Temple workers Uniform, Archagar Pongal dress distribution

செ.வெ.எண்:-32/2022
நாள்:12.01.2022
பொங்கல் திருநாளை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டத்தில் 86 திருக்கோயில்களில் உள்ள அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், ஓதுவார்கள், பூசாரிகளுக்கு புத்தாடை மற்றும் திருக்கோயில் பணியாளர்களுக்கு சீருடைகளை திண்டுக்கல் மண்டல இணை ஆணையாளர் திருமதி பா.பாரதி வழங்கினார்கள்.
தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தில் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறையின் 2021-22-ஆம் ஆண்டிற்கான மானியக்கோரிக்கையில், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள திருக்கோயில்களில் அங்கீகரிக்கப்பட்ட பணியாளர் பணிப்பட்டியலின்படி பணிபுரியும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், ஓதுவார்கள், பூசாரிகளுக்கு புத்தாடையும் மற்றும் திருக்கோயில் பணியாளர்களுக்கு நபர் ஒருவருக்கு இரண்டு எண்ணிக்கையிலான சீருடைகளும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளிலிருந்து பணிக்குவரும் போது பணியாளர்கள் அணிந்து வரும் வகையில் புத்தாடைகள் மற்றும் சீருடைகள் வழங்கும் பணியினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னையில் தலைமைச் செயலகத்தில் 04.01.2022 அன்று அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், ஓதுவார்கள், பூசாரிகளுக்கு புத்தாடைகளையும், திருக்கோயில் பணியாளர்களுக்கு நபர் ஒருவருக்கு இரண்டு எண்ணிக்கையிலான சீருடைகளையும் வழங்கி துவக்கி வைத்தார்கள்.
திருக்கோயில்களில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களையும் திருக்கோயிலுக்கு வருகைபுரியும் பக்தர்கள் எளிதில் அடையாளம் காணும் வகையில், அர்ச்சகர், பட்டாச்சாரியார், பூசாரிகளுக்கு மயில்கண் பார்டர் பருத்தி வேட்டியும், பெண் பூசாரி மற்றும் திருக்கோயிலில் பணிபுரியும் பெண் பணியாளர்களுக்கு அரக்கு நிறத்தில் மஞ்சள் நிற பார்டருடன் கூடிய புடவையும், ஆண் பணியாளர்களுக்கு பழுப்பு (Brown) நிறகால் சட்டை மற்றும் சந்தன நிற மேற்சட்டை துணியும் வழங்கப்படுகிறது. இதன்மூலம், தமிழகத்தில் 36,684 திருக்கோயில்களில் பணிபுரியும் சுமார் 52,803 பணியாளர்கள் பயன்பெறுவார்கள்.
அதனைத்தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டத்தில், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள திருக்கோயில்களில் அங்கீகரிக்கப்பட்ட பணியாளர் பணிப்பட்டியலின்படி பணிபுரியும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், ஓதுவார்கள், பூசாரிகளுக்கு புத்தாடையும் மற்றும் திருக்கோயில் பணியாளர்களுக்கு நபர் ஒருவருக்கு இரண்டு எண்ணிக்கையிலான சீருடைகள் வழங்கும் நிகழ்ச்சி திண்டுக்கல் அருள்மிகு கோட்டை மாரியம்மன் கோயில் திருமண மண்டபத்தில் இன்று(12.01.2022) நடைபெற்றது. இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை திண்டுக்கல் மண்டல இணை ஆணையாளர் திருமதி பா.பாரதி புத்தாடைகள் மற்றும் சீருடைகளை பயனாளிகளுக்கு வழங்கினார்கள். திண்டுக்கல் மாவட்டத்தில் 86 திருக்கோயில்களில் உள்ள அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், ஓதுவார்கள், பூசாரிகளுக்கு புத்தாடையும் மற்றும் திருக்கோயில் பணியாளர்களுக்கு சீருடைகளும் வழங்கப்படுகிறது.
இந்நிகழ்ச்சியில், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை உதவி ஆணையாளர் திருமதி தி.அனிதா, அருள்மிகு கோட்டை மாரியம்மன் கோயில் நிர்வாக அறங்காவலர் திரு.கண்ணன் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.