Close

The Hon’ble Food and Civil Supply Minister – Natham-Schemes

Publish Date : 20/06/2025
.

செ.வெ.எண்:-71/2025

நாள்:-19.06.2025

திண்டுக்கல் மாவட்டம்

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், நத்தம் சட்டமன்ற தொகுதியில் ரூ.4.00 கோடி மதிப்பீட்டிலான சாலை மேம்பாட்டுப் பணிக்கு அடிக்கல் நாட்டி, ரூ.3.21 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து, 286 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான வேலை உத்தரவுகளை வழங்கினார்.

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், நத்தம் சட்டமன்ற தொகுதியில் ரூ.4.00 கோடி மதிப்பீட்டிலான சாலை மேம்பாட்டுப் பணிக்கு இன்று(19.06.2025) அடிக்கல் நாட்டி, பல்வேறு ஊராட்சிகளில் ரூ.3.21 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து, கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் 286 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான வேலை உத்தரவுகளை வழங்கினார்.

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், நத்தம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, லிங்கவாடி ஊராட்சியில் எஸ்சிபியுஆர் திட்டத்தில் ரூ.4.00 கோடி மதிப்பீட்டில் லி.மலையூர் சாலை மேம்பாட்டுப் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.

தொடர்ந்து, நத்தம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பரளிபுதுார், முளையூர், சமுத்திராபட்டி, சிறுகுடி, வேலம்பட்டி, சாத்தம்பாடி, குடகிப்பட்டி, சிரங்காட்டுப்பட்டி ஆகிய ஊராட்சிகளில் மகாத்மாகாந்தி தேசிய வேலை உறுதித் திட்டம், அனைத்துக் கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், ஜல் ஜீவன் மிஷன், பொது நுாலகத்துறை, கனிம வளத்துறை, நபார்டு உள்ளிட்ட திட்டங்களின் கீழ் மேற்கொள்ளப்பட்ட சாலை மேம்பாட்டு பணி, ஊராட்சி செயலக கட்டடம், நியாயவிலைக் கடை கட்டடம், மேல்நிலை குடிநீர் தொட்டி, தானிய சேமிப்பு கிட்டங்கி கட்டடம், நுாலக கட்டடம், பள்ளி வகுப்பறை கட்டடம் என ரூ.3.21 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். மேலும், ஆவிச்சிபட்டி ஊராட்சி பாண்டியன் நகர் மற்றும் முளையூர் ஊராட்சி இராவுத்தம்பட்டி ஆகிய கிராமங்களில் பகுதி நேர நியாயவிலைக்கடைகளை திறந்து வைத்தார். மேலும், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில்(2025026 ஆண்டு) 286 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான வேலை உத்தரவுகள் மற்றும் 6 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சிகளில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் பேசியதாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் செயல்படுத்தி வருகிறார்கள்.

அந்தவகையில், திண்டுக்கல் மாவட்டத்தில் எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. நத்தம் சட்டமன்ற தொகுதியில், லிங்கவாடி ஊராட்சியில் லி.மலையூருக்கு சாலை வசதி கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் லி.மலையூருக்கு சாலை அமைக்க இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

