The Hon’ble Rural Development Minister-Petition

செ.வெ.எண்:-72/2025
நாள்:-20.06.2025
திண்டுக்கல் மாவட்டம்
மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் பிள்ளையார்நத்தம் ஊராட்சியில் அரசின் திட்டங்களின் பயன்கள் பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்யும் வகையில் பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெற்றுக்கொண்டார்.
மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் தலைமையில் திண்டுக்கல் மாவட்டம், பிள்ளையார்நத்தம் ஊராட்சியில் அரசின் திட்டங்களின் பயன்கள் பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்யும் வகையில் பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறும் முகாம் இன்று(20.06.2025) நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, தெரிவித்ததாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக எண்ணற்ற திட்டங்களை அறிவித்து, அந்த திட்டங்களின் பயன்கள் கடைக்கோடி கிராமத்தில் வசிக்கின்ற பொதுமக்களுக்கும் கிடைக்கும் வகையில் செயல்படுத்தி வருகிறார். அரசின் திட்டங்கள் அனைத்துத் தரப்பு மக்களையும் சென்றடையச் செய்வதுதான் திராவிட மாடல் அரசின் நோக்கம்.
அரசு நகரப் பேருந்துகளில் பெண்கள் கட்டணமில்லா பயணம் மேற்கொள்ள விடியல் பயணத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். இத்திட்டத்தின் மூலம் பெண்கள் சுமார் 33 கோடி பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர். பெண்களின் முன்னேற்றத்திற்காக ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் தகுதியான நபர்கள் விடுபட்டிருந்தால் அவர்களும் இத்திட்டத்தின் பயன்கள் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்து எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. பெண்கள் உயர்கல்வி பயிலுவதை ஊக்குவிக்கும் வகையில் மாதம் ரூ.1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம் செயல்படுத்தப்படுகின்றன. இதில் உயர்கல்வி பயிலும் மாணவர்களும் பயன்பெறும் வகையில் தமிழ்ப்புதல்வன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
அதேபோல், தகுதியுள்ள அனைவருக்கும் முதியோர் உதவித்தொகை வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இன்றைய முகாமில், பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் அனைத்தும் முறையாக பரிசீலிக்கப்பட்டு, தகுதியுள்ள அனைவருக்கும் அரசின் திட்டங்கள் கிடைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிட இந்த அரசு என்றென்றும் தயாராக உள்ளது, என மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு.இரா.சக்திவேல், துறை அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.

.

.