Eligible Students can apply for Government Kallar Students Hostel
செ.வெ.எண்:-41/2021
நாள்:17.11.2021
அரசு கள்ளர் மாணவர் மற்றும் மாணவியர் விடுதிகளில் சேர தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
தமிழ்நாடு அரசால், திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு கள்ளர் மாணவர் மற்றும் மாணவியர்களுக்கென மொத்தம் 7 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. அதன்படி, மாணவர்களுக்கு 5, மாணவியர்களுக்கு 2 என மொத்தம் 7 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. பள்ளி விடுதிகளில் 4 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயில்கின்ற மாணவர், மாணவியர்கள் சேரத் தகுதியுடையவர்கள் ஆவர். கள்ளர் சீரமைப்பு விடுதிகளில் அனைத்து வகுப்பைச் சார்ந்த மாணவ, மாணவியர்களும் குறிப்பிட்ட விகிதாச்சார அடிப்படையில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர்.
அனைத்து விடுதி மாணவ, மாணவியர்களுக்கும் உணவும், தங்கும் வசதியும் அளிக்கப்படும். 10-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு சீருடைகள் வழங்கப்படும். 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியருக்கு சிறப்பு வழிகாட்டிகள் வழங்கப்படும். மலைப்பிரதேசங்களில் இயங்கும் விடுதிகளில் தங்கி பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு கம்பளி மேலாடைகள் வழங்கப்படும்.
விடுதிகளில் சேருவதற்கு மாணவ, மாணவியரின் பெற்றோர்/பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.2,00,000-க்கு மிகாமல் இருக்க வேண்டும். இருப்பிடத்திலிருந்து பயிலும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்த பட்சம் 8 கி.மீ.க்கு மேல் இருக்க வேண்டும். இந்த தூர விதி மாணவியருக்கு பொருந்தாது.
தகுதியுடைய மாணவ, மாணவியர்கள் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர்ஃ காப்பாளினிகளிடமிருந்தோ அல்லது மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திலுள்ள கள்ளர் சீரமைப்பு இணை இயக்குநர் அலுவலகத்திலிருந்தோ இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பள்ளி விடுதி காப்பாளர், காப்பாளினியிடம் மற்றும் மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் உள்ள கள்ளர் சீரமைப்பு இணை இயக்குநர் அலுவலகத்தில் 22.11.2021-க்குள் சமர்ப்பிக்க வேண்டும். மாணவ, மாணவியர்கள் விண்ணப்பிக்கும் பொழுது சாதி மற்றும் பெற்றோரது ஆண்டு வருமானம் குறித்த சான்றிதழ்கள் யாதும் அளிக்கத் தேவையில்லை. விடுதியில் சேரும் பொழுது மட்டும் இச்சான்றிதழ்களை அளித்தால் போதுமானது. தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு விடுதியிலும் முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களின் குழந்தைகளுக்கென தனியே 5 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
எனவே தகுதியுடைய மாணவ, மாணவியர்கள் அரசின் இச்சலுகைகள் பெற்று, பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.