Close

Monday Grievance Day Petition

Publish Date : 24/12/2024
.

செ.வெ.எண்:-59/2024

நாள்:-23.12.2024

திண்டுக்கல் மாவட்டம்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(23.12.2024) நடைபெற்றது.

தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி, பொதுமக்களின் குறைகளை களைவதற்காகவும், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, உரிய விசாரணை மேற்கொண்டு, தகுதியான பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காகவும், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் திங்கள்கிழமைதோறும் நடைபெற்று வருகிறது. இன்றைய கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 284 மனுக்கள் பெறப்பட்டன. பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி தகுதியான மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்.

இன்றையதினம், புதியதாக பதிவு செய்யப்பட்ட ஊத்துப்பாறை பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்திற்கு, திண்டுக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் சார்பில் ரூ.1.25 இலட்சம் மதிப்பிலான கேன், பால் அளவை கருவிகள், பால் பரிசோதனை கருவிகள் மற்றும் பதிவேடுகள், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை சார்பில் ஒரு பயனாளிக்கு தையல் இயந்திரம் ஆகியவற்றை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வழங்கல் அலுவலர் திருமதி சு.ஜெயசித்ரகலா, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் திருமதி மு.முருகேஸ்வரி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) திரு.மு.கோட்டைக்குமார், தனித்துணை ஆட்சியர்(சமூக பாதுகாப்புத் திட்டம்) திருமதி கங்காதேவி, துணை ஆட்சியர்(பயிற்சி) செல்வி ராஜேஸ்வரிசுவி, திண்டுக்கல் ஆவின் பொது மேலாளர் மரு.கே.வாணீஸ்வரி, துணைப்பதிவாளர்(பால்வளம்) திருமதி பவனந்தி, உதவிப் பொதுமேலாளர் மரு.என்.பாபு, கூட்டுறவு சார்பதிவாளர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.