Close

The Hon’ble Food and Civil Supply Minister – Schemes

Publish Date : 15/04/2025
.

செ.வெ.எண்:-42/2025

நாள்:-13.04.2025

திண்டுக்கல் மாவட்டம்

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், ரூ.2.80 கோடி மதிப்பீட்டிலான சாலை மேம்பாட்டுப் பணிக்கு அடிக்கல் நாட்டி, ரூ.73.48 இலட்சம் மதிப்பிலான முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் இன்று(13.04.2025) நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு ரூ.2.80 கோடி மதிப்பீட்டிலான சாலை மேம்பாட்டுப் பணிக்கு அடிக்கல் நாட்டி, ரூ.73.48 இலட்சம் மதிப்பிலான முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சின்னக்காம்பட்டி ஊராட்சி நாரணப்பநாயக்கன்பட்டியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், ரூ.9.97 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நியாய விலை கடை கட்டடம், மார்க்கம்பட்டி ஊராட்சி இராயக்காவலசில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், ரூ.₹9.32 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நியாயவிலைக்கடை கட்டடம் மற்றும் மார்க்கம்பட்டி ஆதிதிராவிடர் காலனியில் நமக்கு நாமே திட்டத்தில் ரூ.35.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சமுதாயக்கூடம் கூடுதல் கட்டடம், மார்க்கம்பட்டி ஆதிதிராவிடர் காலணியில் அயோத்திதாஸ் பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டு திட்டத்தில் ரூ10.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சுற்றுச்சுவர் மற்றும் காத்திருப்போர் கூடம், மார்க்கம்பட்டி இந்துக்கள் மயானத்தில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.9.19 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட தண்ணீர் வசதி மற்றும் பேவர் பிளாக் தளம் ஆகியவற்றை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இன்று(13.04.2025) திறந்து வைத்தார் மேலும், மார்க்கம்பட்டி ஊராட்சி இராயக்காவலசு முதல் நெடுவலசு வரை உள்ள சாலைகளை நபார்டு மட்டும் கிராம சாலைகள் திட்டத்தில் ரூ.2.80 கோடி மதிப்பீட்டில் தரம் உயர்த்துதல் பணிக்கு இன்று அடிக்கல் நாட்டினார்.

இந்நிகழ்ச்சிகளில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் தெரிவித்ததாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து, எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்றவுடன் மகளிர் சுயஉதவிக்குழுக்களை சேர்ந்த குழுவினர்களுக்கு 5 பவுனுக்கு கீழ் நகை கடன் தள்ளுபடி மற்றும் கூட்டுறவு வங்கியில் பெண்கள் சுயஉதவிக்குழு கடன் தள்ளுபடி செய்யப்பட்டன.

முதலமைச்சர் சாலை மேம்பாட்டுத் திட்டத்தில் சாலைகள் மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஊராட்சி ஒன்றிய சாலைகள் நெடுஞ்சாலைத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டு சாலைகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன.

அனைத்து ஊராட்சிகளும் சீரான வளர்ச்சி அடைய வேண்டும் என்பதற்காக குடிநீர் வசதி, சாலை வசதி, தெருவிளக்கு வசதி, சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை தேவைகளும் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

தமிழ்நாட்டில் 2 இலட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டதில் இதுவரை 1.90 இலட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது.

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் தகுதியுள்ளவர்கள் விடுபட்டிருந்தால் அவர்களுக்கும் இத்திட்டத்தின் பயன்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நகரப் பேருந்துகளில் பெண்கள் கட்டணமில்லா பயணம் மேற்கொள்ளும் வகையில் விடியல் பயணம் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன்மூலம் வேலைக்கு செல்லும் ஒவ்வொரு பெண்ணுக்கு போக்குவரத்து செலவு குறைந்து மாதம் சுமார் ரூ.900 சேமிப்பு ஏற்படுகிறது.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை படிக்கின்ற குழந்தைகளுக்கு காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன்மூலம் சுமார் 20.70 இலட்சம் குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர்.

6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில்(தமிழ் வழிக்கல்வி) படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் புதுமைப் பெண் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் வாயிலாக கடந்த 3 ஆண்டுகளில் பல இலட்சம் மாணவிகள் பயனடைந்துள்ளனர். இத்திட்டத்தில் மாணவர்களும் பயன்பெறும் வகையில் தமிழ்ப்புதல்வன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில்(தமிழ் வழிக்கல்வி) படித்து உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படுகிறது.

