Monday Grievance Day Petition

செ.வெ.எண்:-38/2023
நாள்:-20.03.2023
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(20.03.2023) நடைபெற்றது.
தமிழக அரசின் உத்தரவின்படி, பொதுமக்களின் குறைகளை களைவதற்காகவும், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, உரிய விசாரணை மேற்கொண்டு, தகுதியான பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காகவும், வாரந்தோறும் திங்கள் கிழமைகளில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி நடத்தப்பட்டு வருகிறது.
இன்றைய மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து 280 மனுக்கள் பெறப்பட்டன. பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் பெற்றுக்கொண்டார். அந்த மனுக்களை சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி, உடன் நடவடிக்கை மேற்கொண்டு, தகுதியுள்ள அனைத்து கோரிக்கை மனுக்களின் மீதும் உடனடியாக தீர்வு காண வேண்டும் என அறிவுறுத்தினார்.
இன்றைய கூட்டத்தில், திண்டுக்கல் மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் 15 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.50,000 வீதம் மொத்தம் ரூ.7,50,000 மதிப்பிலான தொழில் கடனுதவிகள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 25 பயனாளிகளுக்கு ரூ.1,71,000 மதிப்பில் மோட்டார் பொருத்திய இலவச தையல் இயந்திரம், செவித்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் 40 நபர்களுக்கு ரூ.1,11,200 மதிப்பில் காதொலி கருவிகள் ஆகியவற்றை பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி வே.லதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி திலகவதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) திரு.இரா.அமர்நாத், மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) திருமதி ம.காசிசெல்வி, உதவி ஆணையர்(கலால்) திருமதி ஜெயசந்திரகலா உட்பட துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.