HRNC – 10 Marriage Ceremony – Abirami Amman Temple

செ.வெ.எண்:-48/2023
நாள்: 23.02.2023
திண்டுக்கல் மாவட்டம்
திண்டுக்கல் மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக 10 இணைகளுக்கு திருக்கோயில்களின் சார்பில் திருமண விழா திண்டுக்கல், அபிராமி அம்மன் திருக்கோயிலில் திண்டுக்கல் மாநகராட்சி மேயர் திருமதி ஜெ.இளமதி ஜோதி பிரகாஷ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படியும், 2022-2023-ஆம் ஆண்டின் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மானிய கோரிக்கை விவாதத்தின் போது மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் அவர்களால் வெளியிடப்பட்ட அறிவிப்பின்படியும், திண்டுக்கல் மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக 10 இணைகளுக்கு திருக்கோயில்களின் சார்பில் திருமண விழாவானது திண்டுக்கல், அபிராமி அம்மன் திருக்கோயிலில் மதிப்பிற்குரிய திண்டுக்கல் மாநகராட்சி மேயர் திருமதி ஜெ.இளமதி ஜோதி பிரகாஷ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இதில், 10 இணைகளுக்கும் 10 எண்ணிக்கையிலான திருமாங்கல்யம் (தலா 4 கிராம் தங்கம்), பட்டு வேஷ்டி, சட்டை, பட்டு புடவை, மாலை, புஷ்பம், மெட்டி, மணமகன், மணமகள் வீட்டார் சுமார் 300 நபர்களுக்கான உணவும், திருமண இணைகளுக்கு சீர்வரிசை பொருட்களாக கைக்கடிகாரம், பிரிட்ஜ், மிக்சி, கிரைண்டர், பீரோ, கட்டில், மெத்தை மற்றும் பாத்திரங்கள் உள்ளிட்ட சுமார் ரூ.8.32 இலட்சம் மதிப்பிலான சீர்வரிசை பொருட்கள் ஆகியவை வழங்கப்பட்டது. திருமண விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை திண்டுக்கல் இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் திருமதி ப.பாரதி, உதவி ஆணையர் வெ.சுரேஷ், திருக்கோயில் செயல் அலுவலர்கள், ஆய்வாளர்கள் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் ம.சுப்பிரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.