Close

The Hon’ble Rural Development Minister – Dindigul BUS – Inaguration

Publish Date : 08/05/2025
.

செ.வெ.எண்:-20/2025

நாள்:-07.05.2025

திண்டுக்கல் மாவட்டம்

மாண்புமிகு ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், 9 வழித்தடங்களில் புதிய பேருந்துகள் இயக்கத்தை தொடங்கி வைத்தார்.

மாண்புமிகு ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், 9 வழித்தடங்களில் புதிய பேருந்துகள் இயக்கத்தை திண்டுக்கல் காமராஜர் பேருந்து நிலையத்தில் இன்று(07.05.2025) கொடியசைத்து தொடங்கி வைத்தார். வேடசந்துார் சட்டமன்ற உறுப்பினர் திரு.ச.காந்திராஜன், திண்டுக்கல் மாநகராட்சி வணக்கத்திற்குரிய மேயர் திருமதி இளமதி ஜோதிபிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாண்புமிகு ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், திண்டுக்கல் – சோலைக்காடு(வழி-செம்பட்டி, பன்றிமலை, ஆடலுார்), திண்டுக்கல் – சோலைக்காடு(வழி-கரிசல்பட்டி, பன்றிமலை, கே.சி.பட்டி), திண்டுக்கல் – பன்றிமலை(வழி-பெரும்பாறை, கே.சி.பட்டி, ஆடலுார்), வத்தலக்குண்டு – கிளாவரை(வழி-கொடைக்கானல், கிளாவரை), வத்தலக்குண்டு – பன்றிமலை (வழி- சித்துார், பெரும்பாறை, தடியன்குடிசை), வத்தலக்குண்டு – தாண்டிக்குடி ( வழி-சித்துார், பெரும்பாறை, தடியன்குடிசை), வத்தலக்குண்டு – ஊத்து (வழி- பெரும்பாறை, தாண்டிக்குடி, பண்ணைக்காடு), பத்தலக்குண்டு – தாண்டிகுடி (வழி – சித்துார், பெரும்பாறை, தடியன்குடிசை), திண்டுக்கல் – வளவிசெட்டிபட்டி (வழி-எஸ்பிஎம் கல்லுாரி, வடமதுரை, அய்யலுார்) ஆகிய வழித்தடங்களில் புதிய பேருந்துகள் இயக்கத்தை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் தெரிவித்ததாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் அரசின் திட்டங்கள் அனைத்துத் தரப்பு மக்களையும் சென்றடையும் வகையில் செயல்படுத்தி வருகிறார்.

பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் தகுதியுள்ளவர்கள் விடுபட்டிருந்தால் அவர்களும் இத்திட்டத்தில் பயனடைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசு நகரப் பேருந்துகளில் பெண்கள் கட்டணமில்லா பயணம் மேற்கொள்ள விடியல் பயணம் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் போக்குவரத்துத் துறைக்கு முக்கியத்துவம் அளித்து, அதிக நிதி ஒதுக்கீடு செய்து, குக்கிராமங்களுக்கும் பேருந்து வசதியை ஏற்படுத்திட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். மக்களுக்குத் தேவையான திட்டங்களை திறம்பட செயல்படுத்தி வருகிறார்கள். தமிழ்நாடு முழுவதும் அனைத்து தொகுதிகளும் சீரான வளர்ச்சி பெற வேண்டும் என்ற வகையில் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

அந்த வகையில், திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இன்றைய தினம் மலைக் கிராமங்களுக்கு 9 வழித்தடங்களில் புதிய பேருந்துகள் இயக்கம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. பொதுமக்களின் தேவைக்கேற்ப பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மக்களின் தேவையை அறிந்து கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தமிழ்நாட்டில் சுமார் 2000 பேருந்துகள் புதிய பேருந்துகளாக மாற்றப்பட்டுள்ளன. இன்னும் சுமார் 2000 புதிய பேருந்துகள் வரவுள்ளன.

தமிழ்நாட்டில் தனியார் பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வந்த நிலையில், பேருந்துகள் இயக்கத்தை அரசுடைமையாக்கப்பட்டது முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் ஆட்சி காலத்தில்தான். இந்தியாவிலேயே முதல்முறையாக அரசு பேருந்துகள் இயக்கப்பட்டது தமிழ்நாட்டில்தான். அந்த பெருமை முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களையே சாரும். இதனால்தான் தமிழ்நாட்டில் அனைத்து கிராமங்களுக்கும் பேருந்து வசதி கிடைத்துள்ளது. மேலும், குக்கிராமங்களுக்கும், மலைக்கிராமங்களுக்கும் பேருந்து வசதியை ஏற்படுத்தும் வகையில் 5000 சிற்றுந்துகள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் அனுமதி அளித்தார்கள்.

பேருந்துகள் இயக்கம் அரசுடைமையாக்கப்பட்ட பின்னர் அரசு பேருந்துகளில் திருக்குறள் எழுதப்பட்டது. பள்ளி சென்று பாடம் படிக்காதவர்கள் கூட பேருந்து பயணத்தின்போது திருக்குறளை படித்து அதன் பொருளை அறிந்துகொள்ள வழிவகை செய்தவர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள். மக்களின் அறியாமையை நீக்கி, விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியவர்.

இது மக்களாட்சி, மக்களுக்காக உருவாக்கப்பட்ட அரசு. எல்லோருக்கும் எல்லாம் என்பதுதான் திராவிட மாடல் ஆட்சி. தமிழை வளர்ச்சி பெற செய்ததோடு மட்டுமின்றி, எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்பது செயல்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்தான் உலக மறைமொழியாக இருக்கிறது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நான்கு ஆண்டு ஆட்சியில் மக்களுக்குத்து தேவையான ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. நான்கு ஆண்டு சாதனைகளை சொன்னால் போதும், மக்கள் நம் பக்கம் தான்.

மக்களாட்சி தத்துவத்திற்கு ஒரு முதலமைச்சர் என்றால் அது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்தான். தமிழ்நாட்டில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி பொற்கால ஆட்சி நடத்தி, இந்தியாவிலேயே தலைசிறந்த முதலமைச்சராக திகழ்கிறார்.

அரசின் திட்டங்கள் அனைவரையும் சென்றடைய தொடர்ந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கரத்தை வலுப்படுத்த நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயலாற்றிட வேண்டும், என மாண்புமிகு ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், திண்டுக்கல் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி இரா.ஜெயபாரதி, திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு.இரா.சக்திவேல், திண்டுக்கல் மாநகராட்சி துணை மேயர் திரு.ச.ராஜப்பா, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் திண்டுக்கல் மண்டல பொதுமேலாளர் திரு.ஏ.முத்துக்கிருஷ்ணன் மற்றும் பலர் கலந்துகொண்டர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.

.

.