Sanitation Workers – Summer Safety

செ.வெ.எண்:-79/2025
நாள்:-29.04.2025
திண்டுக்கல் மாவட்டம்
கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மைப்பணியாளர்களை கோடை வெயில் தாக்கத்திலிருந்து காக்கும் முயற்சியாக தினசரி இரண்டு வேளை பழச்சாறு வழங்கி பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து, எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் கடைக்கோடி மக்களையும் சென்றடையும் வகையில் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தூய்மை பணியாளர்களுக்கு நல வாரியம் அமைக்கப்பட்டு, நல
வாரியத்தின் மூலமாக தூய்மை பணியாளர்களுக்கு தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம், திறன் மேம்பாட்டு பயிற்சி, தொழில் கல்வி மற்றும் பயிற்சி கடன் திட்டம் போன்றவை செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், தூய்மைப்பணியாளர்கள் பயன்பெறும் வகையில் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறையின் மூலம் அவ்வப்போது சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, மாநில அரசின் விபத்து காப்பீட்டுத் திட்டங்களில் சேர்ந்து பயனடைவதற்கு வழி வகை செய்யப்பட்டுள்ளது. நகர்புரங்கள் மற்றும் மாநகரங்களில் சுத்தமாக பேணி பாதுகாக்கும் தூய்மை பணியாளர்களின் நலனில் கவனம் செலுத்தும் வகையில் அவர்களின் பாதுகாப்பு, கண்ணியம் மற்றும் வாழ்வாதார மேம்பாட்டை உறுதி செய்வதற்காக, முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.
தமிழ்நாடு தூய்மைப்பணியாளர்கள் நல வாரியம் மூலம் விபத்து காப்பீட்டுத்திட்டத்தின்கீழ் ரூ.5.00 இலட்சம், பணியிடத்தில் விபத்து / மரணம் உறுப்புகளை இழந்தால் / சரி செய்ய இயலாத அளவு இழந்தால் ரூ.1.00 இலட்சம், ஒரு கையிளன இழந்தால் ரூ.1.00 இலட்சம், ஒரு காலினை இழந்தால் ரூ.1.00 இலட்சம், ஒரு கண் முழுவதும் சரி செய்ய முடியாத அளவு பார்வை இழப்புக்கு ரூ.1.00 இலட்சம், ஏனைய காயங்கள் ஏற்பட்டு முழு இயலமைக்கு ரூ.1.00 இலட்சம், இயற்கை மரண உதவித்தொகை ரூ.20.00 ஆயிரம் மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை ஆகிய அரசின் நல திட்ட உதவிகள் தூய்மைப்பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் தூய்மை பாரத இயக்க திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் வாயிலாக 304 கிராம ஊராட்சிகளில் 3472 தூய்மைப் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் வீடு, வீடாக சென்று குப்பைகளை சேகரித்து, மக்கும் குப்பை, மக்காத குப்பையை பிரித்தெடுத்து, மறுசுழற்சி செய்யும் பணிகளை செய்து வருகின்றனர்.
தற்போது கோடை வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் ஹீட் ஸ்ட்ரோக் போன்றவற்றிலிருந்து துப்புரவுப்பணியாளர்களை காக்க திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக தூய்மைப்பணியாளர்களுக்கு தினமும் இரு வேளைகளில் எலுமிச்சை பழச்சாறு, தர்ப்பூசணி பழச்சாறு, மோர், குழுக்கோஸ் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. அந்தந்த பகுதிகளில் அதிகமாக கிடைக்கும் பழங்களை கொண்டு பழச்சாறு தாயரித்து அவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
தூய்மைப் பணியாளர்களின் பணி பெரும்பாலும் வெயில் நேரங்களில் இருப்பதால் தினமும் இருவேளை ஊராட்சி அலுவலகம் மூலம் பழச்சாறு தயார் செய்து வழங்கப்படுகிறது. இதற்கென செலவாகும் தொகை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஊராட்சிகளின் மூலம் செலவிடப்படுகிறது. இப்பணி ஏப்ரல் 1-ந் தேதி முதல் செயல்பட்டு வருகிறது. வெயில் தாக்கம் குறையும் வரை இந்த நடை முறை மேற்கொள்ளப்படும். மேலும், துப்பரவு பணியாளர்கள் மதியம் 12.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை குப்பையை தரம் பிரிக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம், சீலப்பாடி கிராமத்தைச் சேர்ந்த தூய்மைப்பணியாளர் தெரிவித்ததாவது:-
நான் திண்டுக்கல் மாவட்டம், சீலப்பாடி கிராமத்தில் தூய்மைப்பணியாளராக பணியாற்றி வருகின்றேன். எனது பெயர் காளீஸ்வரி. எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளார்கள். அவர்கள் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்கள். எனது கணவர் விவசாயம் பார்த்து வருகிறார். இக்கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கு சென்று குப்பைகளை சேகரிக்கும் பணியை செய்து வருகிறேன். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் எங்களைப் போன்ற தூய்மைப் பணியாளர்களின் நலனில் அக்கரை கொண்டு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். தற்போது கோடை காலத்தை முன்னிட்டு வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. அதனால் தூய்மைப்பணியாளர்களின் நலனை பாதுகாக்கும் பொருட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் அறிவுரையின்படி திண்டுக்கல் மாவட்டத்தில் பணியாற்றும் அனைத்து தூய்மை பணியாளர்களுக்கும் தினசரி இரண்டு வேளை எலும்மிச்சை பழச்சாறு, தர்ப்பூசணி பழச்சாறு, குளுக்கோஸ் மற்றும் மோர் வழங்கி எங்களை வெயிலின் தாக்கத்திலிருந்து பாதுகாத்தது மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். எனவே, இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்தி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்தார்.
திண்டுக்கல் மாவட்டம், முள்ளிப்பாடி கிராமத்தைச் சேர்ந்த தூய்மைப்பணியாளர் தெரிவித்ததாவது:-
நான் திண்டுக்கல் மாவட்டம், முள்ளிப்பாடி கிராமத்தில் தூய்மைப்பணியாளராக வேலை செய்து வருகிறேன். என் பெயர் அழகுராணி. தற்போது வெயிலின் காரணமாக மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் உத்தரவின்படி எங்களுக்கு தினசரி இரண்டு வேளைக்கு தர்ப்பூசணி ஜீஸ், மோர், எலுமிச்சை ஜீஸ் ஆகியவை வழங்கி வருகிறார்கள். அதனால் நாங்கள் செய்யும் தூய்மைப்பணியை சிறப்பாக செய்வோம். இதன் மூலம் எங்கள் உடம்பில் புத்துணர்வு ஏற்படுகிறது. மேலும், இதுபோன்ற பழச்சாறு வழங்குவது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது. எனவே, இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்தி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.

.

.

.

.