Monday Grievance Day Petition

செ.வெ.எண்:-01/2025
நாள்:-03.02.2025
திண்டுக்கல் மாவட்டம்
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமை வகித்து, 38 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.6.57 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(03.02.2025) நடைபெற்றது.
தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி, பொதுமக்களின் குறைகளை களைவதற்காகவும், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, உரிய விசாரணை மேற்கொண்டு, தகுதியான பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காகவும், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் திங்கள்கிழமைதோறும் நடைபெற்று வருகிறது. இன்றைய கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 176 மனுக்கள் பெறப்பட்டன. பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி தகுதியான மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்.
இன்றையக் கூட்டத்தில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து 3 பயனாளிகளுக்கு தலா ரூ.1.00 இலட்சம், 9 பயனாளிகளுக்கு தலா ரூ.6000 மதிப்பிலான தேய்ப்பு பெட்டிகள், 11 பயனாளிகளுக்கு தலா ரூ.7,000 மதிப்பிலான தையல் இயந்திரங்கள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 8 பயனாளிகளுக்கு தலா ரூ.14,500 மதிப்பிலான திறன்பேசி, 7 பயனாளிகளுக்கு தலா ரூ.15,750 மதிப்பிலான சிறப்பு சக்கர நாற்காலிகள் என 38 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.6.57 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி இரா.ஜெயபாரதி, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநர் திரு.சா.சதீஸ்பாபு, மாவட்ட வழங்கல் அலுவலர் திருமதி சு.ஜெயசித்ரகலா, மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர்(நிலம்) திரு.செல்வம், தனித்துணை ஆட்சியர்(சமூக பாதுகாப்புத் திட்டம்) திருமதி கங்காதேவி, துணை ஆட்சியர்(பயிற்சி) செல்வி ராஜேஸ்வரிசுவி, அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.