நத்தம் சட்டமன்ற தொகுதியில் கிராமப்புற பகுதிகள் அதிகம் உள்ளன. இங்குள்ள மாணவ, மாணவிகள் உயர்கல்வி பயிலுவதை உறுதி செய்யும் வகையில் நத்தத்தில் இந்த ஆண்டு முதல் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி தொடங்கப்பட்டுள்ளது. இந்தக் கல்லுாரிக்கு விரைவில் சொந்தக் கட்டடம் கட்டப்படும்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தேர்தல் நேரத்தில் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றியதோடு, சொல்லாத எண்ணற்ற திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டை குடிசைகள் இல்லாத மாநிலமாக உருவாக்க கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். தமிழ்நாட்டில் 8 இலட்சம் வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டு, 2 இலட்சம் வீடுகள் கட்டுவதற்கு ஆணை வழங்கப்பட்டு வருகிறது. ஒரு கலைஞர் கனவு இல்லத்திற்கு ரூ.3.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் சுமார் 10,000 வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. அதேபோல், ஊரக வீடுகள் பழுதுபார்க்கும் திட்டத்தில் 2.50 இலட்சம் வீடுகளை சீரமைக்க ரூ.2000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முதலமைச்சரின் வீடுகள் மறு கட்டுமான திட்டத்திலும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பெண்களின் பாதுகாப்பிற்காகவும், பெண்கள் உயர்கல்வி கற்பதை ஊக்குவிப்பதற்காக தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில்(தமிழ் வழிக்கல்வி) படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் ‘புதுமைப்பெண்’ திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன்மூலம் தமிழ்நாட்டில் பெண்கள் உயர்கல்வி படிப்பது 34 சதவீதம் உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் இத்திட்டத்தின் வாயிலாக சுமார் 5 இலட்சம் மாணவிகள் மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை பெற்று பயனடைந்து வருகின்றனர். இதேபோல் மாணவர்களுக்கும் மாதம் ரூ.1000 வழங்கும் தமிழ்ப்புதல்வன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக ரூ.360 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கல்வி மேம்பாட்டிற்காக இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிகளவு மாணவ, மாணவிகள் உயர்கல்வி படித்து வருகின்றனர். தமிழ்நாட்டில் உயர்கல்வி பயிலுவோரின் எண்ணிக்கை 54 சதவீதம் உயர்ந்துள்ளது.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் சுமார் 18.00 இலட்சம் குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர். இந்த திட்டம் இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லை. தமிழ்நாட்டில்தான் செயல்படுத்தப்படுகிறது.

பெண்களின் நலனுக்காக அரசு நகரப் பேருந்துகளில் கட்டணமில்லா பயணம் மேற்கொள்ளும் விடியல் பயணத் திட்டம், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் 1.15 கோடி பெண்கள் பயனடைந்து வருகின்றனர். மேலும், தகுதியான நபர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதற்காக ஜூலை 15-ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படவுள்ளது. தகுதியுள்ள அனைவரும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெற்று அவற்றை தீர்க்க 45 நாட்களில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அறிவித்துள்ளார்கள்.

100 நாள் வேலை திட்டம் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. ஆரம்பகாலத்தில் ரூ.98 சம்பளத்தில் தொடங்கப்பட்ட இத்திட்டத்தில் தற்போது ரூ.336 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. பொதுமக்களுக்குத் தேவையான உணவு, உடை, சுகாதாரம், கல்வி, போக்குவரத்து வசதி என அனைத்து அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் அரசின் திட்டங்கள் அனைத்தும் ஜாதி, மதம், இனம் பாகுபாடு இன்றி அனைத்துத் தரப்பு மக்களுக்கும் கிடைக்கும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளும் சீரான வளர்ச்சி பெற வேண்டும் என எண்ணத்தில் எண்ணற்ற திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி பொற்கால ஆட்சி நடத்தி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கரங்களை வலுப்படுத்தும் விதமாக என்றென்றும் உறுதுணையுடன் இருக்க வேண்டும், என மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி இரா.ஜெயபாரதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி பெ.திலகவதி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஆண்டிஅம்பலம், நத்தம் பேரூராட்சித் தலைவர் திரு.சேக் சிக்கந்தர் பாட்ஷா, முக்கிய பிரமுகர்கள் திரு.ரத்தினகுமார், திரு.பழனிச்சாமி, திரு.விஜயன், திரு.ராஜ்மோகன், திரு.வெள்ளிமலை, திரு.ராதா, திரு.முத்துக்குமரன், நத்தம் வட்டார வளர்ச்சி அலுவலர் திருமதி ஆ.முருகேஸ்வரி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.

.

.