Close

Election Counting Center – District Collector Inspection

Publish Date : 17/11/2023
.

செ.வெ.எண்:-38/2023

நாள்: 16.11.2023

திண்டுக்கல் மாவட்டம்

நாடாளுமன்ற தேர்தல் 2024-ஐ முன்னிட்டு, வாக்கு எண்ணிக்கை மையம் அமையவுள்ள அண்ணா பல்கலைக்கழக கல்லுாரியை, மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் 2024-ஐ முன்னிட்டு, திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை மையம் அமையவுள்ள திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் முத்தனம்பட்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக கல்லூரியை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் இன்று(16.11.2023) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-

இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவின்படி, நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் 2024-க்கான முன்னேற்பாடு பணிகள் திண்டுக்கல் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஏற்கனவே வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு, 01.01.2024-ம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்த பணிகள் நடைபெற்று வருகிறது. வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க, பெயர் நீக்கம் செய்ய, பெயர் திருத்தம், முகவரி மாற்றம் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை பெற விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது.

திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில், 127-பழனி, 128-ஒட்டன்சத்திரம், 129-ஆத்தூர், 130-நிலக்கோட்டை, 131-நத்தம், 132-திண்டுக்கல் என 6 சட்ட மன்ற தொகுதிகள் உள்ளன. நாடாளுமன்ற தேர்தல் 2024-க்கான வாக்கு எண்ணிக்கை மையம் முத்தனம்பட்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக கல்லூரியில் அமைப்பதற்கான முன்னேற்பாடுகள் பணிகள் குறித்து இன்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிக்கான மின்னணு வாக்கு பதிவு கட்டுப்பாட்டு கருவி, வாக்குப்பதிவு செய்யும் இயந்திரம் வைப்பு அறை மற்றும் வாக்கு எண்ணிக்கை, முகவர்கள் அமரும் பகுதி, பத்திரிகையாளர்கள் பகுதி, கண்காணிப்பு கோபுரம் அமையும் இடம், வரவேற்பறை அமைவிடங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாக்கப்பட்ட அறையில் பாதுகாப்பாக வைப்பதற்கு உரிய இடங்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்கள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது, என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.வீ.பாஸ்கரன், திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு.சுப.கமலக்கண்ணன், வட்டாட்சியர்(தேர்தல்) திரு.சரவணன், திண்டுக்கல்(மேற்கு) வட்டாட்சியர் திரு.சோ.செழியன் உட்பட துறை அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.