Close

Ghandhigram – Dr.Kowsalya – Condolence

Publish Date : 26/04/2025
.

செ.வெ.எண்: 71/2025

நாள்: 25.04.2025

திண்டுக்கல் மாவட்டம்

கஸ்தூரிபா மருத்துவமனையின் வாழ்நாள் அறங்காவலர் மரு.ஆர்.கௌசல்யா அவர்கள் வாழ்க்கை ஒரு மாபெரும் சரித்திரம். மருத்துவ சேவைக்கு ஒரு மாபெரும் எடுத்துக்காட்டு.

மரு.ஆர்.கௌசல்யாதேவி, பி.ஏ., எம்.பி.பி.எஸ்., டி.ஜி.ஓ., அவர்கள் 1930-ஆம் பிறந்தார். 1959-ஆம் ஆண்டு மருத்துவப் பட்டப்படிப்பு முடித்தார். அதன்பிறகு தனது வாழ்நாட்களை பொதுவாழ்விற்காக அர்ப்பணித்தவர். அதன்பின் 1969-ஆம் ஆண்டிலிருந்து தன்னை திண்டுக்கல் மாவட்டம், காந்திகிராமம், கஸ்துாரிபா மருத்துவமனையில், மருத்துவ சேவைக்காக முழுவதுமாக ஈடுபடுத்திக்கொண்டவர். மகப்பேறு பிரிவில் தன்னை முழுமையாக அர்ப்பணித்து, சின்னாளப்பட்டி மற்றும் சுற்று வட்டார கிராமங்கள் தவிர மாவட்டத்தின் பிற பகுதிகளிலிருந்தும் வரக்கூடிய மகளிர்களை பாசத்துடனும், கனிவுடனும் மருத்துவம் அளித்து தனது மருத்துவச் சேவையை தொடர்ந்து வந்துள்ளார். இவ்வாறு எண்ணற்ற கர்ப்பிணி பெண்களுக்கு சிகிச்சை அளித்து இவரால் பயனடைந்துள்ளனர்.

கிராம மக்களின் ஆரோக்கியத்தில் அக்கரையும், அன்பும் கொண்ட மரு.கௌசல்யாதேவி அவர்கள் கிராமப்புற மக்களின் மருத்துவத் தேவைகள் என்னென்ன என்பதை அறிந்து அவர்களுக்கு மருத்துவ உதவியாளர்கள் பயிற்சி, பெண்களுக்கான மருத்துவ உதவிச் செவிலியர் பயிற்சி, தாய்-சேய் நலப்பயிற்சி, அடிப்படை கிராம சுகாதாரக் கண்காணிப்பாளர் பயிற்சி போன்ற கிராமம் சார்ந்த பயிற்சிகள் பலவற்றை ஆரம்பித்து அப்பகுதிகளில் பெண்களுக்குரிய மருத்துவப் பிரிவில் பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியவர் மரு.கௌசல்யாதேவி அவர்கள்.

தனது அரசுப் பணியை ராஜினாமா செய்துவிட்டு காந்திகிராமம் பணியாளராகவே தொடர விரும்பி திருமதி சௌந்திரம் அம்மாவிடம் ஆசி பெற்று காந்தி கிராமத்தில் கஸ்துாரிபா மருத்துவமனையில் தனது பொதுவாழ்வை துவக்கிய மரு.கௌசல்யாதேவி அவர்கள் ஆதரவற்ற குழந்தைகள் கவனிப்பு, மாற்றுத்திறனாளிகளுக்கான மறுவாழ்வு, கிராமப்புறச் சுகாதாரச் சூழல் மேம்பாடு போன்ற கிராமப்புறம் சார்ந்த வளர்ச்சிப் பணிகளுக்கு தன்னை முழுமையாக அர்ப்பணித்து, அவர்களின் நலன் சார்ந்த திட்டங்களை முன்னெடுத்துள்ளார். அதிலும் அவர் வெற்றியும் கண்டுள்ளார்.

கஸ்துாரிபா மருத்துவமனையில் கடந்த 55 ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றிய மரு.கௌசல்யாதேவி அவர்கள் ஊதியமின்றியே சேவை செய்து வந்தவர். மூன்று தலைமுறைகளுக்கு பிரசவம் பார்த்த மருத்துவர். அப்பகுதி மக்களின் கைராசிக்கார அம்மாவாக திகழ்ந்துள்ளார் என்பதனை நினைக்கும்பொழுது உள்ளம் நெகிழ்ச்சி அடைகிறது. அன்னாருடைய மறைவு மனதிற்கு கனத்தையும், வேதனையையும் அளிக்கிறது.

மரு.கௌசல்யாதேவி அவர்களின் காலத்தில்தான் கஸ்துாரிபா மருத்துவமனை பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி, விருதுகளைப் பெற்றுள்ளது. இம்மருத்துவமனையின் குடும்ப நலப்பணிகளுக்கான தேசிய விருதை மூன்று முறை பெற்றுள்ளது என்பதையும், 1979-ஆம் ஆண்டுகளில் அரசு சாரா மருத்துவமனைகளில் பெரிய அளவில் சிறப்பாக குடும்பக் கட்டுப்பாட்டு அறுவைச் சிகிச்சைகள் செய்த வகையில் இந்திய அளவில் தேசிய விருதையும் பெற்றுக்கொடுத்த பெருமை மருத்துவர் அவர்களையே சாரும். குடும்ப நல மருத்துவப் பணிகளுக்கென்று நமது மாநில அரசு 14 முறை கஸ்தூரிபா மருத்துவமனைக்கு விருது வழங்கியுள்ளது என்றால் மருத்துவர் அவர்களின் மகத்தான பணியே ஆகும். மேலும், சுமார் 10,000க்கும் மேற்பட்ட மகப்பேறு சிகிச்சை மற்றும் குடும்பக்கட்டுப்பாடு சிகிச்சை மேற்கொண்டு சாதனை படைத்துள்ளார்.

கஸ்தூரிபா மருத்துவமனையின் வாழ்நாள் அறங்காவலராக திகழ்ந்த மரு.கௌசல்யா தேவி அவர்கள் கிராமப்புற மருத்துவம், பெண்கள்- குழந்தைகள் நலவாழ்வு மருத்துவம், ஆரோக்கியம் தொடர்பான விழிப்புணர்வுப் பணிகளையும் செய்து பெண்களின் பாதுகாவலராக திகழ்ந்தவர். அவர்கள் வயது மூப்பு காரணமாக 24.04.2025 அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னாருக்கு ஏராளமான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மரு.கௌசல்யா தேவி அவர்கள் உடலுக்கு, தமிழ்நாடு அரசின் சார்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மேலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.அ.பிரதீப், இ.கா.ப., அவர்கள் உட்பட ஏராளமானோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.