DBCWO-Ulema Two Wheeler
செ.வெ.எண்:-55/2022
நாள்:28.03.2022
திண்டுக்கல் மாவட்டம்
வக்பு நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தில் வயது வரம்பு உயர்த்துப்பட்டுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், தமிழ்நாடு வக்பு வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட 2,814 வக்பு நிறுவனங்கள் உள்ளன.
இஸ்லாமியர்களின் பள்ளிவாசல்கள் மற்றும் மதரசாக்களில் பணிபுரியும் ஆலிம்கள், பேஷ் இமாம்கள், அரபி ஆசிரியர்கள் / ஆசிரியைகள், மோதினார்கள், பிலால்கள் மற்றும் இதரப் பணியாளர்கள், தர்க்காக்கள் மற்றும் அடக்கத்தலங்கள், தைக்காக்கள் ஆஷீர்கானாக்கள் மற்றும் முஸ்லீம் அனாதை இல்லங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் முஜாவர் உள்ளிட்ட பணியாளர்கள் மானிய விலையில் 125 CC எஞ்சின் திறன் கொண்ட இருசக்கர வாகனம் வாங்குவதற்கு, வாகனத்தின் மொத்த விலையில் 50 சதவீதம் அல்லது ரூ.25,000/- இதில் எது குறைவோ, அந்தத் தொகை மானியமாக வழங்கப்பட்டு வருகிறது.
இந்த மானியம் பெறுவதற்கு ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பு 18-லிருந்து 40 வயது என்பதிலிருந்து, 18-லிருந்து 45 வயது வரை என உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், (8-ஆம் தேர்ச்சி/தோல்வி) எனும் நிபந்தனை நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
எனவே, மேலே குறிப்பிட்ட இஸ்லாமியர்களின் பள்ளிவாசல் மற்றும் மதரசாக்களில் பணிபுரியும் பணியாளர்களில் இத்திட்டத்தின் மூலம் பயனடைய விரும்புவோர், விண்ணப்பங்களை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் அலுவலகத்திலிருந்து பெற்று விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.