HSC result
செ.வெ.எண்:-29/2025
நாள்:-08.05.2025
திண்டுக்கல் மாவட்டம்
மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வில் முடிவுகள் திண்டுக்கல் மாவட்டம் 94.90 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
மாணவ, மாணவிகள் உயர்கல்விப் படிப்பை உறுதி செய்வதற்கான பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
திண்டுக்கல் மாவட்டம், மார்ச் 2025ல் நடைபெற்ற 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 216 பள்ளிகளைச் சார்ந்த 9,716 மாணவர்கள், 11,009 மாணவிகள் என மொத்தம் 20,725 பேர் தேர்வு எழுதினர். அதில் 9,007 மாணவர்கள், 10,661 மாணவிகள் என மொத்தம் 19,668 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 94.90 சதவீதம் தேர்ச்சி ஆகும்.
அரசு மேல்நிலைப்பள்ளிகளை பொறுத்தவரையில் 8,311 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதியதில் 7,586 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர், அரசுப்பள்ளிகள் தேர்ச்சி சதவீதம் 91.28 ஆகும்.
மாவட்டத்தில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற மொத்த பள்ளிகள் 67 ஆகும். இதில் அரசுப்பள்ளிகள் 17 ஆகும். மாவட்டத்தில் உள்ள மாணவர்கள் மட்டும் பயிலும் பள்ளியின் தேர்ச்சி சதவீதம் 91.58 ஆகும். மாணவிகள் மட்டும் பயிலும் பள்ளிகள் தேர்ச்சி சதவீதம் 97.12 ஆகும். இருபாலர் பயிலும் பள்ளிகள் தேர்ச்சி சதவீதம் 94.65 ஆகும்.
தேர்வில் தோல்வியுற்ற மாணவர்கள் அனைவரும், ஜுன் மாதம் நடைபெற உள்ள உடனடித்தேர்வுக்கு விண்ணப்பிக்க தலைமை ஆசிரியர்கள் மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு அரசு மாணவ, மாணவிகளின் கல்வி மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. பள்ளிக் கல்வியை முடித்த மாணவ, மாணவிகள் உயர்கல்விப் படிப்பை உறுதி செய்வதற்கான பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பள்ளிப் படிப்பை முடித்த மாணவ, மாணவிகள் உயர்கல்வியில் மருத்துவம், பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்ந்து படிப்பதற்கான வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைகள் வழங்கும் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
திண்டுக்கல் மாவட்டம் கிராமப்புறங்கள் நிறைந்த மாவட்டம் ஆகும். ஏராளமான மாணவ, மாணவிகள் தங்கள் பள்ளிக் கல்வியை கிராமப்புற பள்ளிகளில் படித்து வருகின்றனர். இம்மாணவ, மாணவிகளுக்கு வழிகாட்டும் நோக்கில் ‘உயர்வுக்குப்படி – உயர்கல்வி வழிகாட்டி குழு’ அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ‘கட்டுப்பாட்டு அறை’யில் தங்கள் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி, ‘கல்லூரிக் கனவு’ மற்றும் ‘உயர்வுக்குப்படி’ போன்ற நிகழ்ச்சிகள் மூலம் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவரையும் உயர்கல்வியில் சேர்க்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திண்டுக்கல் மாவட்டத்தைச் சார்ந்த மாணவச் செல்வங்கள் உயர்கல்வி படிப்புகள் மற்றும் கல்லூரிகள் தொடர்பான தங்கள் சந்தேகங்கள், தேவையான விபரங்களை ‘உயர்கல்வி கட்டுப்பாட்டு அறை’யின் கட்டணமில்லா தொலைபேசி எண் 18004250047 அல்லது வாட்ஸ்அப் எண் 7598866000 வாயிலாக தொடர்பு கொண்டு தகுந்த ஆலோசனைகள் பெறலாம். திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை ‘உயர்கல்வி வழிகாட்டி குழு’ உறுப்பினர்கள் மாணவ, மாணவிகளுக்கு உரிய வழிகாட்டுதல்கள் வழங்க தயாராக இருப்பர். ‘உயர்கல்வி கட்டுப்பாட்டு அறை’யின் துணை கொண்டு அவரவர்க்கு விருப்பமும், ஆர்வமும் உள்ள படிப்புகளைத் தேர்ந்தெடுத்து உயர்கல்வியைத் தொடரலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.