DADWO-Forest Rights Act -Training

செ.வெ.எண்:-31/2025
நாள்:-09.05.2025
திண்டுக்கல் மாவட்டம்
வன உரிமைச் சட்டம் 2006 இன் படி, பழங்குடியினர் பகுதிகளில் வன உரிமைகள் குழு அமைப்பது தொடர்பாக, திண்டுக்கல், மதுரை, தேனி மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த அலுவலர்களுக்கான
பயிற்சி வகுப்பு திண்டுக்கல்லில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
வன உரிமைச் சட்டம் 2006 இன் படி, பழங்குடியினர் பகுதிகளில் வன உரிமைக் குழு அமைப்பது தொடர்பாக, திண்டுக்கல், மதுரை, தேனி மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு திண்டுக்கல்லில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(09.05.2025) நடைபெற்றது.
இந்த பயிற்சி வகுப்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் பேசியதாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக எண்ணற்ற திட்டங்களை அறிவித்து, அந்தத் திட்டங்களின் பயன்கள் கடைக்கோடி மக்களையும் சென்றடையும் வகையில் செயல்படுத்தி வருகிறார்கள்.
தமிழ்நாடு பொருளாதாரம் மற்றும் அனைத்து சமூக குறியீடுகளிலும் முன்னணியில் உள்ளது. 9.69 சதவீதம் வளர்ச்சி பெற்று இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக உள்ளது. அந்த வளர்ச்சியின் பயன்கள் சமூகத்தில் அனைத்துத் தரப்பு மக்களையும் சென்றடைகிறதா என்பதை ஆய்வு செய்து, அவற்றை கொண்டு சென்று சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தமிழ்நாடு அரசு சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலன் சார்ந்து ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக அயோத்திதாசர் பண்டிதர் திட்டம், அண்ணல் அம்பேத்கர் தொழில் முனைவோர் திட்டம், தொல்குடி திட்டம் போன்ற திட்டங்கள் முக்கியத் திட்டங்களாகும்.
தொல்குடி திட்டம் என்பது ஆதிதிராவிடர், பழங்குடியினர், பட்டியலினத்தவர் என அனைவரையும் ஒரே குழுவாக பார்க்காமல், பூர்வகுடிகளை அறிந்து ஒவ்வொரு சமூகத்திலும் கல்வியில் பின்தங்கியவர்கள், அவர்களின் அடிப்படைத் தேவைகள் ஆகியவற்றை மாவட்டம் வாரியாக அறிந்து செயல்படுத்திட தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
குறிப்பாக, வனப்பகுதிகளில் காலங்காலமாக வசித்து வரும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக வன உரிமைச் சட்டம் 2006-ன் படி அவர்களுக்கான உரிமைகள் கிடைக்கச் செய்யும் வகையில் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்களை மேற்கொண்டு வருகிறது. வனஉரிமைச் சட்டம் என்பது பாராளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விதியின் அடிப்படையில் ஒவ்வொரு மாநிலத்திலும் இச்சட்டம் செயல்படுத்தப்படுகிறது.
தமிழ்நாட்டில் மாவட்டம் வாரியாக வன உரிமைச் சட்டம் 2006-ன் படி, பல் முன்னேற்ற திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. அந்த திட்டங்களின் செயல்பாடுகள் மக்களைச் சென்றடையச் செய்வதற்காக இதுபோன்ற பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. திண்டுக்கல்லில் இன்று நடைபெறும் இந்த பயிற்சி வகுப்பில் திண்டுக்கல், மதுரை, தேனி மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை மற்றும் வனத்துறை அலுவலர்கள் பங்கேற்றுள்ளனர். வன உரிமைச் சட்டத்தின் செயல்பாடுகள், வன உரிமை குழு அமைத்தல் தொடர்பான வழிமுறைகள் உட்பட பல்வேறு வழிகாட்டுதல் குறித்து இந்த பயிற்சி வகுப்பில் விளக்கம் அளிக்கப்படுகிறது. பயிற்சியில் கலந்துள்ள அலுவலர்கள் தங்கள் சந்தேகங்களை தெளிவுப்படுத்தி, தங்களுக்குள்ள சிரமங்களை தெரிவித்து அதற்கான தீர்வுகளை பெற்று, தங்கள் மாவட்டத்தில் திறம்பட செயல்படுத்திட வேண்டும்.
ஒவ்வொரு கோரிக்கை மனுவும், ஒவ்வொருவருடைய வாழ்க்கையை நிர்ணயிக்கிறது. எனவே, பொதுமக்களின் கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும். வனப்பகுதியில் பாரம்பரியமாக வசித்து வருபவர்கள், வனப்பகுதியை வாழ்வாதாரமாக நம்பி வசிப்பவர்கள் வன உரிமைச் சட்டத்தின் கீழ் பயனடைய உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இதில் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு ஏராளமான சவால்கள் உள்ளன. சட்டத்தின் முன் அனைவரும் சமம். எனவே, வனப்பகுதியையே நம்பி வாழும் மக்களின் கோரிக்கை மனுக்களை கனிவுடன் பரிசீலிக்க வேண்டும். வனத்தையும் பாதுகாக்க வேண்டும், வனப்பகுதியில் வசிக்கும் மக்களையும் பாதுகாக்க வேண்டும்.
தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் முத்தாய்ப்பான திட்டங்களை செயல்படுத்திட அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயலாற்றிட வேண்டும், என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசினார்.
இந்த பயிற்சி வகுப்பில், தேனி மாவட்டம், பெரியகுளம் சார் ஆட்சியர் திரு.ரஜத்பீடன், இ.ஆ.ப.,, தேனி வனக்கோட்ட் உதவி வன பாதுகாப்பு அலுவலர் திரு.நா.செசில்கில்பர்ட், திரு.கிரிராஜ், திரு.பகவதி, திண்டுக்கல், மதுரை, தேனி மற்றும் விருதுநகர் மாவட்டங்களைச் சேர்ந்த உதவி இயக்குநர்(ஊராட்சிகள்), வருவாய் கோட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டாட்சியர்கள், வனத்துறை அலுவலர்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர்கள், பழங்குடியின மக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.