Monday Grievance Day Petition

செ.வெ.எண்:-56/2022
நாள்: 20.06.2022
திண்டுக்கல் மாவட்டம்
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று(20.06.2022) நடைபெற்றது.
தமிழக அரசின் உத்தரவின்படி, பொதுமக்களின் குறைகளை களைவதற்காகவும், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, உரிய விசாரணை மேற்கொண்டு, தகுதியான பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காகவும், வாரந்தோறும் திங்கள்கிழமைகளில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி நடத்தப்படுகிறது.
இன்றைய மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து 198 மனுக்கள் பெறப்பட்டன. பொதுமக்களிடமிருந்து மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் பெற்றுக்கொண்டார். மேலும், பெறப்பட்ட மனுக்களில், தகுதியுடைய மனுக்கள் மீது உடன் நடவடிக்கை மேற்கொள்ள, சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்.
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் சிறப்பு ஓய்வூதியம் தலா ரூ.1000 பெறுவதற்கான ஆணைகளை 8 பயனாளிகளுக்கும், மாற்றுத்திறனாளிகள் 2 நபர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களையும், தண்ணீரில் மூழ்கி இறந்த சிறுமியின் குடும்பத்திற்கான நிவாரண உதவித்தொகை ரூ.1 லட்சத்திற்கான காசோலை ஆகியவற்றை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
மேலும், திண்டுக்கல் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு 2019-2020-ஆம் கல்வியாண்டில் சிறப்பாக பணிபுரிந்தமைக்காக சிறப்பு பாராட்டுச் சான்றிதழ்களை 8 ஆசிரியர்களுக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி வே.லதா, தனித்துணை ஆட்சியர்(சமூக பாதுகாப்புத் திட்டம்) திரு.எல்.ராஜசேகர் உட்பட துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.