திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு கையெழுத்து இயக்கம் மற்றும் உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

செ.வெ.எண்:-20/2023
நாள்:09.02.2023
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு கையெழுத்து இயக்கம் மற்றும் உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று(09.02.2023) கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு கையெழுத்து இயக்கம் மற்றும் உறுதி மொழியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தொழிலாளர் முறை ஒழிப்பு கையெழுத்து இயக்கத்தை கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார். தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி வே.லதா அவர்கள் உறுதிமொழி வாசிக்க அனைவரும் உறுதிமொழியேற்றனர்.
”இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி மனிதனை வணிக பொருளாக்குதலும், வலுக்கட்டாயமாக வேலை சுமத்தும் வழக்கங்களும், கடன் பிணையத் தொகை வழங்கி கட்டாயப் பணிக்கு வற்புறுத்துவதும் தண்டனைக்குரிய குற்றமாக வரையறை செய்யப்பட்டுள்ளதால், கொத்தடிமைத் தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழித்திடும் நோக்கத்தை கருத்திற் கொண்டு, சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன் என்றும், கொத்தடிமைத் தொழிலாளர் முறை எந்தத் தொழிலில் இருந்தாலும் அதனை அடையாளங்கண்டு தக்க நடவக்கை எடுக்க முழு முயற்சி செய்வேன் என்றும், எந்தத் தொழிற்சாலையிலும் தொழிலாளர்களுக்கு முன்பணம் கொடுத்து பணியமர்த்துவதைத் தவிர்க்க வலியுறுத்துவேன் என்றும், கொத்தடிமைத் தொழிலாளர்களை மீட்டு அவர்களின் முழுமையான மறுவாழ்விற்காகப் பணியாற்றுவேன் என்றும், இந்திய அரசமைப்புச் சட்டம் வகை செய்துள்ள அடிப்படை உரிமைகளை அனைவருக்கும் உரிதாக்குவதற்கு, கொத்தடிமைத் தொழிலாளர் ஒழிப்புச் சட்டத்தைச் சீரிய முறையில் செயற்படுத்த உறுதுணையாக இருந்து, கொத்தடிமைத் தொழிலாளர் இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்குவதற்கு சிறப்புடன் செயற்படுவேன் என்றும் நான் உளமார உறுதியளிக்கிறேன்” என மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி வே.லதா அவர்கள் வாசிக்க அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் உறுதி மொழியினை ஏற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) திரு.இரா.அமர்நாத், தொழிலாளர் உதவி ஆணையர் திருமதி ஜீ.சிவசிந்து, துணை ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் உட்பட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.