Close

The Hon’ble DCM VC – The Hon’ble Food and Civil Supply Minister – sports

Publish Date : 06/05/2025
.

செ.வெ.எண்:-13/2025

நாள்:-05.05.2025

திண்டுக்கல் மாவட்டம்

மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள், ஆத்தூர் வட்டம், சீவல்சரகு மற்றும் ஒட்டன்சத்திரம் வட்டம், கேதையறும்பு ஊராட்சி ஆகிய இடங்களில் முதலமைச்சர் சிறு விளையாட்டு அரங்கங்கள் கட்டும் பணிகளுக்கு சென்னையில் நடைபெற்ற விழாவில் அடிக்கல் நாட்டினார்.

அதனைத்தொடர்ந்து, மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், கேதையறும்பு ஊராட்சியில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள், சென்னை, நேரு விளையாட்டு அரங்கம், சென்னை ஒலிம்பிக் அகாடமியில் இன்று(05.05.2025) நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டு, திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் வட்டம், சீவல்சரகு கிராமம் மற்றும் ஒட்டன்சத்திரம் வட்டம், கேதையறும்பு ஊராட்சி தேவசின்னம்பட்டி கிராமம் உட்பட 18 இடங்களில் முதலமைச்சர் சிறு விளையாட்டு அரங்கங்கள் கட்டும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

அதனைத்தொடர்ந்து. மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் காளாஞ்சிபட்டி அருகில் உள்ள கேதையறும்பு ஊராட்சி தேவசின்னம்பட்டியில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

விழாவில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் பேசியதாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்ற பின்பு விளையாட்டு துறைக்கு முக்கியத்துவம் கொடுத்து, பல்வேறு விளையாட்டு போட்டிகளை நடத்தி, இந்தியாவிற்கே பெருமை சேர்த்திருக்கிறார். அந்த வகையில், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கடந்த 2022-ஆம் ஆண்டில் விளையாட்டு துறை அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர், 2022-ஆம் ஆண்டு டிசம்பர் 23-ஆம் தேதி ஒட்டன்சத்திரம் தொகுதி இடையகோட்டையில் சுமார் 6.40 இலட்சம் மரக்கன்றுகளை நடவு செய்து உலக சாதனை படைத்தார். அந்த மரங்கள் அனைத்து 10 முதல் 15 அடி உயரம் வரை வளர்ந்துள்ளன.

மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள், 180 உலக நாடுகள் கலந்து கொண்ட செஸ் ஒலிம்பிக் போட்டியை மகாபலிபுரத்தில் சிறப்பாக நடத்தி பெரிய புகழை தமிழ்நாட்டிற்கு ஏற்படுத்தி தந்தார். மாண்புமிகு பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் நேரு ஸ்டேடியத்திற்கு வந்தபோது, இப்போட்டிக்கு வந்துள்ள வீரர்களுக்கும், பயிற்சியாளர்களுக்கும், இந்நிகழ்ச்சியில் பங்கேற்றுயிருந்த அனைவருக்கும் உணவு வசதி, தங்குமிடம் உட்பட பல்வேறு வசதிகளை ஏற்படுத்திய தமிழ்நாடு அரசை பாராட்டுகிறேன் என்று பாரட்டினார். மேலும், கேலோ இந்தியா போட்டியை சிறப்பாக நடத்தினார், பின்னர் மாண்புமிகு முதலமைச்சர் கோப்பைக்கான அனைத்து போட்டியையும் சிறப்பாக நடத்தினார்.

