Close

Ration Distribution-Hills villages-Chinnur-Periyur

Publish Date : 26/04/2025
.

செ.வெ.எண்:-66/2025

நாள்:-24.04.2025

திண்டுக்கல் மாவட்டம்

இல்லம் தேடி ரேஷன்

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வட்டம், சின்னுார், பெரியூர் மலைக்கிராமங்களில் வசிக்கும் 110 குடும்ப அட்டைதாரர்களுக்கு சுதந்திரத்திற்கு பின்னர் முதல் முறையாக அவர்கள் வசிக்கும் பகுதிக்கு குதிரைகள் மூலம் குடிமைப்பொருட்கள் கொண்டு செல்லப்பட்டன – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வட்டம், வெள்ளகவி ஊராட்சிக்குட்பட்ட சின்னுார், பெரியூர் மலைக்கிராமங்களில் வசிக்கும் 110 குடும்ப அட்டைதாரர்களுக்கான குடிமைப்பொருட்கள் அவர்கள் வசிக்கும் பகுதிக்கு குதிரைகள் மூலம் கொண்டு செல்லப்பட்டன.

திண்டுக்கல் மாவட்டம் மலைப்பகுதி என்பதால் இங்குள்ள மலைப்பகுளில் ஏராளமான கிராமங்கள் உள்ளன. தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மலைக்கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கும் சென்றடையும் வகையில் திட்டங்களை செயல்படுத்துவதில் மாவட்ட நிர்வாகம் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அந்த வகையிலே மாவட்ட நிர்வாகத்தின் முன்னெடுப்பான செயல்பாடுகளின் காரணமாக, கொடைக்கானல் வட்டம், வெள்ளகவி மலை கிராமத்தில் வசிக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கான குடிமைப்பொருட்கள் அவர்கள் கிராமங்களுக்கே சென்று வழங்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக, வெள்ளகவி ஊராட்சிக்குட்பட்ட சின்னுார் மற்றும் பெரியூர் மலைக்கிராமங்களில் வசிக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கான குடிமைப்பொருட்கள் அவர்கள் கிராமங்களுக்கே சென்று வழங்கும் வகையில் குதிரைகளில் கொண்டு செல்லப்பட்டன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்றது முதல் எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில், சமூகத்தில் ஏழ்மை நிலையில் உள்ள அனைத்து மக்களையும் பாதுகாக்கும் நோக்கில், அவர்களின் துயரை துடைக்க, பல்வேறு திட்டங்களை அறிவித்து, அந்த திட்டங்களின் பயன்கள் கடைக்கோடி பகுதியில் வசிக்கும் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடையும் வகையில் செயல்படுத்தி வருகிறார். மேலும், நியாயவிலைக் கடைகள் மூலம் வழங்கப்படும் பொருட்கள் கடைக்கோடி மக்களுக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும் எனவும், அவர்கள் வசிக்கும் இல்லங்களுக்கு அருகிலேயே குடிமைப்பொருட்களை விநியோகிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்கள்.

கொடைக்கானல் வட்டம், வெள்ளகவி ஊராட்சி மலைக்கிராமம் என்பதால் சாலை வசதி இல்லாத காரணத்தினால் அங்கு வசிக்கும் குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் குடும்ப அட்டைகளுக்கு உரிய குடிமைப் பொருட்களை வட்டக்கானல் பகுதியில் பெற்றுக்கொண்டு அங்கிருந்து சுமார் 7 கி.மீட்டர் தூரம் மலைப்பாதை வழியாக தலைச்சுமையாகவும் மற்றும் குதிரைகளில் பொதி சுமை மூலம் தங்களது வீடுகளுக்கு கொண்டு சென்றனர்.

