The Hon’ble Food and Civil Supply Minister – Scheme meeting

செ.வெ.எண்:-15/2025
நாள்:-05.05.2025
திண்டுக்கல் மாவட்டம்
மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.
மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து துறை அலுவலர்களுடன் ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இன்று(05.05.2025) ஆய்வு மேற்கொண்டார்.
மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, பொதுப்பணித்துறை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், மின்சார துறை மற்றும் பல்வேறு துறைகள் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்தும், நடைபெற்று வரும் திட்டப்பணிகள் மற்றும் நிறைவேற்றப்படவுள்ள திட்டப்பணிகள் குறித்தும் துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார். நடைபெற்று வரும் பணிகளின் தற்போதைய நிலை, அறிவிக்கப்பட்ட பணிகளை தொடங்குவதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
இக்கூட்டத்தில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் பேசியதாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து, எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் அத்திட்டங்களின் பயன்கள் அனைத்துத் தரப்பு மக்களையும் சென்றடையும் வகையில் தொடர்ந்து செயல்படுத்தி பொற்கால ஆட்சி நடத்தி வருகிறார்.
தமிழ்நாடு அரசு எண்ணற்ற திட்டங்களை அறிவித்தாலும், அவற்றை செயல்படுத்தும் இடத்தில் அரசு அலுவலர்கள் உள்ளனர். அரசின் திட்டங்களை மக்களைச் சென்று சேருவதில் அரசு அலுவலர்களின் பணி மிகவும் முக்கியமானது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், பொறுப்பேற்ற பின்னர் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் பல்வேறு திட்டங்கள் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இன்னும் பல திட்டங்கள் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் ஏழை, எளிய மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டு வருகின்றன. பட்டா வழங்குவது தொடர்பாக நிலுவையில் உள்ள சிரமங்களை சரிசெய்து, பட்டா வழங்க அலுவலர்கள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் பயனாளிகள் வீடுகள் கட்டுவதற்கு தேவையான அனைத்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு சுமார் 6,125 வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. நடப்பு ஆண்டிற்கு சுமார் 3,000 வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றிட அனைத்துத் துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயலாற்றிட வேண்டும், என மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி இரா.ஜெயபாரதி, பழனி வருவாய் கோட்டாட்சியர் திரு.இரா.கண்ணன் மற்றும் துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.