தமிழ்நாட்டை குடிசையில்லா மாநிலமாக உருவாக்க வேண்டும் என்பதற்காக கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் 8 இலட்சம் வீடுகள் கட்டுவதற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். அதில் முதற்கட்டமாக ஒரு இலட்சம் வீடுகள் கட்டுவதற்கு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு மேலும் ஒரு இலட்சம் வீடுகள் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் பழுதடைந்த வீடுகளை சீரமைக்கும் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 3.50 இலட்சம் வீடுகளை சீரமைக்க ரூ.2,500 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்ஆட்சி பொறுப்பேற்ற பின்பு தமிழ்நாட்டில் குடும்ப அட்டை கோரி பெறப்படும் விண்ணப்பங்களில் தகுதியான நபர்களுக்கு 15 நாட்களில் குடும்ப அட்டை வழங்கப்படுகிறது. அந்த வகையில் இதுவரை 20 இலட்சம் குடுபங்களுக்கு புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது.

இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48 திட்டம் செயல்பட்டு வருகிறது. விபத்தில் சிக்கியவர்களுக்கு அரசு அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றால் 48 மணி நேரத்திற்கு ஏற்படும் மருத்துவ செலவினை அரசு ஏற்றுக்கொள்ளும் வகையில் ஒரு நபருக்கு ரூ.2 இலட்சம் மதிப்பில் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்ற பின்னர், முதியோர் உதவித்தொகை ரூ.1000த்திலிருந்து ரூ.1200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகை ரூ.1000த்தலிருந்து ரூ.1500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

மரத்தை நாம் வளர்த்தால் மரம் நம்மை வளர்க்கும் என முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் சொன்னதுபோல் நாம் மரங்களை வளர்க்க வேண்டும். அந்த வகையில் தமிழ்நாட்டை பசுமை மாநிலமாக மாற்ற மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பல்வேறு நடவடிக்கைள் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இடையக்கோட்டையில் 117 ஏக்கர் நிலப்பரப்பில் 6.40 இலட்சம் மரக்கன்றுகள் நடவு செய்து உலக சாதனை படைக்கப்பட்டது. அதன்காரணமாக இந்தப்பகுதியில் மழைப்பொழிவு நல்ல முறையில் இருந்து வருகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. 250 நியாயவிலைக்கடைகள் பிரிக்கப்பட்டு புதியதாக பகுதிநேரம் மற்றும் முழுநேரக் கடைகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் மட்டும் 86 நியாயவிலைக் கடைகள் பிரிக்கப்பட்டு புதிய கடைகள் உருவாக்கப்பட்டுள்ளன. அந்த புதிய கடைகளுக்கு சொந்த கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன.

ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் 2 கல்லுாரிகள் மற்றும் விருப்பாட்சியில் தொழிற்பயிற்சி நிலையம் ஆகியவை தொடங்கப்பட்டுள்ளன. கள்ளிமந்தையத்தில் உயர்கல்வித்துறை சார்பில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி தொடங்கப்பட்டுள்ளது. அதேபோல் பெண்கள் மட்டும் படிக்கும் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி இந்துசமய அறநிலையத்துறை சார்பில் அம்பிளிக்கையில் செயல்பட்டு வருகிறது. அதற்கு ஒட்டன்சத்திரத்தில் ரூ.25.00 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. விருப்பாட்சியில் தொழிற்பயிற்சி நிலையம் ரூ.7.00 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது.

ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 77 கிராம ஊராட்சிகள், ஒட்டன்சத்திரம் நகராட்சி மற்றும் கீரனுார் பேரூராட்சி பகுதிகளுக்கு காவிரி குடிநீர் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பொதுமக்கள், விவசாயிகள், மாணவ, மாணவிகள் என அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் அவர்களின் எண்ணங்கள், எதிர்பார்ப்பு மற்றும் நம்பிக்கையை பூர்த்தி செய்யும் வகையில் எண்ணற்ற திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி பொற்கால ஆட்சி நடத்தி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு என்றென்றும் ஆதரவுடன் இருக்க வேண்டும், என மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சிகளில், கூட்டுறவு சங்கங்கள் இணைப்பதிவாளர் திரு.சி.குருமூர்த்தி, பழனி வருவாய் கோட்டாட்சியர் திரு.இரா.கண்ணன், மாவட்ட வழங்கல் அலுவலர் திரு.அன்பழகன், வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.காமராஜ், உதவி இயக்குநர்(நெடுஞ்சாலைத்துறை) திரு.பொன்னுவேல், ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் திரு.பழனிச்சாமி, பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.