வெள்ளகவி மக்கள், தங்கள் கிராமத்திற்கு குடிமைப்பொருட்களை கொண்டு வந்து வழங்கும்படி கோரிக்கை விடுத்தனர். அவர்களின் நீண்டநாள் கோரிக்கையினை பூர்த்தி செய்யும் வகையில், மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், பழனி சட்டமன்ற உறுப்பினர் திரு.இ.பெ.செந்தில்குமார் ஆகியோர் ஆலோசனையின்பேரில், இல்லம் தேடி ரேஷன் என்ற வகையில், வெள்ளகவி மலை கிராம மக்களுக்கான குடிமைப்பொருட்களை சுதந்திரத்திற்கு பின்னர் முதல் முறையாக அவர்கள் கிராமத்திற்கே கொண்டு சென்று வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி, கொடைக்கானல் டவுன்-1 நியாய விலைக்கடையில் மலைகிராமமான வெள்ளகவி பகுதிக்குட்பட்ட 120 குடும்ப அட்டைகளில் 30 குடும்ப அட்டைதாரர்கள் வெளியூர்களில் தங்கி வேலைபார்ப்பதால் ஒரே நாடு ஒரே கார்டு (One Nation One Card) திட்டத்தின் கீழ் குடிமைப்பொருள் பெற்று வருகின்றனர். மீதமுள்ள 90 குடும்ப அட்டைதாரர்களுக்கான குடிமைப்பொருட்கள் கொடைக்கானல் அருகே வட்டக்கானல் பகுதியிலிருந்து குதிரைகள் மூலம் வெள்ளகவி கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, 17.04.2025 அன்று விநியோகம் செய்யப்பட்டன.

இதேபோல், வெள்ளகவி ஊராட்சிக்குட்பட்ட பெரியூர் மற்றும் சின்னுார் ஆகிய மலைக்கிராமங்களில் உள்ள 110 குடும்ப அட்டைதாரர்களுக்கும் குடிமைப்பொருட்களை அந்தந்த கிராமங்களுக்கே கொண்டு சென்று வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொடைக்கானல் டவுன்-1 நியாய விலைக்கடைக்கு உட்பட்ட சின்னூர் மற்றும் பெரியூர் பகுதியில் உள்ள 110 குடும்ப அட்டைதாரர்களுக்கு வாகனம் மூலம் கொடைக்கானலிலிருந்து காட்ரோடு வழியாக (93 கி.மீட்டர் துாரம்) பெரியகுளம் முதல் சோத்துப்பாறை அணைக்கு செல்லும் வழியில் பெரியூர் கடப்பாறைக்குழி பகுதியில் வசிக்கும் 50 குடும்ப அட்டைதாரர்களுக்கு உப்புக்காடு என்னுமிடத்திலும், அதேபோல் உட்கடை கிராமமான சின்னூர் பழங்குடியினர் காலனியில் 16 குடும்ப அட்டைதாரர்களும், சின்னூர் பகுதியில் வசிக்கும் 44 குடும்ப அட்டைதாரர்களும் ஆகமொத்தம் 60 குடும்ப அட்டைதாரர்களுக்கு கல்லாறு என்னுமிடத்தில் வைத்து மாதந்தோறும் குடிமைப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. குடிமைப் பொருட்களை பெற்றுச் செல்லும் குடும்ப அட்டைதாரர்கள் சாலை வசதி இல்லாத காரணத்தினால் உப்புக்காடு என்னுமிடத்திலிருந்து மலை உச்சி பகுதிகளான பெரியூர் பகுதிக்கு 7 கி.மீட்டர் தூரமும், கல்லாறு என்னுமிடத்திலிருந்து சின்னூர் பகுதிக்கு 6 கி.மீட்டர் தூரமும் தலைச்சுமையாகவும், குதிரைகளில் பொதி சுமை மூலம் கொண்டு சென்றனர்.

இந்தப்பகுதி பொதுமக்களின் சிரமத்தை தவிர்க்கும் வகையில், அவர்களுக்கான குடிமைப்பொருட்கள் உப்புக்காடு மற்றும் கல்லாறு ஆகிய இடங்கள் வரை வாகனம் மூலம் கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து குதிரைகளில் பெரியூர் மற்றும் சின்னுார் கிராமங்களுக்கு அரசு சார்பில் கொண்டு செல்லப்பட்டன. அதன்படி, ஏப்ரல்-2025 மாதத்திற்கான குடிமைப்பொருட்கள் அரிசி 2723 கிலோ, சர்க்கரை 153 கிலோ, பாமாயில் 110 பாக்கெட், துவரம் பருப்பு 110 கிலோ, மண்ணெண்ணை 50 லிட்டர் ஆகிய பொருட்கள் குதிரைகளில் கொண்டு செல்லப்பட்டன. இன்னும் 2 நாட்களில் அந்த மலைப்பகுதி கிராமங்களில் வசிக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு குடிமைப்பொருட்கள் வழங்கப்படவுள்ளது, என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.

.

.

.

.

.

.