DSWO PALANI
செ.வெ.எண்:-67/2025
நாள்:-24.04.2025
திண்டுக்கல் மாவட்டம்
பழனி சண்முக நதி பகுதியில் தள்ளாடியபடி நடந்து சென்ற மூதாட்டியை சமூக நலத்துறை அலுவலர்கள் மற்றும் காவல்துறையினர் மீட்டு உரிய விசாரணைக்குப் பின்னர் அவருடைய குடும்பத்தாரிடம் ஒப்படைத்தனர்.
திண்டுக்கல் மாவட்டம், பழனி சண்முக நதி பகுதியில் மூதாட்டி ஒருவர் தள்ளாடியபடி நடந்து சென்றதை அக்கம்பக்கத்தில் உள்ளவர் பார்த்து, மீட்டனர். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்களுக்கு வரப்பெற்ற தகவலின் அடிப்படையில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் உத்தரவின்பேரில், மாவட்ட சமூக நலத்துறை அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று, காவல்துறையினர் உதவியுடன் அந்த மூதாட்டியை மீட்டு, பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இதுகுறித்து விசாரித்தபோது, மூதாட்டியின் பெயர் வள்ளியம்மாள்(வயது 74) என்பது தெரியவந்தது. மூதாட்டி, தன்னுடைய உடல் உபாதைகளுக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில், சண்முக நதிக்கு கை, கால், முகம் கழுவச் சென்றவரை, பொதுமக்கள் கவனித்து, அவரை காப்பாற்றும் நோக்கத்துடன் மீட்டு, காவல்துறையினரின் உதவியுடன் பழனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், என்பது தெரியவந்தது.
இதுதொடர்பாக மூதாட்டியின் குடும்பத்தாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவருடைய இரண்டு மகள்கள் மருத்துவமனைக்கு வந்தடைந்தனர். இது குறித்து, மூதாட்டியின் மகள்கள் தெரிவிக்கையில், ”எங்கள் தாயார் கடந்த சில நாட்களாக உடல் உபாதைக்கு ஆளாகி சிரமப்பட்டு வந்தார். எங்களிடம் தகவல் ஏதும் தெரிவிக்காமல் மருத்துவமனைக்கு சென்றபோதுதான், இந்த சம்பவம் நடந்து விட்டது. இனி நாங்கள் கவனித்துக்கொள்வோம்” என்றனர்.
அதையடுத்து, சமூக நலத்துறை அலுவலர்கள் மற்றும் காவல்துறையினர் உரிய விசாரணைக்குப் பின்னர் வள்ளியம்மாளை அவருடைய மகள்களிடம் ஒப்படைத்தனர். தற்போது, மகள்களின் கண்காணிப்பில் வள்ளியம்மாள் பழனி அரசு மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் உள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.