Close

KR Hostel

Publish Date : 16/06/2025

செ.வெ.எண்:-44/2025

நாள்:-13.06.2025

திண்டுக்கல் மாவட்டம்

கள்ளர் சீரமைப்பு நிருவாகத்தின் கீழ் செயல்படும் சீர்மரபினர் மாணவ, மாணவிகளுக்கான பள்ளி விடுதிகளில் சேர தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

தமிழ்நாடு அரசால் திண்டுக்கல் மாவட்டத்தில் கள்ளர் சீரமைப்பு நிருவாகத்தின் கீழ், சீர்மரபினர் மாணவ, மாணவிகளுக்கென மொத்தம் 7 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் பள்ளி மாணவர்களுக்கு 5 விடுதிகள் மற்றும் பள்ளி மாணவிகளுக்கு 2 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.

பள்ளி விடுதிகளில் 4-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயில்கின்ற மாணவ, மாணவிகள் சேரத்தகுதியுடையவர்கள் ஆவர். விடுதிகளில் சேரும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் தங்கும் வசதி மற்றும் 3 வேளை உணவு அளிக்கப்படும். அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் ஆண்டுதோறும் பாய்கள், இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை போர்வைகள், மலைப்பிரதேசங்களில் இயங்கும் விடுதிகளில் கம்பளி மேலாடைகள் வழங்கப்படும்.

10ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு 4 இணை சீருடைகள் தைத்து வழங்கப்படும். 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளின் கல்வித்திறனை மேம்படுத்தும் பொருட்டு NEET/JEE நுழைவுத்தேர்வுக்கான வினாவங்கி நூல்கள், சிறப்பு வழிகாட்டி மற்றும் வினாவங்கி நுால்கள் வழங்கப்படும்.

விடுதிகளில் சேருவதற்கு பெற்றோர் அல்லது பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.2,00,000-க்கு மிகாமல் இருக்க வேண்டும். இருப்பிடத்திலிருந்து பயிலும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்தபட்சம் 8 கி.மீட்டருக்கு மேல் இருக்க வேண்டும். இந்த தூர விதி மாணவிகளுக்கு பொருந்தாது.

தகுதியுடைய மாணவ, மாணவிகள் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதிகாப்பாளர் அல்லது காப்பாளினிகளிடமிருந்தோ அல்லது மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் உள்ள மதுரை கள்ளர் சீரமைப்பு இணை இயக்குநர் அலுவலகத்திலிருந்தோ இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பள்ளி விடுதிகளை பொறுத்தவரை சம்மந்தப்பட்ட விடுதிகாப்பாளர், காப்பாளினியிடம் அல்லது மதுரை கள்ளர் சீரமைப்பு இணை இயக்குநர் அலுவலகத்தில் 18.06.2025—ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கும்பொழுது சாதி மற்றும் பெற்றோரது ஆண்டு வருமானம் குறித்த சான்றிதழ்கள் யாதும் அளிக்கத் தேவையில்லை. விடுதியில் சேரும்பொழுது மட்டும் இச்சான்றிதழ்களை அளித்தால் போதுமானது. தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு விடுதியிலும் முகாம்வாழ் இலங்கைத் தமிழர்களின் குழந்தைகளுக்கென தனியே 5 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

எனவே, பள்ளி மாணவ, மாணவிகள் அரசின் இச்சலுகைகள் பெற்று, பயன்பெறலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.