Monday Grievance Day Petition

செ.வெ.எண்:-02/2025
நாள்:-02.06.2025
திண்டுக்கல் மாவட்டம்
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(02.06.2025) நடைபெற்றது.
தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி, பொதுமக்களின் குறைகளை களைவதற்கு, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, உரிய விசாரணை மேற்கொண்டு, தகுதியான பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காகவும், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமைதோறும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்று வருகிறது. இன்றைய கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 220 மனுக்கள் பெறப்பட்டன. பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி தகுதியான மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்.
இன்றைய கூட்டத்தில், மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் மீனவர் நலவாரிய உறுப்பினர்கள் 2 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.2.00 இலட்சம் விபத்து நிவாரண உதவி, 12-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற பார்வைத்திறன் குறைபாடுடைய மாணவிக்கு ரூ.21,000 மதிப்பிலான திறன்பேசி ஆகியவற்றை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
மேலும், கொடிநாள்-2022-ல் அதிக நிதி வசூல் செய்து அளித்த மாவட்ட வருவாய்த்துறைக்கான பாராட்டு பதக்கத்தை மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி இரா.ஜெயபாரதி, பேரூராட்சித் துறைக்கான பாராட்டு பதக்கத்தை உதவி இயக்குநர்(பேரூராட்சிகள்) திரு.ஆர்.ராஜா ஆகியோரிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் நடைபெற்ற செம்மொழிநாள் விழா போட்டியில், கல்லுாரி மாணவ, மாணவிகளுக்கான கட்டுரைப் போட்டியில் முதலிடம் பெற்ற திண்டுக்கல் ஜிடிஎன் கலைக்கல்லுாரி மாணவர் க.விஜயகாந்திற்கு ரூ.10,000, இரண்டாமிடம் பெற்ற ரெட்டியார்சத்திரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மாணவி பா.பிரியங்காவுக்கு ரூ.7,000, குள்ளனம்பட்டி அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலைய மாணவி க.கார்த்திகாதேவிக்கு ரூ.5,000, பேச்சுப்போட்டியில் முதலிடம் பெற்ற திண்டுக்கல் எம்விஎம் அரசு மகளிர் கலைக்கல்லுாரி மாணவி வீ.பவித்ராவிற்கு ரூ.10,000, இரண்டாமிடம் பெற்ற திண்டுக்கல் புனித வளனார் கல்வியியல் கல்லுாரி மாணவி வெ.மோகனப்பிரியாவிற்கு ரூ.7,000, திண்டுக்கல் காந்திகிராம கிராமிய நிகர் நிலைப்பல்கலைக் கழகம் மாணவர் சி.டிக்சானுக்கு ரூ.5,000 பரிசுத்தொகைக்கான காசோலைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
அதேபோல், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நடைபெற்ற செம்மொழிநாள் விழா போட்டியில், கட்டுரைப்போட்டியில் முதலிடம் பெற்ற க.தருமத்துப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி பி.விக்னேஷ்வரிக்கு ரூ.10,000, திண்டுக்கல் புனித வளனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி பா.மௌனேகாவிற்கு ரூ.7,000, வீ.கூத்தம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி சு.ராஜலட்சுமிக்கு ரூ.5,000, பேச்சுப்போட்டியில் முதலிடம் பெற்ற திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளி மாணவர் முகம்மது ஆர்சத்திற்கு ரூ.10,000, இரண்டாமிடம் பெற்ற அழகாபுரி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் ரா.ஜீவாவிற்கு ரூ.7,000, கோ.இராமநாதபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி செ.சுவேதாவிற்கு ரூ.5000 பரிசுத் தொகைக்கான காசோலைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி இரா.ஜெயபாரதி, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநர் திரு.சா.சதீஸ்பாபு, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் திரு.மு.கோட்டைக்குமார், தனித்துணை ஆட்சியர்(சமூக பாதுகாப்புத் திட்டம்) திருமதி கங்காதேவி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.