Kalluri Kanavu – Discussion

செ.வெ.எண்:-16/2025
நாள்:-06.05.2025
திண்டுக்கல் மாவட்டம்
கல்லூரி கனவு ஆலோசனைக் கூட்டம்
மாணவ, மாணவிகள் உயர்கல்வி பயிலுவதை உறுதி செய்யும் வகையில், அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்களுக்கான கலந்துரையாடல் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளிப் படிப்பை முடித்த மாணவ, மாணவிகள், உயர்கல்வி பயிலுவதை உறுதி செய்யும் வகையில், அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்களுக்கான கலந்துரையாடல் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் திண்டுக்கல் எம்.எஸ்.பி. சோலை நாடார் மேல்நிலைப்பள்ளியில் இன்று(06.05.2025) நடைபெற்றது.
இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசியதாவது:-
தமிழ்நாடு அரசு மாணவ, மாணவிகளின் கல்வி மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பள்ளிக் கல்வியை முடித்த மாணவ, மாணவிகளின் உயர்கல்வி படிப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அரசின் திட்டங்களை பொதுமக்களுக்கு கொண்டு சென்று சேர்ப்பதில் மாவட்ட நிர்வாகம் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
அந்த வகையில், திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளிப் படிப்பை முடித்த மாணவ, மாணவிகள் உயர்கல்வியில் சேர்ந்திடும் வகையில், அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்களுக்கான கலந்துரையாடல் கூட்டம் இன்று நடத்தப்படுகிறது.
ஆசிரியர் பணி என்பது அர்ப்பணிப்புடன் கூடிய சிறந்த சமூக சேவையாகும். மாணவ, மாணவிகளை இந்த சமூகத்திற்கு நல்ல குடிமகனாக உருவாக்க ஆசிரியர்களால் முடியும். ஆசிரியர்கள் சொல்வது குழந்தைகள் மனதில் ஆழப்பதிந்து விடுகிறது. ஆசிரியர்கள் சொல்வதை தெய்வ வாக்குபோல் மாணவ, மாணவிகள் அப்படியே நம்புகின்றனர்.
பள்ளித்தலைமை ஆசிரியர், அனைத்து உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் இணைந்து தற்போது பொதுத்தேர்வு எழுதியுள்ள மாணவர்களின் திறனுக்கு ஏற்ப பொறியியல், மருத்துவம், கலை மற்றும் அறிவியல், பாலிடெக்னிக், பாராமெடிக்கல் போன்ற பல்வேறு வகையான உயர்கல்விகளை பயில்வது குறித்து விவாதிக்க வேண்டும். மாணவ, மாணவியருக்கு தக்க வழிகாட்டுதல்கள் வழங்கி அவர்களின் திறனுக்கு ஏற்ப தர வரிசையில் மேல் நிலையில் உள்ள கல்வி நிலையங்களில் உயர் கல்வி பயில்வதற்கு உதவிகள் செய்ய வேண்டும்.
பொதுத்தேர்வு முடிவுகள் வந்தவுடன் உயர் கல்விக்கு விண்ணப்பிப்பதற்குத் தேவையான சான்றிதழ்களை பெறுவதற்கு தக்க ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்கிட வேண்டும். மிகவும் ஆர்வமும் திறமையும் உள்ள மாணவர்களுக்கு உயர்கல்வி சேர்வதில் சந்தேகங்கள் மற்றும் இடர்பாடுகள் இருப்பின், மாவட்ட கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்டு தக்க உதவிகள் பெறுவதற்கு முயற்சி செய்ய வேண்டும்.
மாவட்ட அளவில் அவ்வப்போது நடைபெறும் கல்லூரிக் கனவு முகாம்,தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தால் நடத்தப்படும் பாலிடெக்னிக் சேர்க்கை முகாம் மற்றும் உயர்வுக்குப் படி முகாம்களில் மாணவர்களை கலந்துகொள்ளச் செய்து உயர்கல்வி சேர்க்கையினை அதிகப்படுத்த வேண்டும். பள்ளியில் பொதுத்தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் உயர்கல்வியில் சேர்வதை உறுதி செய்ய வேண்டும்.
திண்டுக்கல் மாவட்டத்தில் விரைவில் நடைபெறவுள்ள கல்லூரிக்கனவு முகாம்களில், அவரவர் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் (மொத்தம் 3252 மாணவர்கள்) தவறாது கலந்து கொள்வதை உறுதி செய்ய வேண்டும்.
உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்கள் தங்களுடைய மாணவர்களின் தொடர்பு எண் மற்றும் முகவரியை தெளிவாக தெரிந்து வைத்திருத்தல் வேண்டும். மாணவர்களின் ஆதார் எண் போன்ற முழு விவரங்களை ஆண்டு வாரியாக குறிப்பிட்டு தனி பதிவேடாக பராமரித்தல் வேண்டும். ஒவ்வொரு பள்ளிக்கும் வழங்கப்பட்டுள்ள உயர்கல்வி வழிகாட்டி புத்தகத்தில் உள்ள முழு விவரங்களையும் மாணவர்களுக்கு எடுத்துரைத்திட வேண்டும். பள்ளிக் கல்வித்துறையின் மூலம் வழங்கப்படும் உயர் கல்வி வழிகாட்டி செயல்பாடுகளை பள்ளியில் உள்ள ஹைடைக் ஆய்வகம்( Hi-Tech Lab) மூலம் நடைமுறைபடுத்துதல் வேண்டும். மேல்நிலைக் கல்வி முடிக்கும் மாணவர்களின் உயர்கல்வி ஆர்வத்தை அறிந்து அதை பதிவு செய்து செயல்படுத்துதல் வேண்டும். போட்டித் தேர்வுக்கு ஆர்வம் உள்ள மாணவர்களை ஊக்கப்படுத்துதல் மற்றும் அவர்களுக்கு முறையான விளக்கம் அளித்திட வேண்டும். மாணவர்களுக்கு ஆர்வம் உள்ள படிப்புகளை தேர்வு செய்ய அவர்களுக்கு உரிய ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல் வழங்கிட வேண்டும்.
தற்போது, 12-ஆம் வகுப்பு முடித்துள்ள மாணவ, மாணவிகள் அனைவரையும் 100 சதவீதம் உயர்கல்வியில் சேர்க்கை செய்வதே ”கல்லூரிக் கனவு” நிகழ்ச்சியின் நோக்கமாகும். 12-ஆம் வகுப்பு முடித்தோரில் சிறப்புக் கவனம் தேவைப்படும் மாற்றுத்திறன் மாணவ, மாணவிகள், அரசு நலத்துறை பள்ளிகளில் பயின்றோர், பெற்றோரை இழந்தோர், இடையிலேயே பள்ளிக்கு வருகை புரியாத மாணவ, மாணவிகள், பழங்குடியினர் மற்றும் பட்டியல் இனத்தவர் அரையாண்டுத் தேர்வுக்கு வருகை புரியாதோர் மற்றும் தேர்ச்சி பெறாதோர், பின்தங்கிய கிராமங்களில் வசிக்கும் மாணவ, மாணவிகள் ஆகியோர் மீது கூடுதல் கவனம் செலுத்தி ”கல்லூரிக் கனவு” முகாமிற்கு வரவழைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளிக்கல்வி முடித்த அனைத்து மாணவ, மாணவிகளையும் உயர்கல்வி படிப்பில் சேருவதை உறுதி செய்திட அனைவரும் ஒன்றிணைந்து செயலாற்றிட வேண்டும், என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திருமதி ப.உஷா மற்றும் துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.

.

.