N Legislative Assembly – Petition Committee 2021-2022
செ.வெ.எண்:-09/2022
நாள்:05.04.2022
திண்டுக்கல் மாவட்டம்
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மனுக்கள் குழு திண்டுக்கல் வருகை – பொதுப்பிரச்சனை தொடர்பாக பொதுமக்கள் மனுக்கள் குழுவுக்கு 20.04.2022-ஆம் தேதிக்குள் மனுக்கள் அனுப்பி வைக்க வேண்டும் – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின், 2021-2022-ஆம் ஆண்டுகளுக்கான மனுக்கள் குழு திண்டுக்கல் மாவட்டத்தில் விரைவில் கூடுவதென முடிவு செய்துள்ளது. இதனையொட்டி மேல்குறிப்பிட்ட மாவட்ட எல்லைக்குட்பட்ட பகுதிகளிலுள்ள தனிப்பட்ட நபரோ, சங்கங்களோ அல்லது நிறுவனங்களோ, தீர்க்கப்பட வேண்டிய பொதுப்பிரச்சனைகள் / குறைகள் குறித்து மனுக்களை (ஐந்து நகல்கள் தமிழில் மட்டும்) மனுதாரர்/மனுதாரர்கள் தேதியுடன் கையொப்பமிட்டு தலைவர், மனுக்கள் குழு, தமிழ்நாடு சட்டப்பேரவை, சென்னை-600009 என்ற முகவரிக்கு 20.04.2022-க்குள் அனுப்பலாம்.
மனுக்கள் கண்ணியமான வாக்கியத்தில் இருத்தல் வேண்டும். பல ஆண்டுகளாக அரசு அலுவலகங்களில் தீர்க்கப்படாமல் இருக்கும் பொதுப் பிரச்சனைகள் குறித்ததாக மனுக்கள் இருக்கலாம். மனுக்கள் ஒரேயொரு பிரச்சனையை உள்ளடக்கியதாகவும், ஒரேயொரு துறையைச் சார்ந்ததாகவும் இருத்தல் வேண்டும்.
மனுக்கள் பொது முக்கியத்துவம் வாய்ந்த பொருள் ஒன்றினை உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும்.
ஆனால் மனுவில் உள்ள பொருள் கீழ்க்கண்டவைகளாக இருத்தல் கூடாது:-
1. தனிநபர் குறை
2. நீதிமன்றத்தின் முன் வழக்கிலுள்ள பொருள்
3. வேலைவாய்ப்பு, முதியோர் ஓய்வூதியம், பட்டா மற்றும் அரசு வழங்கும் இலவச உதவிகள் வேண்டுதல்
4. வங்கிக் கடன் அல்லது தொழிற்கடன் வேண்டுதல்
5. அரசுப்பணியில் மாற்றம் வேண்டுதல், அரசு அலுவலர்களின் குறைகளை வெளிப்படுத்துதல்.
சட்டமன்றப் பேரவை விதிகளின் வரம்பிற்குட்;பட்ட மனுக்களை, மனுக்கள் குழு மாவட்டத்திற்கு வரும்போது ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளும். ஒரே மனுதாரர் பல மனுக்களை அனுப்பி இருந்தாலும், குழு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதும் ஒரு மனு மட்டுமே ஆயவிற்கு எடுத்துக்கொள்ளப்படும். அவ்வமயம், மனுதாரர் முன்னிலையில், குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம், மனுவில் உள்ள பொருள் குறித்த உண்மை நிலவரம் கேட்டறியப்படும் இது குறித்து, மனுதாரர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலத்திலிருந்து குழு ஆய்வு செய்யும் நாளில் தகவல் தனியாக அனுப்பப்படும். 20.04.2022-ஆம் தேதிக்குப் பின்னர் பெறப்படும் மனுக்கள் குழுவின் ஆய்விற்கு எடுத்துக்கொள்ளப்படாது என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.