Monday Grievance Day Petition

செ.வெ.எண்:-74/2025
நாள்:-28.04.2025
திண்டுக்கல் மாவட்டம்
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(28.04.2025) நடைபெற்றது.
தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி, பொதுமக்களின் குறைகளை களைவதற்கு, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, உரிய விசாரணை மேற்கொண்டு, தகுதியான பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காகவும், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் திங்கள்கிழமைதோறும் நடைபெற்று வருகிறது. இன்றைய கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 270 மனுக்கள் பெறப்பட்டன. பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி தகுதியான மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்.
இன்றைய தினம் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சேர்ந்த மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக தையல் தொழிலில் ஈடுபட்டு வருகின்ற சுய உதவிக் குழுக்களுக்கு ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு அமைத்தல் திட்டத்தின் கீழ் 2 பயனாளிகளுக்கு தலா ரூ.3.00 இலட்சம் வீதம் மொத்தம் ரூ.6.00 இலட்சம் மானியத் தொகை மற்றும் திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் வட்டம், கீழக்கோட்டை கிராமம் உட்கடை அண்ணாநகரைச் சேர்ந்த சாந்தியம்மாள் க.பெ.சரவணன் என்பவர் வறுமையில் உள்ளதால் தனது மகளுக்கு கல்வி கட்டணம் செலுத்த உதவி கோறி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளித்தார். இம்மனுவின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு, மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை கொடை நிதியிலிருந்து ரூ.24,100 க்கான காசோலை ஆகிய நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
மேலும், நத்தம் இராம்சன்ஸ் மெட்ரிக் மேனிலைப்பள்ளியில் ஏழாம் வகுப்பு பயிலும் மாணவர் செல்வன் கு.சுஜப் அவர்கள் 1330 திருக்குறளையும் காலை 7.00 மணியில் தொடங்கி இரவு 12.00 மணி வரை (12 மணி நேரம்) எழுதி ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸில் பதிவு செய்துள்ளார். இதனை பாராட்டி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சான்றிதழ்கள், பதக்கம் வழங்கி சிறப்பித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசியதாவது:-
கோடை காலத்தினை முன்னிட்டு, வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது. தூய்மை பணியாளர்கள் காலை 8.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை தூய்மைப்பணிக்காக பணியில் இருப்பது அவசியமாக உள்ளது. பணியில் இருக்கும் தூய்மைபணியாளர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஊராட்சிகள் மூலம் ரூ.10 மதிப்பில் எலுமிச்சை சாறு, தர்ப்பூசணி பழம் (Watermelon Fruit) அல்லது மோர் வழங்க ஆணையிடப்பட்டுள்ளது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் பணிபுரிந்து வரும் 3472 தூய்மை பணியாளர்களுக்கு ஒரு நாளைக்கு 2 முறை எலுமிச்சை சாறு, தர்ப்பூசணி பழம் (Watermelon Fruit) மற்றும் பழங்கள் அந்தந்த ஊராட்சிகளின் சார்பில் ஏப்ரல் 1-ந் தேதி முதல் வழங்கப்படுகிறது.
மேலும், திண்டுக்கல் மாவட்டத்தில் சமூக வலையத் தளங்களில் தர்ப்பூசணி பழத்தில் சாயம் போன்ற தேவையற்ற பொருட்கள் கலப்பதாக தவரன வதந்திகள் வருவதை தவிர்க்கும் பொருட்டும், பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தினை உயர்த்தும் நோக்கில், தர்ப்பூசணி பேன்ற விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கும் நல்ல விலை கிடைப்பதை உறுதி செய்யும் பொருட்டும், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இன்றைய தினம் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள அனைத்து அலுவலர்களுக்கும், பொதுமக்களுக்கும், மனு வழங்கிய அனைவருக்கும் தர்ப்பூசணி பழங்களை நேரடியாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்து, விநியோகிக்கப்பட்டு, விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளோம். திண்டுக்கல் மாவட்டம், விவசாயிகள் நிறைந்த பகுதி, குறிப்பாக பழவகைகள் இங்கு நிறைய அளவில் விளைவிக்கப்படுகிறது எனவே, விவசாயிகள் பயன்பெறும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி இரா.ஜெயபாரதி,மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) திரு.மு.கோட்டைக்குமார், உதவி ஆணையாளர்(கலால்) திரு.ஆர்.பால்பாண்டி, உதவி இயக்குநர், தமிழ்வளர்ச்சித்துறை (மு.கூ.பெ) திருமதி ஜ.சபீர்பானு, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் திருமதி மு.முருகேஸ்வரி, மாவட்ட வழங்கல் அலுவலர் திரு.அன்பழகன், தனித்துணை ஆட்சியர்(சமூக பாதுகாப்புத் திட்டம்) திருமதி கங்காதேவி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் திரு.க.சுகுமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலக நேர்முக உதவியாளர் திரு.வேளாங்கண்ணி மற்றும் மாவட்ட அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.

.

.

.

.