Monday Grievance Day Petition

செ.வெ.எண்:-35/2023
நாள்:-22.05.2023
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(22.05.2023) நடைபெற்றது.
தமிழக அரசின் உத்தரவின்படி, பொதுமக்களின் குறைகளை களைவதற்காகவும், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, உரிய விசாரணை மேற்கொண்டு, தகுதியான பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காகவும், வாரந்தோறும் திங்கள் கிழமைகளில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி நடத்தப்பட்டு வருகிறது.
இன்றைய மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து 197 மனுக்கள் பெறப்பட்டன. பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் பெற்றுக்கொண்டார்.
இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-
மாவட்ட அளவிலான அலுவலர்கள், மாண்புமிகு முதலமைச்சர் அலுவலக தனிப்பிரிவின் மூலம் தங்களுக்கு வரக்கூடிய விண்ணப்பங்களுக்கு உடனடியாக பதில் அளிக்க வேண்டும். ஒரு மாதத்திற்கு மேல் பதில் அளிக்க தாமதம் ஏற்படக்கூடிய கோப்புகள் ஒவ்வொரு கோப்புகளாக ஆய்வு செய்யப்படும். பொதுமக்களிடம் பெறக்கூடிய கோரிக்கை மனுக்கள் அனைத்தையும் கனிவுடன் பரிசீலித்து தகுதியான நபர்கள் அனைவருக்கும் நலத்திட்ட உதவிகள் மற்றும் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றிட வேண்டும் என தெரிவித்தார்.
இன்றைய கூட்டத்தில், மாண்புமிகு முதலமைச்சர் பொது நிவாரண நிதியின் கீழ் 4 பயனாளிகளுக்கு தலா ரூ.1 இலட்சம் வீதம் மொத்தம் ரூ.4 இலட்சம் நிவாரண நிதியுதவி, 3 மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள், ஒரு மாற்றுத்திறனாளிக்கு செயற்கை கால் உள்ளிட்ட நிவாரண உதவிகளை திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் பயனாளிகளுக்கு வழங்கினார். மேலும், இன்றைய கூட்டத்தில், வாழ்வாதாரத்திற்கு உதவி செய்ய கோரி மனு அளித்த வடமதுரையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி திருமதி அமுதா அவர்களின் மனு மீது, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு, அவருக்கு இன்றைய தினமே தையல் இயந்திரத்தை வழங்கினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி வே.லதா, உதவி ஆட்சியர்(பயிற்சி) செல்வி ஆர்.ஏ.பிரியங்கா, இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி பெ.திலகவதி, உதவி ஆணையர்(கலால்) திருமதி சு.ஜெயசித்திரகலா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு.இரா.அமர்நாத், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) திருமதி மு.ராணி உட்பட துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.