Kalluri Kanavu Meeting

செ.வெ.எண்:-11/2025
நாள்:-05.05.2025
திண்டுக்கல் மாவட்டம்
”நான் முதல்வன்” திட்டத்தின் கீழ், ”கல்லூரிக் கனவு” எனும் நிகழ்ச்சி நடத்துவது தொடர்பாக முன் திட்டமிடல் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டத்தில் ”நான் முதல்வன்” திட்டத்தின் கீழ், ”கல்லூரிக் கனவு” எனும் நிகழ்ச்சி நடத்துவது தொடர்பாக முன் திட்டமிடல் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று(05.05.2025) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சிறப்புத் திட்டமான ”நான் முதல்வன்” திட்டத்தின் கீழ், ”கல்லூரிக் கனவு” எனும் நிகழ்ச்சியை அனைத்து மாவட்டங்களிலும் 12.05.2025 முதல் 16.05.2025 வரை நடத்திட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் இம்முகாமை 3 கட்டங்களாக நடத்திடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தற்போது, 12-ஆம் வகுப்பு முடித்துள்ள மாணவ, மாணவிகள் அனைவரையும் 100 சதவீதம் உயர்கல்வியில் சேர்க்கை செய்வதே ”கல்லூரிக் கனவு” நிகழ்ச்சியின் நோக்கமாகும். 12-ஆம் வகுப்பு முடித்தோரில் சிறப்புக் கவனம் தேவைப்படும் மாற்றுத்திறன் மாணவ, மாணவிகள், அரசு நலத்துறை பள்ளிகளில் பயின்றோர், பெற்றோரை இழந்தோர், இடையிலேயே பள்ளிக்கு வருகை புரியாத மாணவ, மாணவிகள், பழங்குடியினர், அரையாண்டுத் தேர்வுக்கு வருகை புரியாதோர் மற்றும் தேர்ச்சி பெறாதோர் ஆகியோர் மீது கூடுதல் கவனம் செலுத்தி ”கல்லூரிக் கனவு” முகாமிற்கு வரவழைக்க திட்டமிடப்பட்டுள்ளது, என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி இரா.ஜெயபாரதி, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநர் திரு.சதீஸ்பாபு, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) திரு.மு.கோட்டைக்குமார், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திருமதி ப.உஷா மற்றும் துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.

.