Kodaikanal – inspection-Falls – Vilpatti

செ.வெ.எண்:-24/2025
நாள்:-08.05.2025
திண்டுக்கல் மாவட்டம்
கொடைக்கானல் வட்டம், வில்பட்டி கிராமம் பள்ளங்கியில் உள்ள அருவி பகுதியில் சுற்றுலாப் பயணிகளுக்கான பாதுகாப்பு மற்றும் அடிப்படைத் தேவைகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வட்டம், வில்பட்டி கிராமம் பள்ளங்கியில் உள்ள அருவி(பெப்பர் பால்ஸ்) பகுதியில் சுற்றுலாப் பயணிகளுக்கான பாதுகாப்பு மற்றும் அடிப்படைத் தேவைகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமாக உள்ளது. மேலும், கொடைக்கானல் வட்டம், வில்பட்டி கிராமம் பள்ளங்கி பகுதியில் ஒரு சிறிய அருவி(பெப்பர் பால்ஸ்) உள்ளது. தற்போது கோடை விடுமுறை என்பதால் இந்த அருவிக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இங்கு அடிப்படை வசதிகள் மற்றும் உரிய பாதுகாப்பு அம்சங்கள் ஏற்படுத்த சுற்றுலாப் பயணிகளின் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக, வருவாய்த்துறை அலுவலர்கள், சுற்றுலாத்துறை அலுவலர்கள் ஆகியோருடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சுற்றுலாப் பயணிகள் குளிக்கும் இடங்கள், உடைமாற்றும் இடங்களில் தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினரை பணியமர்த்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், இந்த அருவிப் பகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய அடிப்படைத் தேவைகள், பாதுகாப்பு நடவடிக்கைகள், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் தொடர்பாக துறை அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு, அறிக்கை தயார் செய்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பார்வைக்கு அனுப்பி, உரிய அனுமதி பெற்று தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
அட்வென்சர் டூரிசம் உட்பட எந்தவொரு சுற்றுலா என்றாலும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்துவதுடன், உரிய அனுமதி பெற்று நடத்தப்பட வேண்டும்.
கொடைக்கானலை பொறுத்தவரை இந்தப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் சுமார் 3 மாதங்கள்தான். அதை கருத்தில் கொண்டு, அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
தமிழ்நாட்டில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக திண்டுக்கல் மாவட்டம், சிறுமலையில் சுற்றுலா மேம்பாட்டுப் பணிகளுக்காக ரூ.10.00 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், கொடைக்கானல் பகுதியில் சுற்றுலா மேம்பாட்டுப் பணிகளை மேம்படுத்த பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து, கொடைக்கானலில் நாய்கள் கருத்தடை மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, துறை அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.

.

.

.

.