Close

DEO-Study centre

Publish Date : 03/03/2022

செ.வெ.எண்:-03/2022

நாள்:02.03.2022

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள தொகுதி-II காலிப்பணியிடங்களுக்கான போட்டித்தேர்வுக்கு தயாராகும் வேலைநாடுநர்கள் திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறும் இலவசப் பயிற்சி நேரடி வகுப்பில் சேர்ந்து பயன்பெறலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலமாக அரசுப் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் வேலைநாடுநர்களுக்கு இணைய வாயிலாக இலவசமாக பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

தற்போது தமிழக அரசின் வழிகாட்டுதல்களின்டி, 01.03.2022 அன்று முதல் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள தொகுதி-II (TNPSC Group-II) காலிப்பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகள் 01.03.2022 அன்று துவங்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்பயிற்சியானது திறன்மிக்க வல்லுநர்களைக் கொண்டு நடத்தப்படுகிறது. மேலும் மாதிரித் தேர்வுகளும் இலவசமாக நடத்தப்பட உள்ளன.

எனவே, தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள தொகுதி-II (TNPSC Group-II) காலிப்பணியிடங்களுக்கான போட்டித் தேர்விற்கு தயாராகும் விண்ணப்பதாரர்கள், இந்த அரியவாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளலாம். விருப்பமுள்ளவர்கள் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தை நேரடியாக தொடர்பு கொண்டு, தங்களது விவரங்களைப் பதிவு செய்து, வகுப்பில் சேர்ந்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.