Close

The Hon’ble Food and Civil Supply Minister – Oddanchatram – Meeting

Publish Date : 13/06/2025
.

செ.வெ.எண்:-38/2025

நாள்:-12.06.2025

திண்டுக்கல் மாவட்டம்

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.17.85 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.1.21 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.17.85 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிகளுக்கு இன்று(12.06.2025) அடிக்கல் நாட்டி, ரூ.1.21 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், மேல்கரைப்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மேல்கரைப்பட்டியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10.00 இலட்சம் மதிப்பீட்டில் பயணிகள் நிழற்குடை மற்றும் ரூ.30.00 இலட்சம் மதிப்பீட்டில் சமுதாயக்கூடம், முதலமைச்சர் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தில் ரூ.64.27 இலட்சம் மதிப்பீட்டில் சாலை மேம்பாட்டுப் பணிகள், அனைத்துக் கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தில் ரூ.40.10 இலட்சம் மதிப்பீட்டில் சாலையில் வண்ணக்கல் பதித்தல், கதிரக்கும் களம் மற்றும் நெற்களம் அமைத்தல் உள்ளிட்டன பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள், நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.3.11 கோடி மதிப்பீட்டில் சாலை தரம் உயர்த்தல் பணி, மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் ரூ2.22 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைத்தல் ஆகிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

பின்னர், இராஜாம்பட்டி ஊராட்சியில், அத்திமரத்துவலசு கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சர் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தில் ரூ.45.20 இலட்சம் மதிப்பீட்டில் குருவன்வலசு முதல் இந்திராநகர் வரை சாலை அமைக்கும் பணி, மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் ரூ.3.70 இலட்சம் மதிப்பீட்டில் ஓரடுக்கு மெட்டல் சாலை அமைக்கும் பணிகளுக்கு அடிக்கல்நாட்டி, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து இராஜாம்பட்டி மற்றும் அத்திமரத்துவலசு ஆகிய கிராமங்களில் தலா ரூ.10.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பயணிகள் நிழற்குடையை திறந்து வைத்தார்.

தொடர்ந்து, முத்துநாயக்கன்பட்டி ஊராட்சியில், முதலமைச்சர் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தில் ரூ.54.40 இலட்சம மதிப்பீட்டில் சாலை மேம்பாட்டுப் பணிகள், நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.2.08 கோடி மதிப்பீட்டில் சாலை தரம் உயர்த்தும் பணி, அயோத்திதாஸ் பண்டிதர் திட்டத்தில் ரூ.9.13 இலட்சம் மதிப்பீட்டில் குருவன்வலசு கிராமத்தில் மயானத்திற்கு சுற்றுச்சுவர் மற்றும் காத்திருப்போர் கூடம் அமைக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

அதன்பின்னர், மிடாப்பாடி ஊராட்சி, குமாரபாளையத்தில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், ரூ.14.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையக் கட்டடம் மற்றும் ரூ.9.97 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பயணியர் நிழற்குடை, மிடாப்பாடி கிராமத்தில் நமக்குநாமே திட்டத்தில் ரூ.50.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சமுதாயக்கூடம் ஆகியவற்றை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

தொடர்ந்து, மிடாப்பாடி ஊராட்சியில், முதலமைச்சர் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தில் ரூ.35.35 இலட்சம் மதிப்பீட்டில் தார்ச்சாலை அமைக்கும் பணி, மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் ரூ.4.25 இலட்சம் மதிப்பீட்டில் ஓரடுக்கு மெட்டல் சாலை அமைக்கும் பணி ஆகியவற்றிற்கு அடிக்கல் நாட்டினார்.

பின்னர், புஷ்பத்துார் ஊராட்சியில், முதலமைச்சர் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தில் ரூ.18.43 இலட்சம் மதிப்பீட்டில் தார்ச்சாலை அமைக்கும் பணி, அயோத்திதாஸ் பண்டிதர் திட்டத்தில் ரூ.3.20 இலட்சம் மதிப்பீட்டில் வயலுார் அண்ணா நகரில் மயானத்திற்கு சுற்றுச்சுவர் மற்றும் காத்திருப்போர் கூடம் அமைக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும், அண்ணாநகரில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் ரூ.9.32 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நியாயவிலைக்கடையை திறந்து வைத்தார்.

