Close

Monday Grievance Day Petition

Publish Date : 10/03/2025
.

செ.வெ.எண்:-03/2025

நாள்:-03.03.2025

திண்டுக்கல் மாவட்டம்

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(03.03.2025) நடைபெற்றது.

தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி, பொதுமக்களின் குறைகளை களைவதற்காகவும், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, உரிய விசாரணை மேற்கொண்டு, தகுதியான பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காகவும், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் திங்கள்கிழமைதோறும் நடைபெற்று வருகிறது. இன்றைய கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 187 மனுக்கள் பெறப்பட்டன. பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி தகுதியான மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்.

இன்றையக் கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.1,45,000/- மதிப்பீட்டில் திறன்பேசி(Smart Phone), மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு இலவச தேய்ப்பு பெட்டிகள் மற்றும் 5 பயனாளிகளுக்கு இலவச தையல் இயந்திரங்கள் உட்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

முன்னதாக, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் மூலமாக பொதுமக்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் அரசின் திட்டங்களை பெறுவதற்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஏற்படுத்தப்பட்டது.

மேலும், ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் செயல்படும் உயர்நிலைப்பள்ளியில் சிறப்பாக பணிபுரிந்து 10-ம் வகுப்பில் 100 சதவீத தேர்ச்சி பெறச் செய்த 4 ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள். மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் சார்பில் நடைபெற்ற கலைத்திருவிழாவில் நடத்தப்பட்ட கட்டுரைப்போட்டி, பேச்சுப்போட்டி, ஓட்டப்போட்டி, 14 வயதிற்கு கீழ் உள்ள மாணவர்களுக்கான நீளம் தாண்டுதல் போட்டி, 17 வயதிற்கு கீழ் உள்ள மாணவர்களுக்கான நீளம் தாண்டுதல் போட்டி, 19 வயதிற்கு கீழ் உள்ள மாணவர்களுக்கு நீளம் தாண்டுதல் போட்டி, கல்லூரி மாணவர்களுக்கான நீளம் தாண்டுதல் போட்டி ஆகிய போட்டிகளில் முதலிடம், இரண்டாம் மற்றும் மூன்றாமிடம் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

இக்கூட்டத்தில், திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு.சக்திவேல், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்(மகளிர் திட்டம்) திட்ட இயக்குநர் திரு.சா.சதீஸ்பாபு, மாவட்ட வழங்கல் அலுவலர் திரு. அன்பழகன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் திருமதி மு.முருகேஸ்வரி, உதவி ஆணையாளர்(கலால்) திரு.ஆர்.பால்பாண்டி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) திரு.மு.கோட்டைக்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வளர்ச்சி) திரு.செ.முருகன், மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர்(நிலம்) திரு.செல்வம், தனித்துணை ஆட்சியர்(சமூக பாதுகாப்புத் திட்டம்) திருமதி கங்காதேவி, அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.