Close

DBCWO-Post Matric Scholarship

Publish Date : 05/02/2025

செ.வெ.எண்:-04/2025

நாள்:- 05.02.2025

திண்டுக்கல் மாவட்டம்

அரசு, அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பி.வ., மி.பி.வ., மற்றும் சீ.ம., மாணவ, மாணவிகள் பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

அரசு, அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட(பிவ), மிகப்பிற்படுத்தப்பட்ட(மிபிவ) மற்றும் சீர்மரபினர்(சீம) மாணவ, மாணவிகளுக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை (PM YASASVI Post Matric Scholarship) திட்டம், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் வருடந்தோறும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மூன்றாண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் பி.வ., மி.பி.வ., சீ.ம., மாணவ, மாணவிகளுக்கு எவ்வித வருமான வரம்பு நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் மாணாக்கர்களுக்கு பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.2,50,000-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

2024–2025–ஆம் கல்வியாண்டில் கல்வி உதவித்தொகை திட்டத்திற்கான விண்ணப்பங்கள் University Management Information System (UMIS) (https://umis.tn.gov.in/) என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். கல்வி உதவித்தொகைக்கு, மாணாக்கர்கள் 28.02.2025 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

ஏற்கனவே, கல்லூரியில் கல்வி உதவித்தொகை பெற்று 2024–2025–ஆம் ஆண்டில் 2, 3(ம) 4–ஆம் ஆண்டு பயின்று வரும் புதுப்பித்தல் மாணாக்கர்கள், கல்வி உதவித்தொகைக்கு புதிதாக விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை. அம்மாணாக்கர்களுக்கு கல்லூரிகளில் நடப்பாண்டில் கல்வி பயில்வதை, சம்மந்தப்பட்ட கல்லூரிகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டு கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.

நடப்பு கல்வியாண்டில்(2024–2025) புதிதாக கல்வி உதவித்தொகை பெற கல்லூரியில் முதலாமாண்டு சேர்க்கை பெற்ற மற்றும் சென்ற வருடத்தில் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கத் தவறிய புதிய மாணாக்கர்கள், தற்போது தாங்கள் பயிலும் கல்லூரியில் கல்வி உதவித்தொகைக்கென உள்ள ஒருங்கிணைப்பு அலுவலரை (Nodal Officer) அணுகி https://umis.tn.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம். முதல் தலைமுறை பட்டதாரி எனில் அதற்கான சான்றினை சமர்ப்பிக்க வேண்டும்.

மேற்படி விவரங்களை மாணாக்கர்களுக்கு தெரிவித்து, பி.வ., மி.பி.வ., சீ.ம., வகுப்பைச் சார்ந்த மாணாக்கர்களை, பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பித்திட கல்லூரி முதல்வர்கள் அறிவுறுத்திட வேண்டும்.

கல்வி உதவித்தொகை தொடர்பான சந்தேகங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை, அலுவலக நேரங்களில் அணுகி தெரிந்து கொள்ளலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.