Jamabhandhi Oddanchatram-1432 Fasali

செ.வெ.எண்:-41/2023
நாள்:-24.05.2023
திண்டுக்கல் மாவட்டத்தில் 1432-ஆம் பசலி வருவாய் தீர்வாயம் இன்று தொடங்கியது.
ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாய அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் வருவாய் தீர்வாயம் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டத்தில் 1432-ஆம் பசலி வருவாய் தீர்வாயம் இன்று(24.05.2023) தொடங்கியது. ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று வருவாய் தீர்வாயம், வருவாய் தீர்வாய அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
1432-ஆம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் இன்று(24.05.2023) முதல் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் தொடங்கப்பட்டு தொடர்ந்து நடைபெற உள்ளது. இந்த வருவாய் தீர்வாயத்தின்போது பெறப்படும் மனுக்கள் மீது உடனடி தீர்வு காண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். வீட்டுமனைப் பட்டா, பட்டா மாறுதல், உட்பிரிவு பட்டா மாறுதல், ஆக்கிரமிப்பு அகற்றுதல் மற்றும் வாரிசு சான்றிதழ் உள்ளிட்ட பொதுமக்கள் நலன் சார்ந்த பிரச்னைகள் ஆகியவற்றிற்கு குறிப்பிட்ட காலத்திற்குள் தகுதியுடைய அனைத்து மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு உடனடி தீர்வு காண சம்மந்தப்பட்ட அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
அதன்படி, இன்றைய தினம், ஒட்டன்சத்திரம் வட்டம், கீரனுார் குறுவட்டத்திற்குட்பட்ட கீரனுார், சின்னக்காம்பட்டி, வாடிப்பட்டி, எல்லப்பட்டி, அத்தம்பட்டி, மார்க்கம்பட்டி, குத்திலிப்பை ஆகிய 8 வருவாய் கிராமங்களுக்கான பதிவேடுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டு, மேற்கண்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். மேலும், வருவாய் தீர்வாய நிகழ்ச்சி அறிவிப்பின்போது, கிராம மக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது மேற்கொண்ட நடவடிக்கையின்படி, 3 மனுதாரர்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டாக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். முன்னதாக வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நடவு செய்தார். மேலும், அங்கு நில அளவை கருவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில், உதவி ஆட்சியர்(பயிற்சி) செல்வி பிரியங்கா, வட்டாட்சியர் திரு.முத்துச்சாமி, வட்ட வழங்கல் அலுவலர் திரு.பிரசன்னா, உதவி இயக்குநர் (நிலஅளவை) திரு.சிவக்குமார், வட்டாட்சியர்(சமூக பாதுகாப்புத்திட்டம்) திரு.சசி, துணை வட்டாட்சியர்கள் திரு.ராமசாமி, திரு.மணிகண்டன், வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.காமராஜ் மற்றும் தொடர்புடைய பல்வேறு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.