Close

Kodaikanal-Vellakevi Road -foundation

Publish Date : 08/05/2025
.

செ.வெ.எண்:-22/2025

நாள்:-07.05.2025

திண்டுக்கல் மாவட்டம்

கொடைக்கானல் மலைப்பகுதி கிராமங்களுக்கு ரூ.32.71 கோடி மதிப்பீட்டில் 2 புதிய தார்ச்சாலைகள் அமைக்கும் பணிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் மற்றும் பழனி சட்டமன்ற உறுப்பினர் திரு.இ.பெ.செந்தில்குமார் ஆகியோர் அடிக்கல் நாட்டினர்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வட்டம், வெள்ளகவி ஊராட்சி, வட்டக்கானல் முதல் வெள்ளக்கவி வரை ரூ.21.74 கோடி மதிப்பீட்டிலும். வடகவுஞ்சி ஊராட்சி, கோப்பைகாடு முதல் செம்பிரான்குளம் வரை ரூ.10.97 கோடி மதிப்பீட்டிலும் புதிய தார்ச்சாலை அமைக்கும் பணிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் மற்றும் பழனி சட்டமன்ற உறுப்பினர் திரு.இ.பெ.செந்தில்குமார் ஆகியோர் இன்று(07.05.2025) அடிக்கல் நாட்டினர்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப் பகுதியில் வெள்ளகவி ஊராட்சி உள்ளது. சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்த மலைக்கிராமம் சாலை பகுதியிலிருந்து சுமார் 8 கி.மீட்டர் துாரத்தில் உள்ளது. இந்த கிராமத்திற்கு மலைப்பாதை வழியாக நடந்துதான் செல்ல வேண்டும். அங்குள்ள பொதுமக்கள் தங்கள் பகுதி விளைபொருட்களை தலைச்சுமையாகவோ அல்லது குதிரை மூலம் பொதிசுமையாகவோ 8 கி.மீட்டர் துாரம் கரடு முரடான மலைப்பாதை வழியாக கொண்டு வந்து, சாலை பகுதியை அடைந்து, பின்னர் அங்கிருந்து வாகனங்களில் நகர் பகுதிக்கு வாகனங்களில் கொண்டு செல்வது வழக்கம். இந்த கிராமத்திற்கு புதிய தார்ச்சாலை அமைக்கும் பணிக்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் பேசியதாவது:-

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வட்டம், வெள்ளகவி ஊராட்சியில் 350-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சுமார் 400 ஆண்டு காலமாக வசித்து வருகின்றனர். மலைப்பகுதியில் உள்ள இந்த கிராமத்திற்கு சாலை வசதி போன்ற அடிப்படை வசதிகள் கோரி பொதுமக்கள் மனுக்கள் அளித்தனர்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் ஆலோசனையின்பேரில் வெள்ளகவி கிராமத்திற்கு சாலை வசதி ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, ரூ.22.00 கோடி மதிப்பீட்டில் முதன்முறையாக புதியதாக தார்ச்சாலை அமைக்கும் பணிக்கு இன்று(07.05.2025) அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் அவர்களின் ஆலோசனையின் பேரில், பழனி சட்டமன்ற உறுப்பினர் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க வெள்ளகவி கிராம மக்களுக்கு ரேஷன் பொருட்களை அவர்கள் கிராமத்திற்கே கொண்டு சென்று வழங்கும் பணி கடந்த மாதம் தொடங்கப்பட்டது. அதேபோல், வெள்ளகவி ஊராட்சிக்குட்பட்ட சின்னூர், பெரியூர் ஆகிய மலைக்கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கும் ரேஷன் பொருட்கள் அவர்கள் கிராமங்களுக்கே கொண்டு சென்று வழங்கப்படுகிறது. தொடர்ந்து அவர்கள் கிராமத்திற்கே ரேஷன் பொருட்கள் கொண்டு சென்று வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பள்ளி மற்றும் சுகாதார வசதிகள் குறித்த பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. பல்வேறு நல்ல உள்ளங்களில் கூட்டு முயற்சியாக இந்த சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. சுமார் ரூ.22.00 கோடி மதிப்பீட்டில் 3 கி.மீட்டர் தூரத்திற்கு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 3.2 கிலோ மீட்டர் தூரம் சாலை பணிகளை இந்த ஆண்டு நிர்வாக ஒப்புதல் பெறுவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மலை பகுதியில் உள்ள உட்கடை கிராமங்களில் வசிக்கக்கூடிய மக்களுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை நிறைவேற்றிட பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். குறிப்பாக பழங்குடியின மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்த நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார். எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற வகையில் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், 15 நாட்களுக்கு ஒரு முறை நடைபெறும் ஆய்வுக்கூட்டத்தில், மலை கிராம மக்களுக்கு தேவையான சாலை வசதி, தெரு விளக்கு, குடிநீர் வசதி, சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகளை மேற்கொள்ள அறிவுறுத்தி வருகிறார்கள்.

சுமார் 400 ஆண்டுகளாக உலகிற்கே தெரியாத ஒரு மலைக் கிராமத்திற்கு புதியதாக தார்ச்சாலை ரூ.22.00 கோடி மதிப்பீட்டில் இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு எண்ணற்றவர்களின் சின்னச்சின்ன முயற்சியின் மூலமாக இப்பணிகள் நடைபெறுகிறது, என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், பழனி சட்டமன்ற உறுப்பினர் திரு.இ.பெ.செந்தில்குமார் அவர்கள் பேசியதாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக எண்ணற்ற திட்டங்களை அறிவித்து, அந்த திட்டங்களின் பயன்கள் கடைக்கோடி கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கும் சென்றடையும் வகையில் செயல்படுத்தி வருகிறார்கள்.

கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் கடந்த ஆண்டு ஒரு இலட்சம் வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. நடப்பு ஆண்டு ஒரு இலட்சம் வீடுகள் கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வெள்ளகவி ஊராட்சி, வட்டக்கானல் முதல் வெள்ளக்கவி வரை நபார்டு திட்டத்தில் ரூ.21.74 கோடி மதிப்பீட்டில் புதிய தார்ச்சாலை அமைக்க இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. அதேபோல், வடகவுஞ்சி ஊராட்சி, கோப்பைகாடு முதல் செம்பிரான்குளம் வரை ரூ.10.97 கோடி மதிப்பீட்டில் புதிய தார்ச்சாலை அமைக்கும் பணிகளுக்கும் இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. அதேபோல் வடகவுஞ்சி பகுதிக்கு மும்முனை மின்சார வசதி அமைக்கும் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. சாலை அமைப்பு பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என பழனி சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி பெ.திலகவதி, கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியர் திரு.ம.திருநாவுக்கரசு, கொடைக்கானல் நகர்மன்ற தலைவர் திரு.பா.செல்லத்துரை, துணைத்தலைவர் திரு.கே.பி.என்.மாயக்கண்ணன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.

.

.