Close

Monday Grievance Day Petition Meeting (25/10/2021)

Publish Date : 26/10/2021
.

.

செ.வெ.எண்:-55/2021

நாள்:25.10.2021

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று(25.10.2021) நடைபெற்றது. இன்றைய மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 280 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தரவிட்டார்கள்.

தமிழக அரசின் உத்தரவின்படி, பொதுமக்களின் குறைகளை களைவதற்காகவும், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று உரிய விசாரணை மேற்கொண்டு, தகுதியான பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், வாரந்தோறும் திங்கள் கிழமைகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடத்தப்படுகிறது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இன்றைய தினம் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு மனு அளிக்க வந்த பொதுமக்களிடம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் நுழைவு வாயில் முன் பொதுமக்களின் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டும், கைகளை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்தும், மனு அளிக்க வரும் பொதுமக்கள் சமூக இடைவெளி பின்பற்றியும் அனுமதிக்கப்பட்டனர். பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து, கொரோனா நெறிமுறைகளை பின்பற்றி பொதுமக்களிடமிருந்து வரப்பெற்ற மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பெற்றுக் கொண்டார்கள். மேலும், பெறப்பட்ட தகுதியுடைய மனுக்கள் மீது உடன் நடவடிக்கை மேற்கொள்ள, சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு, மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் அறிவுறுத்தினார்கள்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு, பெற்றோர் ஒருவரை மட்டும் இழந்த 15 குழந்தைகளின் மறுவாழ்வு மற்றும் பாதுகாப்பிற்காக நிவாரண நிதியாக, ஒரு குழந்தைக்கு ரூ.3 லட்சம் வீதம் ரூ.45 லட்சம் மதிப்பில்நிதியுதவி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 10 நபர்களுக்கு தலா ரூ.3,978 வீதம் ரூ.39,780 மதிப்பீட்டில் இலவச தையல் இயந்திரங்கள், 7 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா (மொத்த மதிப்பு ரூ.3,48,000) உட்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்கள்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி வே.லதா, உதவி ஆட்சியர் திருமதி சி.பிரியங்கா, இ.ஆ.ப., அவர்கள், துணை ஆட்சியர் (பயிற்சி) திரு.இரா.இரா.விசுவநாதன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு.சி.மாறன், தனித்துணை ஆட்சியர்(சமூக பாதுகாப்புத் திட்டம்) திரு.எல்.ராஜசேகர், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் திரு.வீ.பழனிகுமார், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் திரு.பிரபாகர், உதவி ஆணையாளர் (கலால்) திரு.சிவக்குமார், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திருமதி மு.ஜெயசீலி உட்பட துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டார்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.