Close

Tamilvalarchi – Competition

Publish Date : 26/04/2025

செ.வெ.எண்: 69/2025

நாள்: 25.04.2025

திண்டுக்கல் மாவட்டம்

செம்மொழியின் சிறப்பையும், முத்தமிழறிஞரின் தமிழ்த்தொண்டின் பெருமையையும் மாணவ, மாணவிகளிடம் உணர்த்திடும் வகையில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளான சூன் 3 அன்று செம்மொழி நாள் விழாவாக 2025-ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்படவுள்ளது.

செம்மொழியின் சிறப்பையும், முத்தமிழறிஞரின் தமிழ்த்தொண்டின் பெருமையையும் மாணவர்களிடம் உணர்த்திடும் வகையில் ஆண்டுதோறும் அனைத்து மாவட்டங்களிலும் 11 மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கும், கல்லூரி மாணவ, மாணவிகளுக்கும் கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தப்படவுள்ளது.

இப்போட்டிகளில் அரசுப் பள்ளி, தனியார் பள்ளி, பதின்ம பள்ளி, அரசு நிதியுதவி பெறும் பள்ளி, மத்திய இடைநிலை கல்வி வாரியம்(CBSE) பயிலும் மாணவர்கள் பங்குபெறலாம். அதேபோல் கல்லுாரி அளவிலான போட்டிகளில் கலை மற்றும் அறிவியல், கல்வியியல், பொறியியல், பல்தொழில்நுட்பம், மருத்துவம், சட்டம், வேளாண்மை உள்ளிட்ட அரசு மற்றும் தனியார் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் பங்குபெறலாம்.

இப்போட்டிகளில் கலந்துகொள்ளும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் விண்ணப்பப் படிவம் மற்றும் விதிமுறைகள் தமிழ் வளர்ச்சித் துறையின் https://tamilvalarchithurai.tn.gov.in என்ற இணைய முகவரியில் பதிவிறக்கம் செய்து தலைமையாசிரியர் அல்லது முதல்வரின் பரிந்துரையுடன் அவ்விண்ணப்பப் படிவங்களை tamilvalar.dgl@tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 05.05.2025ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

மாவட்ட அளவில் கட்டுரை, பேச்சுப்போட்டியில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.10,000, இரண்டாம் பரிசு ரூ.7,000, மூன்றாம் பரிசு ரூ.5,000 என பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படவுள்ளன.

திண்டுக்கல் மாவட்டத்தில், 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 09.05.2025 (வெள்ளிக்கிழமை) அன்றும் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு 10.05.2025 (சனிக்கிழமை) அன்றும் திண்டுக்கல் அங்குவிலாஸ் மேல்நிலைப் பள்ளியில் காலை 9.00 மணிக்கு கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகள் நடைபெறவுள்ளன. போட்டிக்கான தலைப்புகள் போட்டியின்போது அறிவிக்கப்படும். “செம்மொழியின் சிறப்பு மற்றும் முத்தமிழறிஞர் கலைஞரின் தமிழ்த்தொண்டின் பெருமை” சார்ந்த தலைப்பு அளிக்கப்படும்.

மாவட்ட அளவிலான போட்டிகளில் முதல் பரிசு பெறும் மாணவர் 17.05.2025 அன்று சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பினைப் பெறுவர். அதில் வெற்றி பெறுபவர்கள் 03.06.2025ஆம் நாளன்று நடைபெறவுள்ள செம்மொழி நாள் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கிச் சிறப்பிக்கப்பெறுவர். இக்கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகளில் பங்கேற்று மாணவ, மாணவிகள் பயன்பெறலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.