Close

PMKISAN SATURATION CAMPAIGN

Publish Date : 10/05/2025

செ.வெ.எண்:-30/2025

நாள்:-09.05.2025

திண்டுக்கல் மாவட்டம்

பிரதம மந்திரி கவுரவ நிதி உதவி திட்டத்தின் கீழ், தகுதியுடைய அனைத்து விவசாயிகளும் எவ்வித விடுபாடின்றி பயன்பெறும் வகையில் சிறப்பு முகாம் 31.05.2025 வரை நடைபெற உள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

திண்டுக்கல் மாவட்டத்தில் பிரதம மந்திரி கவுரவ நிதி உதவி திட்டத்தின் கீழ், தகுதியுடைய அனைத்து விவசாயிகளும் எவ்வித விடுபாடின்றி பயன்பெறும் வகையில் சிறப்பு முகாம் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்கள், இந்திய அஞ்சல் கட்டண வங்கி மற்றும் பொது சேவை மையங்களில் 01.05.2025-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த முகாம் வரும் 31.05.2025 வரை நடைபெற உள்ளது.

இத்திட்டத்தில் 20-வது தவணை வரும் ஜுன் மாதத்தில் வழங்க உள்ளதால், இம்முகாமில் தகுதியுடைய விவசாயிகளின் நிலம் தொடர்பான விவரங்கள், வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பது, இ.கே.ஒய்.சி போன்ற அனைத்து விதமான முழுமையற்ற விவரங்களை சரி செய்து விவசாயிகள் பயன்பெறலாம். தகுதியுடைய விடுபட்ட விவசாயிகள் இத்திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம்.

மேலும், திண்டுக்கல் மாவட்டத்தில் ஏற்கனவே பி.எம்.கிசான் 19-வது தவணைத் தொகை பெற்று வந்த விவசாயிகளில் 21,377 விவசாயிகள் நில உடமை பதிவு மேற்கொள்ளவில்லை. இவ்விவசாயிகள் நில உடமை பதிவு மேற்கொண்டு 20-வது தவணையை பெற்றுக்கொள்ளலாம்.

இத்திட்டத்தில் இறந்த பயனாளிகள் விவரம் சமர்ப்பிக்காமல் இறந்த பிறகும் தவணை தொகையை பெற்று வருவது ஆய்வில் தெரியும்பட்சத்தில் அத்தொகையை வாரிசுதாரர்களிடமிருந்து வசூலிக்கப்படும். எனவே, இறந்த பயனாளிகளின் இறப்பு சான்றினை சமர்ப்பித்து அவர் பெற்று வரும் நிதியை நிறுத்த வேண்டும். மேலும் வாரிசுதாரர்கள் தேவையான ஆவணங்களை சமர்ப்பித்து இந்த திட்டத்தில் பயன்பெற்றுக் கொள்ளலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.