Close

Counting centers – OBSERVER inspection

Publish Date : 18/02/2022
.

..செ.வெ.எண்:-38/2022

நாள்:17.02.2022

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணுகை மையத்தினை மாவட்ட தேர்தல் பார்வையாளர் / அயலக நல்வாழ்வு நலன் மற்றும் மறுவாழ்வு துறை ஆணையர் திருமதி ஜெசிந்தா லாசரஸ், இ.ஆ.ப., அவர்கள்
ஆய்வு மேற்கொண்டார்கள்.

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய அறிவிக்கை மற்றும் அறிவுரைகளின்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் சாதாரண நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களை, கோவிட்-19 பெருந்தொற்று தொடர்பான நிலையான இயக்கு செயல்முறைகளை பின்பற்றி சமூக இடைவெளி மற்றும் பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடத்திட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு 19.02.2022 அன்று நடைபெறுகிறது. பதிவான வாக்குகளை எண்ணுவதற்காக 11 வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்படுகின்றன. அதன்படி, திண்டுக்கல் மாநகராட்சி பகுதிக்கான வாக்கு எண்ணிக்கை திண்டுக்கல் அண்ணாமலையார் மில்ஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், பழனி நகராட்சி மற்றும் ஆயக்குடி, பாலசமுத்திரம், கீரனூர், நெய்க்காரப்பட்டி ஆகிய பேரூராட்சி பகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை பழனி அருள்மிகு பழனியாண்டவர் கலைக்கல்லூரியிலும், ஒட்டன்சத்திரம் நகராட்சி பகுதிக்கான வாக்கு எண்ணிக்கை ஒட்டன்சத்திரம் மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்திலும், கன்னிவாடி, ஸ்ரீராமபுரம், சின்னாளப்பட்டி, சித்தையன்கோட்டை ஆகிய பேரூராட்சி பகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை பிள்ளையார்நத்தம் அம்மன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், அகரம், தாடிக்கொம்பு, வேடசந்தூர் ஆகிய பேரூராட்சி பகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை வேடசந்தூர்(வடமதுரை சாலை) பிவிஎம் மெட்ரிக் உயர்நிலைப்பள்ளியிலும், பாளையம், எரியோடு பேரூராட்சி பகுதிக்கான வாக்கு எண்ணிக்கை குஜிலியம்பாறை ஆலம்பாடி ராணி மெய்யம்மை உயர்நிலைப்பள்ளியிலும், வடமதுரை மற்றும் அய்யலூர் பேரூராட்சி பகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை குளத்தூர் ஆர்விஎஸ் பொறியியல் கல்லூரியிலும், நத்தம் பேரூராட்சி பகுதிக்கான வாக்கு எண்ணிக்கை நத்தம் துரைகமலம் மேல்நிலைப்பள்ளியிலும், நிலக்கோட்டை மற்றும் அம்மையநாயக்கனூர் பேரூராட்சி பகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நிலக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரியிலும், அய்யம்பாளையம், வத்தலகுண்டு, பட்டிவீரன்பட்டி, சேவுகம்பட்டி ஆகிய பேரூராட்சி பகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை பட்டிவீரன்பட்டி என்எஸ்விவி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், கொடைக்கானல் நகராட்சி மற்றும் பண்ணைக்காடு பேரூராட்சி பகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்திலும் நடைபெற ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

திண்டுக்கல் மாவட்டத்திற்கான சாதாரண நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பார்வையாளர் / அயலக நல்வாழ்வு நலன் மற்றும் மறுவாழ்வு துறை ஆணையர் திருமதி ஜெசிந்தா லாசரஸ், இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(17.02.2022) திண்டுக்கல் மாநகராட்சி பகுதிக்காக திண்டுக்கல் அண்ணாமலையார் மில்ஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தினை நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள்.

வாக்கு எண்ணிக்கை மையங்களில் வாக்குப்பதிவு இயந்திரத்தை பாதுகாக்கப்பட்ட அறையில்(Strong Room) வைப்பதற்கு உரிய இடங்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்கள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்கள்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.வி.ஆர்.ஸ்ரீனிவாசன், கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி) திரு.ச.தினேஷ்குமார், இ.ஆ.ப., அவர்கள், திண்டுக்கல் மாநகராட்சி ஆணையாளர் திரு.எஸ்.சிவசுப்பிரமணியம் உட்பட தேர்தல் அலுவலர்கள் பலர் உடனிருந்தார்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.