பின்னர், மானுார் ஊராட்சியில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து அண்ணாநகர் மற்றும் காளியம்மன் கோயில் அருகில் தலா ரூ.10.00 இலட்சம் மதிப்பீட்டில் பயணியர் நிழற்குடை, மானுார் கிராமத்தில் ரூ.1.00 கோடி மதிப்பீட்டில் பல்நோக்கு கட்டடம் மற்றும் சமையலறைக்கூடம் கட்டும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

அதன்பின்னர், தொப்பம்பட்டி ஊராட்சியில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தொப்பம்பட்டியில் ரூ.10.00 இலட்சம் மதிப்பீட்டில் பயணியர் நிழற்குடை அமைக்கும் பணி, நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.4.67 கோடி மதிப்பீட்டில் 3 இடங்களில் சாலை தரம் உயர்த்தும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10.00 இலட்சம் மதிப்பீட்டில் சரவணப்பட்டியில் கட்டப்பட்ட பயணியர் நிழற்குடையை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

தொடர்ந்து, கொத்தையம் ஊராட்சியில், நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.1.84 கோடி மதிப்பீட்டில் கொத்தையம் முதல் குருவப்பநாயக்கன்வலசு வரை தார்ச்சாலை அமைக்கும் பணி, முதலமைச்சர் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தில் கொத்தையம் மயானச்சாலை ரூ.24.33 இலட்சம் மதிப்பீட்டிலும், வீரகிரிக்கோட்டை மயானச்சாலை ரூ.10.73 இலட்சம் மதிப்பீட்டிலும் தார்ச்சாலையாக தரம் உயர்த்தும் பணி, நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.40.00 இலட்சம் மதிப்பீட்டில் கொத்தையம் சமுதாயக்கூடத்திற்கு சமையல் கூடம் கட்டும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

பின்னர், போர்டுவார்பட்டி ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10.00 இலட்சம் மதிப்பீட்டில் போர்டுவார்பட்டியில் கட்டப்பட்டுள்ள பயணியர் நிழற்குடையை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

தொடர்ந்து, மஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சியில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10.00 இலட்சம் மதிப்பீட்டில் மாட்டுப்பாதையில் பயணியர் நிழற்குடை, அனைத்துக் கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தில் ரூ.34.96 இலட்சம் மதிப்பீட்டில் சாலை அமைத்தல், கதிரடிக்கும் களம் அமைத்தல், சிமெண்ட் சாலை 2 இடங்களில் அமைத்தல், மாநில நிதியிலிருந்து ரூ.15.36 இலட்சம் மதிப்பீட்டில் காளிபட்டி செங்குளம் துார்வாரும் பணி, மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் ரூ.29.70 இலட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற அலுவலகம் அமைத்தல் ஆகியற்றிற்கு அடிக்கல் நாட்டினார்.

இந்நிகழ்ச்சிகளில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் தெரிவித்ததாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் செயல்படுத்தி வருகிறார்கள்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டை குடிசைகள் இல்லாத மாநிலமாக உருவாக்க கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். தமிழ்நாட்டில் 8 இலட்சம் வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டு, வீடுகள் கட்டுவதற்கு ஆணை வழங்கப்பட்டு வருகிறது. ஒரு கலைஞர் கனவு இல்லத்திற்கு ரூ.3.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் சுமார் 10,000 வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. அதேபோல், ஊரக வீடுகள் பழுதுபார்க்கும் திட்டத்தில் 2.50 இலட்சம் வீடுகளை சீரமைக்க ரூ.2000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டப் பணிகள் ரூ.1000 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தப்பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. இத்திட்டம் பயன்பாட்டிற்கு வந்தவுடன் நகராட்சி பகுதிகளில் ஒரு நபருக்கு 135 லிட்டர் தண்ணீர் தினமும் வழங்கப்படும். அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்படும்.

நகர்ப்புற வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டத்தில், கீரனுாரில் 432 வீடுகளுடன் அடுக்குமாடி குடியிருப்பு ரூ.60.00 கோடி மதிப்பீட்டிலும் கட்டப்பட்டு வருகின்றன. கொழுமன்கொண்டான் ஊராட்சியில் 100 வீடுகளுடன் சமத்துவபுரம் அமைக்கப்பட்டு வருகிறது.

