கால்நடைகளில் ஏற்படும் உடல்தாழ் வெப்பநிலை – பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு கால்நடைகளை பாதுகாக்கலாம்
செ.வெ.எண்:-21/2021
நாள்:08.12.2021
கால்நடைகளில் ஏற்படும் உடல்தாழ் வெப்பநிலை – பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு கால்நடைகளை பாதுகாக்கலாம்- மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் அறிவுறுத்தல்.
கால்நடைகளில் சாதாரண உடல் வெப்பநிலை குறிப்பிடத்தக்க (101-102.5°F) அளவு (96°F) குறையும் பொழுது அவை தாழ்வெப்பநிலையில் உள்ளதாக கருதலாம். பொதுவாக, புதிதாக பிறந்த குட்டிகளும், இளங்கன்றுகளும் அதிகமாக உடல் தாழ்வெப்பநிலையால் பாதிக்கப்பட்டு சில நேரங்களில் இறக்கவும் நேரிடுகிறது.
தேங்கி இருக்கும் தண்ணீரில் அதிக நேரம் இருப்பது, குளிர்ந்த சீதோஷ்ண நிலை மற்றும் ஈரமான தரை, பாதகமான சீதோஷ்ண நிலையினால் போதுமான தண்ணீர் மற்றும் தீவனம் கிடைக்காதது, ஈரமான மண்ணுடன் கூடிய இருப்பிடம், சரிவர நீர் வடியாத கொட்டகை போன்ற காரணங்களால் இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படுகின்றன.
கால்நடைகள் சோர்வாகவும், தீவனம் எடுக்காமலும், நிற்க முடியாமல் படுத்து இருத்தல், மூட்டு பகுதிகள் குளிர்ந்து காணப்படுதல், உடல் நடுங்குதல், அதிக இதய துடிப்பும், மூச்சிரைப்பும் காணப்படுதல்;, இரத்த அழுத்தம் குறைவாக இருத்தல் போன்ற அறிகுறிகள் உடல் தாழ்வெப்பநிலையின் போதுதோன்றும்.
கால்நடைகள் தண்ணீர் தேங்கி இருக்கும் பகுதிகளில் இருந்தால் உடனடியாக அவற்றை மேடான பகுதிக்கு மாற்ற வேண்டும். காய்ந்த துணி, சாக்கு அல்லது வைக்கோலை தரையில் பரப்பி அதன் மேல் படுக்க வைக்க வேண்டும். கொட்டகையில் தண்ணீர் தேங்கி இல்லாமலும் குளிர்ந்த காற்று வீசாதவாறும் பார்த்துக் கொள்ள வேண்டும். குடிப்பதற்கு சற்று சூடான தண்ணீரும் உரிய தீவனமும் கொடுக்க வேண்டும். ஊடனடியாக கால்நடை மருத்துவரை அணுகி சற்று சூடேற்றப்பட்ட குளுக்கோஸ் திரவத்தை இரத்த குழாய் வழியாக உடலுக்குள் செலுத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.
இதுபோன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு தங்கள் கால்நடைகளை பாதுகாக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.