Close

Monday Grievance Day Petition

Publish Date : 06/05/2025
.

செ.வெ.எண்:-09/2025

நாள்:-05.05.2025

திண்டுக்கல் மாவட்டம்

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(05.05.2025) நடைபெற்றது.

தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி, பொதுமக்களின் குறைகளை களைவதற்கு, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, உரிய விசாரணை மேற்கொண்டு, தகுதியான பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காகவும், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமைதோறும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்று வருகிறது. இன்றைய கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 213 மனுக்கள் பெறப்பட்டன. பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி தகுதியான மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்.

இன்றைய தினம் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் விபத்து மரண நிவாரண தொகையாக 3 பயனாளிகளுக்கு தலா ரூ.2.00 இலட்சம், இயற்கை மரணம், ஈமச்சடங்க நிவாரணத் தொ 46 பயனாளிகளுக்கு தலா ரூ.17,000 மற்றும் முதுகுத்தண்டுவடம் பாதிக்கப்பட்ட 23 மாற்றுத்திறனாளிகளுக்கு அல்பா படுக்கை நிதியுதவி தலா ரூ.6,000 என ஆக மொத்தம் 72 பயனாளிகளுக்கு ரூ.15.20 இலட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

மேலும், கொடிநாள்-2022ஐ முன்னிட்டு ரூ.3.00 இலட்சத்திற்கு மேல் வசூல் செய்த மாவட்டப் பதிவாளர் அலுவலகம், நில அளவைத்துறை, நீர்வள ஆதாரத்துறை(நங்காஞ்சியாறு வடிநிலக் கோட்டம்) மற்றும் கொடைக்கானல் நகராட்சி ஆகிய 4 அலுவலகங்களுக்கு, தலைமைச் செயலாளர் அவர்களின் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

இளநிலை மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வுக்கு, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கான பயிற்சி வகுப்பு, பழனி வேலன் விகாஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கட்டணமில்லா உண்டு, உறைவிடப் பயிற்சியாக ஒரு மாதம் நடைபெற்றது. இந்தப் பயிற்சியில் 50 மாணவர்கள், 166 மாணவிகள் என மொத்தம் 216 மாணவ, மாணவிகள் பயிற்சி பெற்றனர். இந்த பயிற்சியில் ஒருங்கிணைத்தல் மற்றும் கற்பித்தல் பணியில் தன்னார்வலர்களாக செயல்பட்ட தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் இளம் செஞ்சிலுவைச் சங்கம், பாரத சாரண, சாரணியர் இயக்கம் ஒருங்கிணைப்பாளர்கள் என 29 பேருக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி இரா.ஜெயபாரதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி பெ.திலகவதி, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநர் திரு.சதீஸ்பாபு, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் திருமதி மு.முருகேஸ்வரி, மாவட்ட வழங்கல் அலுவலர் திரு.அன்பழகன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) திரு.மு.கோட்டைக்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வளர்ச்சி) திரு.முருகன், தனித்துணை ஆட்சியர்(சமூக பாதுகாப்புத் திட்டம்) திருமதி கங்காதேவி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் திரு.க.சுகுமார், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திருமதி ப.உஷா, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு.தங்கவேலு மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.