முதலமைச்சர் சாலை மேம்பாட்டுத் திட்டத்தில் சாலைகள் மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஊராட்சி ஒன்றிய சாலைகள் நெடுஞ்சாலைத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டு சாலைகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன.

பெண்களின் பாதுகாப்பிற்காகவும், பெண்கள் உயர்கல்வி கற்பதை ஊக்குவிப்பதற்காக தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில்(தமிழ் வழிக்கல்வி) படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் ‘புதுமைப்பெண்’ திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன்மூலம் தமிழ்நாட்டில் பெண்கள் உயர்கல்வி படிப்பது 34 சதவீதம் உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் இத்திட்டத்தின் வாயிலாக சுமார் 5 இலட்சம் மாணவிகள் மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை பெற்று பயனடைந்து வருகின்றனர். இதேபோல் மாணவர்களுக்கும் மாதம் ரூ.1000 வழங்கும் தமிழ்ப்புதல்வன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக ரூ.360 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கல்வி மேம்பாட்டிற்காக இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிகளவு மாணவ, மாணவிகள் உயர்கல்வி படித்து வருகின்றனர். தமிழ்நாட்டில் உயர்கல்வி பயிலுவோரின் எண்ணிக்கை 54 சதவீதம் உயர்ந்துள்ளது.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் சுமார் 20.00 இலட்சம் குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர். இந்த திட்டம் இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லை. தமிழ்நாட்டில்தான் செயல்படுத்தப்படுகிறது.

ஒட்டன்சத்திரம் கள்ளிமந்தையத்தில் உயர்கல்வித்துறை சார்பில் ஒரு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி தொடங்கப்பட்டுள்ளது. இந்தக் கல்லுாரிக்கு ரூ.15.00 கோடி மதிப்பீட்டில் சொந்தக்கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. அம்பிளிக்கையில் பெண்கள் மட்டும் படிக்கும் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் சார்பில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி தொடங்கப்பட்டுள்ளது. இந்தக் கல்லுாரிக்கு ஒட்டன்சத்திரத்தில் ரூ.25.00 கோடி மதிப்பீட்டில் கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. விருப்பாட்சியில் அரசு தொழிற்பயிற்சி நிலையம் தொடங்கப்பட்டு 3 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்பயிற்சி நிலையத்திற்கு ரூ.5.00 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. பணிகள் முடியும் தருவாயில் உள்ளன.

மேலும், ஆத்துார் சட்டமன்ற தொகுதியில், ரெட்டியார்சத்திரத்தில் உயர்கல்வித்துறை சார்பில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, கூட்டுறவுத்துறை சார்பில் ஆத்துாரில் கூட்டறவு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, பழனியில் சித்தா கல்லுாரி, குஜிலியம்பாறையில் தொழிற்பயிற்சி நிலையம், கொடைக்கானலில் ரூ.200 கோடி மதிப்பீட்டில் கூட்டுறவு மேலாண்மை இணையம் ஆகியவை தொடங்கப்பட்டுள்ளன.

பொதுமக்கள், விவசாயிகள், மாணவ, மாணவிகள் என அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் அவர்களின் எண்ணங்கள், எதிர்பார்ப்பு மற்றும் நம்பிக்கையை பூர்த்தி செய்யும் விதமாக எல்லோருக்கும் எல்லாம் வகையில் எண்ணற்ற திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி பொற்கால ஆட்சி நடத்தி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கரங்களை வலுப்படுத்தும் விதமாக என்றென்றும் ஆதரவுடன் இருக்க வேண்டும், என மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், உதவி இயக்குநர்(ஊராட்சிகள்) திரு.நாகராஜ், உதவி இயக்குநர்(நெடுஞ்சாலைகள்துறை) திரு.பொன்னுவேல், பழனி வட்டாட்சியர் திரு.பிரசன்னா, பழனி வட்ட வழங்கல் அலுவலர் திருமதி லட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.பிரபுபாண்டியன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.

.

.

.

.