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு 22 மாவட்டங்களில் சிறு விளையாட்டு அரங்குகள் அமைப்பதற்கும், இந்தாண்டு 40 சட்டமன்ற தொகுதிகளில் சிறு விளையாட்டு அரங்குகள் அமைப்பதற்கும் சட்டமன்றத்தில் அறிவிப்பை அறிவித்து, கடந்த ஆண்டில் அறிவித்த 22 சிறு விளையாட்டு அரங்கங்களில் 18 சிறு விளையாட்டு அரங்குகள் அமைப்பதற்கு இன்று(05.05.2025) அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கேதையறும்பு கிராம ஊராட்சிக்குட்பட்ட தேவசின்னம்பட்டியில் 35.33 ஏக்கர் பரப்பளவில் “முதலமைச்சர் சிறு விளையாட்டரங்கம்“ ரூ.3.00 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ளது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் விளையாட்டு வீரர்களுக்கு 3 சதவீதம் வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கி பல்வேறு துறைகளில் பணி நியமன ஆணைகளை வழங்கியுள்ளார்கள். இப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சிறு விளையாட்டு அரங்கம் ரூ.7.50 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ளது. மேலும், உள்விளையாட்டு அரங்கமும் அமைக்கப்படவுள்ளது. மேலும், இங்கு கால்பந்து மைதானம், கூடைப்பந்து மைதானம், கோகோ மைதானம், கபாடி மைதானம், பார்வையாளர்கள் அமரும் இடம், விளையாட்டு உபகரணங்கள், வைப்பறை, அலுவலக அறை, உடை மாற்றும் அறை, கழிப்பறை, மின் வசதி போன்ற வசதிகளுடன் கூடிய அரங்கம் அமைக்கப்படவுள்ளது.

தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் இதுபோல் விளையாட்டு மைதானம் அமைப்பதற்கான பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. மேலும், இப்பகுதியில் ஜிம் அறை, ஜிம் உபகரணங்கள் ஏற்படுத்தி தரப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். ஒட்டன்சத்திரம் , திண்டுக்கலில் பணம் கட்டி பயிற்சியில் ஈடுபட தேவையில்லை. இங்கே அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்படும்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொறுபேற்ற பின்பு இந்தியாவிற்கே முன்னோடியாக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக ஆட்சிபொறுப்பேற்ற பின்பு பெண்களுக்கு விடியல் பயணம், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படித்து உயர்கல்வி படிக்கின்ற பெண்களுக்கு புதுமைப்பெண் திட்டம், மாணவர்களுக்கு தமிழ்ப்புதல்வன் திட்டம் ஆகிய திட்டங்கள் வாயிலாக மாதம் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. 1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை படிக்கின்ற குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சட்டமன்றத்தில் 8 கல்லூரிகள் கட்டப்படும் என அறிவித்தார்கள். அதில் நத்தத்திற்கு ஒரு கல்லூரி அறிவித்துள்ளார்கள். களஞ்சியத்தில் ஆண்கள், பெண்கள் படிக்கின்ற கலைக்கல்லுாரிக்கும், பழனியில் பெண்கள் படிக்கின்ற கலைக்கல்லூரிக்கும் புதிய கட்டடம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. விருப்பாட்சியில் தொழிற்பயிற்சி நிலையம் கட்டப்பட்டு வருகிறது.

காளாஞ்சிபட்டியில் கலைஞர் நூற்றாண்டு போட்டித் தேர்வுக்கான பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இந்தாண்டு களஞ்சியத்தில் பிறபடுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினர் பிரிவை சேர்ந்த மாணவிகள் விடுதியில் தங்கி படிப்பதற்கான மாணவிகள் விடுதி அமைப்பதற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அனுமதி வழங்கியுள்ளார்கள். ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்டுவதற்கான அனுமதியும் வழங்கி உள்ளார்கள்.

இதுபோல் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்கு எண்ணற்ற பணிகளை செய்வதற்காக நிதி ஒதுக்கி தந்துள்ளார்கள். எனவே, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும், என மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் பேசினார்.

இவ்விழாவில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி இரா.ஜெயபாரதி, பழனி வருவாய் கோட்டாட்சியர் திரு.இரா.கண்ணன், ஒட்டன்சத்திரம் நகராட்சி துணைத்தலைவர் திரு.வெள்ளைச்சாமி, ஒட்டன்சத்திரம் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க தலைவர் திரு.ராஜாமணி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.