Close

Election – Collector meeting -Urban Local body – Counting centers

Publish Date : 02/02/2022
.

செ.வெ.எண்:-02/2022

நாள்:02.02.2022

சாதாரண நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடு, பாதுகாப்பு பணிகள் – மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று(02.02.2022) திண்டுக்கல் மாவட்டத்தில் சாதாரண நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய அறிவிக்கை மற்றும் அறிவுரைகளின்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் சாதாரண நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களை, கோவிட்-19 பெருந்தொற்று தொடர்பான நிலையான இயக்கு செயல்முறைகளை பின்பற்றி சமூக இடைவெளி மற்றும் பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடத்திட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் வேட்புமனுக்கல் தாக்கல் செய்தல், வேட்புமனுக்களை ஆய்வு செய்தல், வேட்புமனுக்களை திரும்பப் பெறுதல் மற்றும் சின்னங்கள் ஒதுக்கீடு செய்தல் ஆகிய நிழ்வுகளை கண்காணிப்பு கேமரா(சிசிடிவி) மூலம் கண்காணிக்க 105 சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தேர்தல் பணிகளை கண்காணிக்க 30 வட்டார பார்வையாளர்கள் நியமனம் (Block Observer) செய்யப்பட்டுள்ளனர். மேலும், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்க 30 பறக்கும் படையினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஆண்களுக்கான வாக்குச்சாவடி மையங்கள் 164, பெண்களுக்கான வாக்குச்சாவடி மையங்கள் 164 மற்றும் பொது வாக்குச்சாவடி மையங்கள் 419 என மொத்தம் 747 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்படவுள்ளன. 5 வாக்குச்சாவடி மையங்கள் கண்காணிப்புக்கு(Critical) உட்பட்டவையாகவும், 149 வாக்குச்சாவடி மையங்கள் பதட்டம்(Vulnerable) நிறைந்தவைகளாகவும் கண்டறியப்பட்டுள்ளன. இந்தப்பகுதிகளில் கூடுதல் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பதிவான வாக்குகளை எண்ணுவதற்காக 11 வாக்கு எண்ணும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. அதன்படி, திண்டுக்கல் மாநகராட்சி பகுதிக்கான வாக்கு எண்ணிக்கை திண்டுக்கல் அண்ணாமலையார் மில்ஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், பழனி நகராட்சி மற்றும் ஆயக்குடி, பாலசமுத்திரம், கீரனூர், நெய்க்காரப்பட்டி ஆகிய பேரூராட்சி பகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை பழனி அருள்மிகு பழனியாண்டவர்

கலைக்கல்லூரியிலும், ஒட்டன்சத்திரம் நகராட்சி பகுதிக்கான வாக்கு எண்ணிக்கை ஒட்டன்சத்திரம் மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்திலும், கன்னிவாடி, ஸ்ரீராமபுரம், சின்னாளப்பட்டி, சித்தையன்கோட்டை ஆகிய பேரூராட்சி பகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை பிள்ளையார்நத்தம் அம்மா கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், அகரம், தாடிக்கொம்பு, வேடசந்தூர் ஆகிய பேரூராட்சி பகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை வேடசந்தூர்(வடமதுரை சாலை) பிவிஎம் மெட்ரிக் உயர்நிலைப்பள்ளியிலும், பாளையம், எரியோடு பேரூராட்சி பகுதிக்கான வாக்கு எண்ணிக்கை குஜிலியம்பாறை ஆலம்பாடி ராணி மெய்யம்மை உயர்நிலைப்பள்ளியிலும், வடமதுரை மற்றும் அய்யலூர் பேரூராட்சி பகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை குளத்தூர் ஆர்விஎஸ் பொறியியல் கல்லூரியிலும், நத்தம் பேரூராட்சி பகுதிக்கான வாக்கு எண்ணிக்கை நத்தம் துரைகமலம் மேல்நிலைப்பள்ளியிலும், நிலக்கோட்டை மற்றும் அம்மையநாயக்கனூர் பேரூராட்சி பகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நிலக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரியிலும், அய்யம்பாளையம், வத்தலகுண்டு, பட்டிவீரன்பட்டி, சேவுகம்பட்டி ஆகிய பேரூராட்சி பகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை பட்டிவீரன்பட்டி என்எஸ்விவி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், கொடைக்கானல் நகராட்சி மற்றும் பண்ணைக்காடு பேரூராட்சி பகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்திலும் நடைபெற ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

திண்டுக்கல் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக தோற்றுவிக்கப்பட்டுள்ள 60 மண்டலங்களுக்கும், மண்டல அலுவலர்கள், உதவி மண்டல அலுவலர்கள் மற்றும் அலுவலக உதவியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், 24 மணி நேரமும் இயங்கும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டு அறையில் பணிபுரிவதற்கு சுழற்சி(காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரையும், இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரையும்) முறையில் பணிபுரியும் வகையில் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க கட்டணமில்லா தொலைப்பேசி எண் 1800 425 0752 மூலம் சம்பந்தப்பட்ட அலுவலர்களை தொடர்புகொண்டு தெரிவிக்கலாம்.

இவ்வாறு திண்டுக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்கள்.

இக்கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.வி.ஆர்.ஸ்ரீனிவாசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) திருமதி மு.ராணி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) திரு.சி.மாறன், திண்டுக்கல் மாநகராட்சி ஆணையாளர் திரு.எஸ்.சிவசுப்பிரமணியம் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.