம், தனியார் நிறுவனங்கள், உழவர் சந்தை ஆகிய இடங்களில் கைகளை கழுவும் முறைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி, துண்டு பிரசுரங்கள் வழங்கி தெரிவித்ததாவது:-
தமிழ்நாடு அரசின் பல்வேறு துரித நடவடிக்கைகள் காரணமாக கொரோனா வைரஸ் பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதை முதன்மை நோக்கமாக கொண்டு தமிழக அரசு முழு வீச்சில் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் மூன்றாம் அலை வராமல் தடுக்க தற்போது பல்வேறு நடவடிக்கைகள் தமிழக அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயராமல் இருக்க பொதுமக்களிடையே பல்வேறு தொடர் விழிப்புணர்வு பிரச்சாரத்தினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் துவக்கி வைத்துள்ளார்கள். இதனைத்தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்டம் முழுவதும் பல்வேறு துறைகளுடன் இணைந்து ஒரு வாரம் மேற்கொள்ளப்படுகிறது.
கொரோனா மேலாண்மைக்கான வழிகாட்டு நடைமுறைகளில் குறிப்பிட்டுள்ளபடி, பொது இடங்களில் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியினைக் கடைப்பிடிப்பது, கைகளை அடிக்கடி சோப்பு அல்லது கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்வது ஆகியவற்றை பொதுமக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
கொரோனா பரவலை தடுக்க அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்கி கொரோனா பரவலை முற்றிலும் அகற்ற உதவிட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சிகளில், திண்டுக்கல் மாநகராட்சி ஆணையாளர் திரு.எஸ்.சிவசுப்பிரமணியம், நகர்நல அலுவலர் மரு.லட்சியவர்ணா உட்பட பலர் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.